Dec 31, 2010

பரோட்டாவும் சில பயங்களும் (Fear)


நேற்று (31-12-2010) Asianet middleeast தொலைக்காட்சியில் நம்மள் தம்மிள் என்ற பொது விவாத மேடை நிகழ்ச்சி ஓலிபரப்பினார்கள், அதன் தலைப்பு இன்றைய உணவுப்பொருட்கள் பற்றியது, உணவுகளில் குவிந்து கிடக்கும் கலப்படங்களைப்பற்றிய ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்து முடித்தபோது தற்போது கடையில் விற்கும் எந்த உணவுப்பொருளையும் வாங்கி சாப்பிட முடியாதோ என்கிற பயம் வந்தது.

முக்கியமாக பரோட்டா, இது இன்று தமிழகத்திலும் கேரளத்திலும் மிக இன்றியமையாத ஒரு உணவுப்பொருளாகிவிட்டது. ஆனால் அதன் கெடுதல்கள் மிக அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஒரு இயற்கை உணவாளர் பல நாகரீக உணவு பொருட்களை விவாத மேடையில் கொண்டு வந்து காட்டி இவைகளை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பரோட்டா பற்றி மிக அவசியம் சொல்லவேண்டும் என்பதாலே இந்த பதிவு.

பரோட்டா செய்ய பயன்படும் மைதா கோதுமையின் பல வித நல்ல விஷயங்களை எடுத்தபின் அதில் உள்ள சக்கைதான் மைதாவாக மாறுகிறது, இதனால் உடலுக்கு எந்த உபயோகமும் இல்லை. இதன் வெள்ளை நிறத்தை ஏற்படுத்த ஒரு வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது அந்த வேதிப்பொருள்தான் மிக மோசமான விஷயம்.

சாதாரணமாக நம் வியாதிகளுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை விலங்கினக்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து பின்னர்தான் மனிதர்களுக்கு கொடுப்பார்கள், ஆனால் சர்க்கரை வியாதிக்கான மருந்தை அப்படி சோதிக்க முடியவில்லை, காரணம் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. ஆகையால் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு மருந்து கொடுத்து, பின்னர் சர்க்கரை நோய் வந்த பின் அதை தீர்க்க மருந்து கொடுத்து சோதிக்கிறார்கள்.அப்படி விலங்குகளுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு கொடுக்கப்படும் வேதிப்பொருள்தான், மைதாமாவை வெள்ளை நிறமாக மாற்ற பயன்படுகிறது, இப்போது யோசித்துப்பாருங்கள்,

மைதா வெள்ளைக்காரர்களால் பசை உபயோகத்திற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது இருந்த ஏழ்மை நம் மக்களை மைதா கஞ்சி அருந்த வைத்திருக்கலாம், பின்னர் அதுவே நமது சமையல் வல்லுனர்களால் பல உருவங்களை அடைந்து விட்டது,

பாரம்பரியமாக சர்க்கரை நோய் வரவாய்ப்பே இல்லாதவர்களுக்கு கூட இந்த பரோட்டா சர்க்கரை நோய் வரவைக்கும், நம்மில் எல்லா குடும்பத்தினரும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எத்தனைபேர் இல்லாதவர் எத்தனைபேர் என்று.கிட்டத்தட்ட 40 வயதைக்கடந்த எல்லோருக்கும் இருக்கும்.

அப்படியானால் நமக்கு எவ்வளவு முன்கருதல் வேண்டும், முடிந்தவரை மைதா இல்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிப்போம். அந்த நிகழ்ச்சியின் ஓலி ஓளி வடிவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதனை இங்கே இணைக்கிறேன், பல நல்ல தகவல்கள் இருக்கின்றன.

தவநெறிச்செல்வன்

Dec 30, 2010

பீஹார். (அரசியல் அல்ல)



பீஹார் மாநிலத்தைப்பற்றிய பல செய்திகள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது, அரசியல் ரீதியாகவும், வளர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டு போன ஒரு மாநிலமாக கடந்தகாலங்களில் இருந்து விட்டதால் இந்த நிலை என்று நினைக்கிறேன். பீஹாரைப்பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
பீகாரில் பல மொழிகள் பேசப்படுகின்றன,ஆனால் ஹிந்தி பொது மொழியாகவும் அரசு மொழியாகவும் இருக்கிறது. பீகாரில்தான் மகாபாரத கர்ணன் ஆண்ட அங்கதேசம் உள்ளது. அதன் பகுதிகளில் பேசப்படும் மொழி “அங்கிகா” என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தி எழுத்துக்களே உபயோகப்படுத்தினாலும் உச்சரிப்பு பேசும் முறையில் மாற்றம் உள்ள ஒரு மொழி. கர்ணன் தினமும் காலையில் தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்த இடம் இன்றும் கர்ணசோலா என்று இருக்கிறது. பிறகு தலைநகர் பாட்னா முன்பு வரலாற்றில் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இடம் சந்திரகுப்த மெளரியர் தொடங்கி மகா அசோகர், குப்த பேரரசு ஹர்ஷவர்தனர் போன்ற மகா அரசர்கள், ஏசு பிறப்பதற்கு முன்பே ஆண்ட மிகுந்த பெருமை உடைய நகரம் பாடலிபுத்திரம்(பாட்னா).

மிகுந்த செல்வ வளத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய பூமியாக இருந்தது, இந்த பாட்னா பகுதியில் பேசப்படும் மொழி “மகஹி” என்று அழைக்கப்படுகிறது, இது மகத நாட்டுப்பகுதியாகும், நாம் நன்கு அறிந்த பீகாரின் போஜ்பூரி மொழி பீகாரில் 5 மாவட்டங்களில் மட்டும்பேசப்படுகிறது. அதுவும் உத்திரபிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் மட்டும்தான். மகத நாட்டைப்பற்றி நாம் சிறு வயதில் படித்திருப்போம், நந்த வம்ச அரசர்கள் ஆண்ட பூமி, தனநந்தருக்கும் சாணக்கியருக்கும் ஏற்ப்பட்ட சண்டையால் சந்திரகுப்த மெளரியர் உருவாகி நந்த வம்சத்தை முழுமையாக அழிக்கிறார், இடையில் அலெக்ஸாண்டர் கூட பாடலிபுத்திரம் வந்து சென்று, செல்யூகஸ் நிகேடாரை தனது பிரதிநிதியாக நியமித்து, திரும்பி கிரேக்கம் செல்லும் வழியில் பாபிலோனில்( ஈராக்) இறந்து போக, மெளரிய சந்திரகுப்தர் இங்கிருந்த கிரேக்கப்படைகளை விரட்டி அடித்து, முழுமையான மெளரிய பேரரசை நிறுவுகிறார். மெளரிய பேரரசு அசோகர் காலத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறியது, அந்த அளவுக்கு இந்தியாவை அதன் பிறகு ஆண்டவர்கள் ஒளரங்கசீபூம் ஆங்கிலேயர்களும்தான்.



வடபீகாரில் மைதிலி என்ற ஒரு மொழி பேசப்படுகிறது, இந்த மொழியில் வித்யாபதி என்ற கவிஞர் இறைப்பாடல்கள் பலவற்றை சிவன் மீது பாடி இருக்கிறார், இவரின் பாடல்கள் இன்றும் பீஹாரின் பொக்கிஷமாக கருத்தப்படுகிறது. இவர் வாழ்க்கை ஒரு சுவையான கதையாக சொல்லப்படுகிறது. இவர் வீட்டில் ஒரு வேலைக்காரன் உதவிக்கு இருந்ததாகவும், இவரின் மனைவி அந்த வேலைக்காரனை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், ஒருநாள் எங்குமே தண்ணீர் இல்லாத போது கவிஞரின் மனைவி மிகவும் கோபம் கொண்டு அவனை கங்கைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரப்பணித்ததாகவும், அப்போது அந்த வேலைக்காரன் சாதாரணமாக வீட்டிற்கு வெளிப்புறத்தில் உள்ள தரையில் பானையை தண்ணீர் எடுப்பதுபோல் கவிழ்த்து எடுக்க அதில் தண்ணீர் நிரம்பி இருந்ததாகவும் அதனை கண்ட கவிஞர் வித்யாபதி தன் மனைவியிடம் இவன் சாதாரண ஆள் இல்லை சிவபெருமானே இங்கு வந்து இருக்கிறான் என்று தன் மனைவிக்கு உணர்ந்தியதாகவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில் அந்த வேலைக்காரன் மறைந்து போய்விட, வித்யாபதி அவனைத்தேடி குடும்பம் விட்டு வெளியே வந்து, ஒரு சந்நியாசி போல வாழ்ந்து வந்ததாகவும். அந்த பித்தநிலையில் அவர் பாடியபாடல்கள் “மைதிலி” மற்றும் “பெங்காலி” மொழியில் அற்புதமான கவிதைகள் என்பதும் அறியமுடிகிறது.அந்த வேலைகாரன் பெயர் கூப்னா என்று கூறப்படுகிறது.
இதில் முழுமையான கதை யாரவது அறிந்திருந்தால் அதை தெரிவிக்கவும். இது என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல்.


நாலந்தா பல்கலைக்கழகம்

இன்னும் நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி நாம் படித்திருப்போம், அதனை உருவாக்கியவர்கள் மெளரியர்களும் குப்த மன்னர்களும்தான், புத்தர் நாலந்தாவில் தங்கி பல சேவைகளை செய்த பகுதியாக இருந்ததால் அங்கு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, பின்னர் மொகலாய ஆட்சிகாலத்தில் அது முழுமையாக எரிக்கப்பட்டது, இந்த பல்கலைக்கழகத்தில் பல தேசத்து மாணவர்களும், இலக்கியங்களும் இடம்பெற்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது, உலகின் முதல் பல்கலைக்கழகம் இதுதான் என்று நினைக்கிறேன்,
சீன யாத்திரீகர் யுவான்சுவாங் போன்றவர்கள் வந்து பார்த்து இதைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், பீகாரில் புத்த கயா இருப்பது எல்லோரும் அறிந்ததே, நாலந்தாவின் காலம் கிமு 427- கிபி 1197 வரை.


“விக்ரம் சீலா”

இதே நேரத்தில் “விக்ரம் சீலா” என்ற இன்னொரு பல்கலைக்கழகமும் இதே பகுதியில் உருவாக்கப்பட்டது. இரண்டு புத்தமத அடிப்படைகளை கொண்ட பல்கலைக்கழகங்கள் என்றாலும் உலகின் பல தத்துவங்கள் அங்கே பாதுகாக்கப்பட்டன, அங்கிருந்த நூலகம் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது. தர்மபாலர் என்ற அரசரால் உருவாக்கப்பட்டு கிபி 783ல் உருவாகி பின்னர் அழிக்கப்படு இப்போது சிதிலங்களாக இருக்கிறது. அதன் புகைப்படங்களை கொடுத்துள்ளேன்.
பீகாரைப்பற்றி பேசும் போது மன்னர் ஷெர்ஷா சூரி பற்றி பேசாமல் இருக்கமுடியாது, இவரின் நிர்வாகத்திறைமை பற்றி பல ஆச்சர்யமான தகவல்கள் உண்டு, மொகலாய இரண்டாம் அரசர் ஹிமாயுனை ஓடஓட விரட்டி அடித்து சில ஆண்டுகளே ஆண்டாலும் ஒரு அற்புதமான நிர்வாகத்தை ஏற்படுத்திய இந்த ஆப்கானிய வீரர் வாழ்ந்ததும் இங்குதான், இவரின் அடியொற்றிய நிர்வாகத்தால்தான் அக்பர் மகா அக்பர் என்று மொகலாய வரலாற்றில் பேசப்படுகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தில் அற்புதமாக விளக்கபட்டுள்ளது.
சீக்கியகுரு குருகோவிந்த் சிங் பிறந்ததும் பீகாரில்தான் அவரின் அடக்கஸ்தலம் இன்றும் பீகாரில் மிகவும் முக்கிய சரித்திர சான்றாக இருக்கிறது.
இப்படி பீகாரைப்பற்றி பல அற்புத வரலாறு குவிந்து கிடக்கிறது, கிருஸ்த்து பிறப்பதற்கு முன்னரே மிகவும் மேன்மையான பகுதியாக திகழ்ந்த இந்த பகுதி இன்று இந்தியாவின் பின் தங்கியபகுதியாக மாறிக்கிடப்பதற்கு காரணம் அதனில் உண்டான ஜாதி மத ஏற்ற தாழ்வுதான் என்று படித்த பீகாரிகள் நினைக்கிறார்கள். இதனை மீண்டும் மேல்நோக்கி கொண்டு செல்லும் பணியில் இன்றைய பீகாரின் முதல்வர் திரு நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்.

தவநெறிச்செல்வன்

Dec 23, 2010

நந்தலாலா


இந்த படத்தைப்பற்றி பல பதிவர்கள் எழுத்தாளர்கள் எழுதி தள்ளிவிட்டார்கள், நான் இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு தோன்றியதை எழுதிவிட தோன்றுகிறது, இதில் பல காட்சிகள் ஆழமான உணர்வுக்கு இழுத்துச்செல்கின்றன, இளையராஜாவின் இசை சிலரால் விமர்சிக்கவும் பலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. கடைசியில் பாஸ்கர்மணி தனது தாயை சந்திக்கும் இடத்தில் இளையராஜவின் குரலில் ஒருபாடல் துவங்குகிறது (தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்) இந்த பாடல் இந்த இடத்துக்கு பொருத்தமானதா? கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அழகான தாயிடம் சந்தோஷமாக ஒரு குழந்தை விளையாடும் காட்சியை கற்பனை செய்துகொண்டு இந்த பாட்டைக்கேட்டால் அப்படியே பொருந்துகிறது. பின்னர் ஏன் இந்த பாடல் இந்த காட்சியில் சேர்க்கப்பட்டது என்று புரியவில்லை.

“சேது” படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது, கேமரா, சேது சேர்க்கப்படப்போகும் மனநலம் குன்றியவர்களின் விடுதி ஒன்றினை காண்பிக்க தொடங்கும்போது, அப்போது ஒரு பின்னனி இசை வரும், அப்படியே நமது அடிவயிறு குலுங்கும், இதை உண்டாக்கியதும் இளையராஜாதான், “நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைப்பாத்திரம் பாடல் கூட ஒரு சுகமான சூழலுக்கு பொருந்தும் பாடல்தான். அங்கேயும் இந்த பொருந்தாமை இருந்ததாக உணர்ந்தேன், சாரு எழுதியதும் கூட இதனால்தான் என்று தோன்றுகிறது.
சாரு கூறியிருக்கும் கிம்டுகிக்கின் spring summer fall winter படத்தில் கல்லை கட்டிக்கொண்டு மலைமேல் ஏறும் காட்சியில் வரும் இசையைக்கேட்டேன், அதன் உணர்வுகள் மிகவும் அபூர்வமாக இருந்தது, அந்தப்படத்தின் முழு இசையும் அப்படித்தான் இருக்கிறது.

அந்த இசை
மேலே உள்ள தொடர்பில் அந்த இசை இருக்கிறது. கேட்டுப்பாருங்கள்.

சினிமா பார்ப்பதில் ஒரு அற்புதமான உணர்வு விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். அம்மா மற்றும் பல துயரகாட்சிகளுக்கு இளையராஜா அவர்களின் குரலில் உண்டான பாடல்களைக்கேட்டு அதையே சோக உணர்வாக உணரக்கூடிய நிலைக்கு நாம் போனதால் அதையே எல்லா இயக்குனர்களும் கேட்டு அவரை அங்கே பாடவைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நேற்று Asianet தொலைக்காட்சியில் idea star singer season -5 ல் அதன் நடுவர் சரத் அவர்கள் ஒரு விஷயம் சொல்கிறார் தமிழில் வந்த “சிறைச்சாலை” (மோகன்லால், தபு நடித்தது) படத்தில் வரும் “செம்பூவே” பாடல் பற்றி கூறும்போது இளையாராஜா என்ற மனிதர் உலகில் இசையை ரசிக்கும் எல்லோருக்கும் ஒரு அனுக்கிரகம் என்று. அனுக்கிரகம் என்றால் மலையாளத்தில் ஆசிர்வாதம் என்று பொருள்.இப்படி ஒரு அற்புதமான ஒரு சாதனை அல்லது சகாப்தம் என்று கூறும் அளவுக்கு சிறந்த இளையராஜா அவர்கள் நிச்சயமாக இதை தன்விருப்பத்திற்கு செய்திருக்கமாட்டாரோ என்று தோன்றுகிறது.

இந்தப்படத்தில் கதாநாயகி தன் கதையை விவரிக்கும் இடத்தில் உள்ள வசனம் மிக நேர்த்தியானதாக எனக்கு தோன்றியது “ புது சரக்குன்னு புது சரக்குன்னு மூனுநாள்ல என்ன முப்பத்தாறுபேறு மோந்து பார்த்தாங்க அதுக்கப்புறம் நான் எண்ணல” மிகுந்த வலியை ஏற்படுத்தியது. படம் முழுக்க நமது மனதை ஆழமாக பாதிக்கும் ஒரு அற்புதமான உணர்வை பெறவைக்கிறது படம், எல்லோரும் பல முறை பார்க்கவேண்டிய படம். மனம் பலவாறு பண்படும்.

தமிழ் சினிமா இப்படி எங்கோ பத்திரமாக இருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும். மிஷ்கின் ஒரு அற்புதமான கலை படைப்பை தந்திருக்கிறார், அவரைப்பற்றிய விமர்சனங்களை எல்லாம் இந்த ஒரு படத்திற்காக பொருத்துகொள்ளலாம் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.

தவநெறிச்செல்வன்

Dec 7, 2010

கேரள பயணம்-1

கேரளத்தின் அழகினை காண ஒரு நீண்டகால ஆசை இருந்தது. திடீரென்று ஒருநாள் மைசூர் வழி கேரளா புறப்பட்டோம் குடும்ப சகிதம். அம்மாவுக்கு புதிய இடங்களை காண்பிக்க வேண்டிய ஆவல் இருந்தது.

கேரளத்தின் மீது ஒரு அளவில்லாத காதல் எனக்குள் உண்டாகி இருந்தது, கடவுளின் சொந்த பூமி என்கிற கேரள சுற்றுலா மையத்தின் வாசகம் என்னை அந்த ஊரின் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது, நான் தற்போது கண்டுகொண்டிருக்கும் எல்லா சினிமாக்களும் மலையாளப்படங்கள்தான், தமிழ்ப்படங்கள் ஒரு சராசரி மலையாளப்படத்தை எட்டிப்பிடிக்க வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது, ஒரு அழகான கதையை எடுத்துக்கொண்டு அதில் எந்த ஜோடனையும் சேர்க்காமல், அந்த கதை களத்தில் எந்த ஒரு நெருடலும் சடாரென்ற காட்சிதாவலும் இல்லாத எத்தனையோ சினிமாக்கள். மிக அழகான ஒரு நகைச்சுவையை கொண்டிருக்கின்றன.

பல தமிழ்படங்கள் மலையாளப்படங்களின் தழுவல் அல்லது மறு உருவாக்கம் என்பது எனக்கு மலையாளத்திரை உலகில் நுழைந்த பின் தான் புரிந்தது.

திண்டுக்கல் சாரதி என்கிற புதிய தமிழ்படம், ஒருகாலத்தில் வடக்கு நோக்கி இயந்திரம் என்று மலையாளத்தில் வந்த படம்தான், அது எடுக்கப்பட்ட விதமும், தமிழில் எடுக்கப்பட்ட விதமும் மிகுந்த வேறுபாடுகொண்டது. தமிழில் வந்த வெள்ளித்திரைப் படம் மலையாளத்தில் உதயபானுதாரா என்ற பெயரில் வந்ததுதான்.

சரி இது சினிமா கட்டுரையாகி விடப்போகிறது. நான் மைசூரில் மிருக காட்சிசாலைக்கு முதலில் சென்றோம், நல்ல அழகான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது, பல மிருகங்கள் நல்ல செழுமையோடு இருக்கின்றன, மிகவும் கவர்ந்தது ஓட்டகச்சிவிங்கியும் வெள்ளைப்புலியும்தான், பலவகை கிளிகள் ஒரு அற்புதம்தான்.

அதன்பின் மாலை 5 மணிவாக்கில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா கண்ணூருக்கு புறப்பட்டோம் பலரிடம் வழி கேட்டு எனது ஓட்டுனர் ஒரு நல்ல வழியைப்பிடித்தார்.
மைசூரில் இருந்து கண்ணூர் செல்லும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை பகல் நேரத்தில் மழை இல்லாத காலத்தில் செல்லவும் பார்க்க நல்ல அழகிய பாதை, ஒரு நீண்ட மலைப்பாதை.

சுமார் 250 கிமீ தூரத்தை நாங்கள் 8 மணிநேரம் செலவழித்து கடக்க வேண்டி இருந்து, கடுமையான மலைப்பாதை மைசூரில் இருந்து விராஜ் பேட்டை என்ற ஊருக்கு செல்லவேண்டும், கிட்டத்தட்ட ஒரு காட்டுக்குள் செல்கிற வழிதான் அந்த வழியை பிடிக்கும் போது இரவு 7 மணிக்குமேல் ஆகிவிட்டிருந்தது. சிறிய ஒருவழிச்சாலை, அடர்ந்த காட்டு வழி எதிரில் வருகின்ற வாகனங்களைத்தவிர வேறு ஓன்றும் கிடையாது, சாலை வேறு மிகமிக மோசம், வழிகேட்க கூட வசதியில்லை, ஆனால் இயற்கை அங்கே பத்திரமாயிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட இடங்களே கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு காங்ரீட் காடுகளாக மாறிவிட்டன, இயற்கை நமக்கும் காடுகளை கொடுத்திருக்ககூடும் அவ்வளவையும் அழித்து விட்டிருக்கிறோம் என்று நினைத்தால் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.

இடையில் இரு வன சோதனைச்சாவடி வந்தது, மற்றபடி மனித நடமாட்டம் இல்லாத பகுதிபோல்தான் காணப்பட்டது, இந்த விராஜ்பேட்டை இருப்பது கர்நாடகத்தில்தான், சரோஜா சினிமாவில் வருகின்ற ஒரு ஊரைப்போல பல ஊர்கள் வந்து போனது, ஆள் நடமாட்டம் இல்லை, கடுமை இல்லாத மெல்லிய பனிப்பொழிவு, மெல்ல மெல்ல எங்களது வாகனம் மேல் நோக்கி சென்றுதான் விராஜ்பேட்டையை அடைய வேண்டி இருக்கிறது, அது கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் இருக்கின்ற ஊர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் போகும் வழியில் நாங்கள் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை சாலை சாதாரணமாகத்தான் இருந்தது.

எல்லோருக்கும் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்தது அத்தனை பீதியான பாதையாகத்தான் அது இருந்து. ஒருவேளை பகலில் சென்றிருந்தால் நல்ல கண்ணுக்கு விருந்தான காட்சிகள் கிடைத்திருக்கும். விராஜ் பேட்டையில் இருந்து கேரளா செல்ல வேண்டிய வழியில் திரும்பும் முன் அங்கே வழிகேட்டால் அவர்கள் வழியும் சொல்லி சுமார் 90 கிமீ போகவேண்டும் என்று சொன்னார்கள். மிக மோசமான காலநிலையும் சாலை வளைவுகளும், கொண்டை ஊசி வளைவுகளும் எங்களுக்காக காத்திருந்தன

Nov 24, 2010

Nov 17, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரமும் இந்திய குடிமகனும்

இன்றைக்கு பாராளுமன்றத்தை உலுக்கிகொண்டிருக்கும் அலைவரிசை ஊழல் பற்றி, ஒரு பதிவு போட்டாகவேண்டிய நிலையில் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இருக்கும் நிலையில், நானும் ஒரு பதிவு போட முடிவெடுத்தேன். காலதாமதமான பதிவுதான்.

2G அலைவரிசைகளை 3G அலைவரிசைகள் போல் ஏலம் போடாமல், முதலில் வந்து கேட்பவர்களுக்கு கொடுக்கலாம், என்ற 1999 வருட தொலைப்பேசி கொள்கையின்படி திரு.ராஜா அவர்களின் துறை விற்றுவிட்டது என்பதுதான் பிரச்சினை.

2G என்பது இரண்டாவது ஜெனரேஷன். 3G என்பது 3 வது ஜெனரேஷன்., அதனை எளிதாக எனக்கு புரிந்தமாதிரி சொல்கிறேன். சென்னையில் இருந்து மும்பை செல்ல மூன்று சாலைகள் இருப்பதாக கொள்வோம். அதில் முதல் சாலை 1G, இரண்டாம் சாலை 2G, மூன்றாம் சாலை 3G. முதல் சாலை சிரிய சாலை வேகமாகவும் போகமுடியாது எல்லா வகை வாகனங்களும் போகமுடியாது, இரண்டாவது சாலை கொஞ்சம் வேகமாக போகலாம், கூடவே இன்னும் கொஞ்சம் கனரக வாகனங்களும் போகலாம், மூன்றாவது சாலை மிகவும் அகலமானது எல்லாவகை, தற்போதைய வாகனங்களும் போகலாம். நிறைய வேகம் போகலாம், டிராபிக் ஜாம் போன்றவை ஏற்பட மிகவாய்ப்பு குறைவு.

இன்னும் கொஞ்சநாள் கழித்து 4Gயும் வரக்கூடும். இப்படி சாலைகள் இருப்பது போல் இது 2Gயும் 3Gயும் தொலைபேசி அலைகளின் அகலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரிக்கிறார்கள், 2G என்பதில் உங்களின் தொலைபேசி தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் அளவிலும்தான் செல்லும், அதுவே 3Gயில் இன்னும் கூடுதலான வேகத்திலும் MMs போன்ற செய்திகளை பரிமாறும்போது இன்னும் கூடுதலான வசதியோடு செல்வதால் டிராபிக் ஜாம், செய்தி இழப்பு போன்றவைகள் இல்லாமல் இருக்கும், வலைத்தொடர்புக்கு மிகவும் உதவிகரமானது.

2G அலைகள் ஒரு குறிப்பிட்ட MHZ வரைதான். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 3G அலைகள். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 4G. இப்படி போய்க்கொண்டே இருக்கும், அது போகட்டும் இதில் பிரச்சினை எங்கே உள்ளது என்று பார்க்கலாம்,

இப்போது 3G அலைவரிசைகளை இந்தியா முழுக்க உபயோகம் செய்ய, தொலைபேசி தொடர்புகளை கொடுக்க பல நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, அவை ஏலத்தில் விடப்பட்டதில் ஏலத்தொகை கடுமையாக ஏறி நல்ல வருமானம் இந்திய அரசுக்கு, அதைப்பார்த்த மத்திய தணிக்கை குழு ( இந்தகுழு எல்லா அரசு அமைப்புகளையும் கண்காணித்து அவர்கள் லாபகரமாக செயல்படுகிறார்களா என்று பார்த்து சொல்லும் ஒரு கண்காணிப்பு அமைப்பு) 2G யையும் இதுபோல் ஏலம் விட்டிருந்தால் நல்ல காசுகிடைத்திருக்குமே, ஏன் அப்படி செய்யவில்லை, என்று கேட்டு, ஏலம் விட்டிருந்தால் கூடுதலாக 1,75000 கோடி (சுமாராக) கிடைத்திருக்கலாம், என்று ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறது.

புரியும்படி சொன்னால் தேசிய சாலைகளில் டோல்கேட் போட்டு நமது காருக்கு பணம் வசூலிக்கிறார்கள் இல்லையா, அது ஏலம் முறையில் விற்கப்பட்டு, எவர் அதிக ஏலம் எடுக்கிறாரோ அவருக்கு கொடுக்கப்படும், அந்த ஏலத்தொகையைப் பொருத்து அவர் ஒரு காருக்கு இத்தனை ரூபாய் என்று கேட்பார், ஆகவே ஏலத்தொகை அதிகமானால் கடைசியில் பாதிக்ப்போவது நாம்தான்.

அதுபோல் இந்த 3G அலைவரிசைகளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஏலம் விட்டதில், அவர்கள் அதிகவிலை கொடுத்து எடுத்தார்கள், நல்ல விலை. ஆனால் இது சராசரி மனிதனின் தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்கும் அல்லவா, ஆகையால் 1999ல் ஏற்பட்ட தொலைபேசிக்கொள்கை குறைந்த விலைக்கு இதை ஒரு நிறுவனத்திற்கு விற்று, அவர்கள் குறைந்த விலையில் சாதாரணமக்களுக்கு இதை கொடுக்கவேண்டும், என்று உத்திரவாதம் பெற்று, சாதாரண மக்களுக்கும் தொலைபேசி கிடைக்கும் அதனால் ஏலம் விடவேண்டாம் என்று முடிவு செய்தது அரசு.

அந்த அடிப்படையில்தான் திரு, ராஜா அதை ஏலம் விடாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தவறு எங்கே இருக்கலாம் என்று பார்த்தால்.

1.1999 தொலைபேசிக்கொள்கையின் மற்ற சரத்துக்கள் பின்பற்றாமல் போனதில்.

2.குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மிகமிக அதிக விலையில் அதனை விற்று விட்டதால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போகும்.

3.அறிவிக்கப்பட்ட விற்பனை கடைசி நாளுக்கு ஒருநாள் முன்பே விற்பனை முடிந்து விட்டதாக அறிவித்துவிட்டது.

4.தகுதியான நிறுவனங்களுக்குதான் அவைகள் விற்கப்பட்டனவா.

இந்த விவகாரத்தை யாரோ பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட் கொண்டுபோக பிரச்சினை பெரிதாகி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

இதன் விளைவுகள் தமிழக அரசியலில் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

1. இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் வரும் சட்டசபைத்தேர்தலில் கூடுதல் இடம் தமிழக தேர்தலில் திமுகவிடம் பேரம் பேசலாம்.
2. அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கையிலெடுக்கும், அல்லது காங்கிரஸை தனது கூட்டணிக்குள் கொண்டுவர முயலும்.
3. பிஜேபியும் மற்ற எதிர்கட்டசிகளும் தங்கள் கட்சியின் செயல்பாடுகளை இன்னும் கொஞ்ச நாளைக்கு உற்சாகமாக்க உதவும்.
4. பத்திரிக்கைகளுக்கு சில மாதங்களுக்கு வருமானம் கூடும்.
5. நம்மூர் டீ கடை விவாதக்காரர்களுக்கு இன்னும் ஒரு விஷயம் விவாதிப்பதற்கு
6. பார்லிமெண்ட் செயல்பாடுகள் சிறிதுநாளைக்கு முடங்கும்.
7. அடுத்த விவகாரம் வரும் வரை இந்திய குடிமகன் நினைவுகளில் இருக்கும்.

அவ்வளவுதான். மற்றபடி பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.

தவநெறிச்செல்வன்.

Nov 1, 2010

தமிழக தேர்தல்-2011ம் காங்கிரஸ் கட்சியும்


தமிழக தேர்தல் 2011 தொடங்க இன்னும் சுமார் 150 நாட்களே உள்ள நிலையில் பலவாறு கணிப்புகள் காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அவைகளில் கூர்ந்து நோக்கும் போது ஏற்படும் எண்ணங்களே இக்கட்டுரை.

ஒரு புதிய சிந்தனையாகவும் இதைக்கொள்ளலாம், அகில இந்திய காங்கிரஸ் தனது திருச்சி கூட்டத்தில் சோனியா காந்தியை கலந்து கொள்ளவைத்து ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கிறது, அந்த செய்தி தமிழக மக்களுக்கும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கும்தான். இது நடந்து ஒரிரு தினங்களில் முதல்வரின் அறிக்கை வருகிறது கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என்று நினைப்பது சரியல்ல என்ற ரீதியில். பலருக்கு இந்த அறிக்கையின் நோக்கம் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களுக்குத்தான் முதல்வர் கூறி இருக்கிறார் என்று தோன்றலாம், அதன்பிறகு மற்றொரு அறிக்கை, தன்னையும் நேரு குடும்பத்தினரையும் பிரிக்க ஒரு முயற்சி நடப்பதாக. இப்படி வந்த அறிக்கைகளை மனதில் கொண்டு யோசித்தால் அதன் உள்ளர்த்தம் புரியும்.

இன்றைய நிலையில் திமுக கொண்டுள்ள தேர்தல் நடைமுறைகளும், காங்கிரஸும் சேர்ந்தால் சுலபமாக ஒரு வெற்றியை அவர்கள் பெறக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. திமுக இடைத்தேர்தல்களில் கையாண்ட யுக்திகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சக்தியோடு காங்கிரசின் பலமும் சேரும்போது வெற்றி சுலபம் என்பது ஒரு கணக்கு. ஆனால் 234 தொகுதிகளிலும் அதே முனைப்போடு செயல்படுவது என்பது ஒரு ஆகாத காரியம் என்பதால்தான் திமுக தலைமை பாமக வை தங்களோடு சேர்த்து ஒரு பாதுகாப்பான நிலையை அடைய யோசிக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியலாம், இதில் என்னதான் பாமக இணைந்தாலும், அதன் தொகுதிகளில் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிவரலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் மந்திரிசபையில் சேர முயற்சித்த வாய்ப்புகளை எல்லாம் திமுக தலைவர் தட்டிபறித்து விட்ட கோபம் அல்லது வருத்தம் நிச்சயம் இருக்கும். கூடவே இன்று ராகுல் காந்தி அவர்கள் ஒரு எழுச்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் மாற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இதில் முக்கிய பங்கு வகிக்க போவது பீகார் மாநிலத்தில் இப்போது நடந்து வரும் தேர்தல். அந்த மாநிலத்தில் திரு. நிதிஷ்குமார் தலைமையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கடந்து 5 வருடத்தில் செய்துள்ள மாற்றம் அவருக்கு ஒரு நல்ல முடிவைத்தரும் என்று தோன்றுகிறது, அங்கு காங்கிரஸ் தனது முன்னாள் சகாக்களான லாலு மற்று பஸ்வான் போன்றவர்களை நம்பாமல் தனியே எல்லா தொகுதிகளிலும் தனிப்பெரும் கட்சியாக களத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்ற மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் லாலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக நின்ற காங்கிரஸ் யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு நல்ல வெற்றியை பெற்று கணிசமான இடங்களை அள்ளியது. உத்திரபிரதேசத்திலும் அதுதான் நடந்தது ஆகையால் ராகுலின் பயணம் இந்த தேர்தலிலும் அதே மாதிரியான ஒரு சோதனையாக அமைந்ததுள்ளது. அது நல்ல பலனைத்தரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் இறுதியில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதன் வெற்றி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அதே பார்முலாவை காங்கிரஸ் தொடர ராகுல் நினைக்கலாம், மதுரையில் கக்கன் நினைவு விழாவிலும் திருச்சியில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்திலும் சரி காங்கிரஸ் தனது விஸ்வரூபத்தை காட்டி இருக்கிறது.

வியஜகாந்த் தலமையிலான தேமுதிக காங்கிரஸ் தனியாக வரும் நிலையில் இயல்பாகவே மிக பொருத்தமான ஒரு கூட்டணியை உருவாக்க தயாராகும். ராகுல் ஈடுபாடு அதிகமாகி இந்த தேர்தலில் தமிழகத்தில் தங்கி செயல்பட நேர்ந்தால் அது திமுக அதிமுக இருவருக்கும் என்னதான் கூட்டணிகள் இருந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிமுக தனது பலத்தை கடந்த சில ஆர்ப்பாட்டங்களில் மிக பெரிய அளவில் காட்டியுள்ளது, திமுக என்னதான் இலவச திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வந்தாலும், மது விற்பனையில் அவர்கள் காட்டி வரும் உற்சாகம் பலரின் மனவேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது, அடுத்து விலைவாசி ஏற்றம், அது மக்களை ஒரு தாங்கமுடியாத மனநிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
கூடவே இன்றுள்ள சட்ட ஒழுங்கு. குடும்ப அரசியல்,இலங்கை பிரச்சினை இப்படி பல விஷயங்கள் திமுக அரசின் எதிர்மறை ஓட்டாக மாறக்கூடிய சூழல், இவைகளை எல்லாம் ஓட்டாக மாற்றும் சக்தி அதிமுக கூடாரத்தில் அதிகரிப்பதாகவே இப்போது கூடிய கூட்டம் தெரிவிக்கிறது.

இதில் காங்கிரசின் தனித்த தேர்தல் முயற்சி மிக முக்கிய கட்டத்தை தமிழக அரசியலில் கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றுகிறது. காங்கிரஸ் முயன்று நின்றால் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரலாம் என்பது பல நல்ல காங்கிரஸாரின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் காங்கிரஸில் முன்னிறுத்த ஒரு வலுவான மாநிலத்தலைவர் இல்லாமை ஒரு குறைதான், ப.சிதம்பரம் ஜீ.கே வாசன், ஈ.வி,கே.ஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றவர்கள் இருந்தாலும் சிதம்பரம் தவிர மற்றவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக அறியப்படவில்லை என்பதும் முக்கியம், ஆனால் தமிழக காங்கிரசில் திரு, வாசனுக்கு அதிக தொண்டர்பலம் உள்ளது ஓப்புக்கொள்ளப்படவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஆகையால் இந்த இருவரில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம், எனக்கென்னவோ பீகார் தேர்தல் ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொடுக்க கூடும் என்று தோன்றுகிறது.

விரைவில் போன மக்களைவைத்தேர்தல் போல ஒரு தேர்தலுக்கான முழு தொகுதி வாய்ப்புகளையும் ஒரு பதிவாக விரைவில் போட முயல்கிறேன்.

தவநெறிச்செல்வன்

Oct 14, 2010

மிக முக்கியமான பதிவு இது

(நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார் இந்த தகவல்களை,
எந்த வலைபூவில் இருந்து எடுத்தார் என்று தெரியவில்லை, ஆகையால் கீழ்கண்ட தகவல் பெறப்பட்ட ஒன்றுதான்)

மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும்
நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின்
பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம்
இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய
அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்
இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே
இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

May 29, 2010

இன்னும் ஒரு உளறல்

மாவோஸ்ட் பிரச்சினைகள் இப்போது நமக்கு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது, அதன் பின்னனியில் உள்ள காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், உள்துறை அமைச்சர் தனது செயல்பாடுகளில் தானே திருப்தி இல்லாததுபோல் பேசுகிறார் அதை நிதி அமைச்சர் வேறு குறை கூறுகிறார் ஆனால் மக்கள் என்னவோ செத்துக்கொண்டிருக்கிறார்கள்,

ஓட்டு அரசியல் அப்படி ஒரு நிலை ஏற்படுத்தி விட்டிருக்கிறது, மதமும் ஜாதிகளும், குழுக்களும் வர்க்கங்களும் இப்போதைய அரசியல் நிர்ணயத்தை உண்டாக்கும் காரணிகளாக இருக்கிறார்கள், சுதந்திரம் வந்தபின் இந்திய அரசியல் இப்படி ஒரு நிலையில்தான் பயணிக்கும் என்று தெரிந்துதானோ என்னவோ ஜின்னா தனியாக போக ஆசைப்பட்டார் என்று தோன்றுகிறது,

ஒருவிதமாக குழப்பமான அரசியல் முறையை நோக்கி இன்று இந்திய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது, ஆகையால் குழப்பமில்லாத கொள்கை உடைய கட்சிகள் மிகவும் திணறுகின்றன என்றே தோன்றுகிறது, உதாரணம் கம்னியூஸ்ட் கட்சி. அவர்கள் எடுத்த நிலைபாடுகள் இன்றைய இந்த சந்தர்ப்பவாத குழப்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால் இப்படி ஒரு சரிவை சந்திக்கிறார்கள்.

எனக்கென்னவோ எதிர்கால சாணக்கியத்தனம் அல்லது ராஜதந்திரம் என்பது சந்தர்ப்பவாதம்தான் என்று ஒரு அங்கீகாரத்தோடு நிறுவப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.

உலக சிந்தனா சமூகத்தின் பார்வையின் வெளிப்பாடு கொண்டிருக்கும் பல புதிய யுக்திகளில் அதுவும் சேர்ந்துவிடும் என்று தோன்றுகிறது, மக்களும் அந்த சந்தர்ப்பவாத குட்டையில் அகப்படுவதுவரை லாபம் என்கிற ஒரு தாந்தோன்றி மனநிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒருவகை மேற்கு சித்தாந்தம், ஆனால் மேற்கில் கீரிஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி விரைவில் விழித்துக்கொள்ளாமல் போனால் மேற்கை நடுத்தெருவில் விடுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது, ஸ்பெயின் இரண்டாவது விக்கட்டாக விழப்போகிறது என்றே தோன்றுகிறது.

இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் சோசலிசமா அல்லது கம்னியூசமா அல்லது பாஸிசமா அல்லது எல்லாம் கலந்த ஒரு கலவையா என்று தெரியவில்லை, நானும் ஒரு கம்னீயூஸ்ட்தான் என்று முதல்வர் கருணாநிதி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, ஒரு காலத்தில் ஆதிசங்கரர் இந்து மதத்தை காப்பாற்ற மற்ற மதங்களில் இருந்த நல்ல கருத்தை எல்லாம் இந்து மதத்தில் கொண்டு வந்து சேர்த்தார் என்று சொல்வார்கள் அதுபோல் எல்லா கட்சிகளின் கொள்கைகளை எல்லாம் எல்லாரும் பங்கு போட்டத்தில் ஒரு தனிப்பட்ட அடையாளம் இல்லாத ஒரு குழம்பிய அமைப்பில் கட்சிகள் காணப்படுவது ஒரு சோகம்தான்,

தமிழகத்தின் அரசியல் களம் ஒரு சிங்கிள்மேன் ஷோவாக ஆகிப்போய்விட்டது, அதன் காரணம் முதல்வர்தான், எதிர்கட்சிகள் எல்லாம் தொடர் தோல்விகளுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை, அதிமுக தனது கட்சிகளின் களையெடுப்பு பணிகளில் தீவிரமாக இருப்பதுபோல் தெரிகிறது, யாரோடும் இணையமுடியாத நிலையில் அவர்களின் எதிர்காலம் மிக மோசமான நிலையில் இருப்பதாக தோன்றுகிறது,

நம்மைப்போன்ற ஒரு சராசரிகள் வேடிக்கை பார்க்க பழகிவிட்டார்கள், ஓட்டுக்கு என்ன விலை என்று இனிமேல் பேரம் பேசுவது வாடிக்கையாகிடும், விதியின் கையில் நம்மை விட்டு விட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்

மலேசியாவில் எம்.ஆர். ராதா பேசியதுதான் நினைவுக்கு வருகிறது, “கடவுளே வந்து ஆட்சி செய்தாலும் நீ உழைத்துதான் வாழவேண்டும்”.

கனவுகாணும் வாழ்க்கையாவும் என்ற பாடலில் ஒரு வரி வரும் இறுதியாக “ கடமை ஒழுங்காய் செய்வதுதானே ஆனந்தம்” இதெல்லாம்தான் இதன் தீர்வு.

தவநெறிச்செல்வன்

Apr 17, 2010

கிரகங்களும் திசைகளும்

திசைகள் அதிபதி கிரகம் குணம்

கிழக்கு இந்திரன் சூரியன் வெற்றி, அறிவு

தென்கிழக்கு அக்னி சுக்கிரன் ஆசை

மேற்கு வருணன் சனி சோகம், அடக்கம்

தென்மேற்கு நைருத்தி ராகு சக்தி, அதிகாரம், ஈகோ

வடக்கு குபேரன் புதன் அறிவு, வியாபாரம்

வடகிழக்கு ஈசானியன் குரு அறிவு, ஆக்கம், நற்சிந்தனை

தெற்கு யமன் செவ்வாய் துணிவு, வலிமை

வடமேற்கு வாயு சந்திரன் கற்பனை, காதல், மாறும் மனம்

Apr 10, 2010

கானல்நீர் (மீண்டும்)

இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.

கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?

மனைவி:: ம் சொல்லுங்க,

கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.

மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.

கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்

மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.

கணவர்:!!!!!!!?????????

இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.

இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,

இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம்,

அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.

இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.

எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.

தவநெறிச்செல்வன்

Apr 8, 2010

நீங்களும் படிக்கலாம்

.முத்துலிங்கம் கதைகள் என்ற அவரின் கதை தொகுப்பை படிக்கிறேன் அதில் அவருடைய முன்னுரை படிக்கும்போது மனதில் தோன்றிய விஷயம் அதுதான் இதை எழுத தூண்டியது, செய்திகள் நிறைந்த ஒரு எழுத்தை எழுத முயலவேண்டும் அதுதான் எழுத்தின் வெற்றி..

அப்படியானால் எவ்வளவு உழைக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய பிரச்சினைகள் உண்டு ஒரு நல்ல எழுத்தாளராவதில், சாரு ஒரு நாளைக்கு 23 மணிநேரம் உழைக்கிறேன் என்று கோபப்படுவது கூட இதனால்தான் போல.

ஒரு கவிதையை எழுத மனுஷயபுத்திரன் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை, எல்லா எழுத்தாளரிடமும் எல்லா வாசகர்களுக்கும் உள்ள ஒரு சந்தேகம், இந்த ஆள் எப்படி இப்படி எழுதுகிறார் என்பதுதான். அதற்காக மிக கடுமையான களப்பணிகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதும் அது இதற்காகத்தான் செய்யப்படுகிறது என்று எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அந்த களப்பணியின் விளைவால் வரும் ஒரு படைப்பு அதன் மிகுந்த பலனைத்தருகிறது.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்தபோது அப்படித்தான் தோன்றியது, முழுதும் படித்தேனா என்று கேட்டார்கள் நிறையபேர், அப்படியானால் நிறைய பேரை முழுதும் படிக்க முடியாமல் செய்கிற கடுமையான நடை அதுவென்று உணர்ந்தேன். ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் நடை ஒரு விறுவிறுப்பான நடை பல கதைகள் கீழே வைக்கமுடியாமல் படிக்கதூண்டுகிறது,

சிறு பிராயத்தில் கிரைம் நாவல்களில் ராஜேஷ் குமார் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார், அதற்கு முன் சங்கர்லால் படித்தியப்பாடு இருக்கிறதே, அதன் பெருமை எல்லாம் தமிழ்வானனுக்கே சேரும். பிற்பாடுதான் சுஜாதா வந்தார் அவர் இழுத்துக்கொண்டு ஓடிய ஓட்டம் மிக நீளமானது, அவரோடு ஓடும்போது ஏற்பட்ட மனநிலைகள் பல நிலைகள் என்றாலும் இடையில் பல பாக்கெட் நாவலாக பாலகுமாரன் வந்த போது அதன் தாக்கமும் அதிகம்தான், இந்த ஆள் என்னத்தை எழுதினாலும் இந்த பாடு படுத்துகிறானே என்று தோன்றும், பல பெண் வாசகர்களை கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன், இந்த இடையில் எனது சித்தப்பா மூலம் அப்போது கிடைத்த லாசரா வின் சிந்தாநதி ஒரு கலக்கு கலக்கியது, என்னடா இது எழுத்து, இதற்குபோய் சாகித்ய விருதெல்லாம் கொடுக்கிறார்களே என்று பலமுறை படிக்க எங்கோ கொஞ்சம் புரிந்தது, ஆனால் அந்த எழுத்தின் நளினம் ஒரு போதையாக இருந்தது. அதை நாடிப்போய் அவர் தினமணியில் எழுதியது அது இது வென்று கிடைத்ததெல்லாம் படித்தபோது இலக்கியம் என்பதன் தூரம் இன்னும் எங்கோ இருக்கிறது என்றும், நாம் கொஞ்சம் இலக்கியம் படிக்கிறோம் என்று புரியத்தொடங்கியது, அந்த இடைவெளியில் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படிக்க என்ன நடக்கிறதென்றே புரியாமல் ஒரு நாவலுக்காக இவ்வளவு உழைப்பு பின்னால் இருக்கிறது என்கிற அதிசயத்தை புரியவைத்த நாவல் அது.

அப்படி இப்படி என்று தட்டுப்பட்டதெல்லாம் படித்து ஒரு நண்பரின் மூலம் பொன்னியின் செல்வன் படிக்க நேர்ந்தது, உண்மையில் ஒரு வாசகனுடைய படிப்பு அனுபவ வழி இதுவாக இருக்க வேண்டும் என்றில்லை எனக்கு இருந்தது இப்படி அவ்வளவுதான், பொன்னியின் செல்வனின் போக்கும், அத்தனை பெரிய புத்தகத்தை படிப்பதை நிறுத்தமுடியாமல் அதன் விறுவிறுப்பு தாங்கமுடியாமல் அலைந்ததை இன்னும் மறக்க முடியாது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி ஒரு வசனம் வருகிறதே “அடிச்சது அந்த காதல்” அப்படி ஒரு அடி அது பொன்னியின் செல்வன் தந்ததுதான், அந்த கதை நடந்த இடங்களில் நான் வாழ்தேன் அதனால் அதன் ஒவ்வொரு வருணனையும் என்னை அங்கே கொண்டு போனது, தஞ்சை குடந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இதைதான் சொல்வார்கள் அந்த நாவலைப்பற்றி அப்படி ஒரு அனுபவம், புத்தகம் படிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலையை எனக்கு கொண்டு வந்த ஒரு நாவல் அது. அதன் பின் அதனை பலவடிவங்களில் நான் வாங்கி வாசித்து விட்டேன், பின்னர் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, உண்மையில் பார்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கியபோது எனக்கு ஏமாற்றம்தான் மற்ற நாவல்களைப்போல் 5, 6 புத்தகங்கள் என்றில்லாமல் இப்படி சிறிய பகுதியாக இருக்கிறதே என்று, கல்கி தன் வாழ்நாளில் இதைவிட உயர்வாக எதுவுமே செய்யமுடியாது, அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று பலமுறை யோசிக்கவைத்த எழுத்து,

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஜீரோ டிகிரியும், ஜெயகாந்தனும் ஒரே நேரத்தில் நுழைந்தார்கள், இடையில் வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்கள் வந்து அனுபவத்தை கூட்டி வைத்திருந்தாலும் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்று ஜெயகாந்தன் ஹென்றியை கொண்டுவந்து உள்ளே திணித்தபோது ஒரு கலக்கம் என்னடா வாழ்க்கை நாம் வாழுகிறோம் என்று, அதெப்படி ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அரைநிர்வாணத்தை ஒரு ரோஜாமலரின் அழகை ரசிக்கிற மனநிலையில் பார்க்கமுடிந்தது, அந்த ஒரு வரியில் ஹென்றியின் மனத்தின் கலங்கமின்மை அந்நாவலின் முழுக்க நம்மை அதே கோணத்தில் அழைத்துச்செல்வதை அனுபவிக்க முடிந்த நிலையில், நல்ல மனிதனாக வாழ்வதன் அர்த்தம் எனக்கு பிடிப்பட்டது அப்போதுதான்.அதன்பிறகு ஜெயகாந்தனின் எல்லா எழுத்துகளும் கிடைக்க படித்து திளைக்கமுடிந்தது ஆனாலும் ஹென்றிதான் எனக்கு உச்சம், ஜீரோ டிகிரி பற்றிய அறிமுகம் எனக்கு நல்லவிதம் இல்லை ஆனால் அதன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த கடிதங்களின் வழி அதைப்பற்றிய பிம்பம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது, அந்த கடிதங்கள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டதின் நோக்கமும் அதுதான், ஆனால் உள்ளே போகும்போது ஒரு பாலியல் கதையை படிக்கப்போகிறோமோ என்றுதான் நினைத்தேன்,

ஆனால் அதன் உள்ளே இருந்த பெண்களின் மீதான சமுதாய கட்டுகளின் துன்பவியல் வெளிப்பாடுகளும் அதன் ஊடே கிடந்த ஒரு அனாயசமான கோபமும், அதன் நகைச்சுவையும் என்னை முழுக்க புரட்டிப்போட்டது, அதன் பின் என்னை இந்த சாருவை நோக்கி ஒடவைத்தது, சாருவின் எல்லா நூல்களும் வரவர படிக்கத்தொடங்கினேன், இந்த காலங்களில் நான் சாருவைத்தவிர வேறுயாரையும் வாசிக்கவில்லை என்றே சொல்லலாம், பின் நவீனத்துவம், நான் லீனியர் போன்ற புதியவார்த்தைகளின் அறிமுகமும் அதன் வேகமும் என்னை பாலகுமாரனைப்படிப்பவர்களுடன் சண்டைபோடவைத்தது, ஆனாலும் இன்னும் வேகமான அடிக்ககூடிய ஒரு எழுத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன், இதுவரை படித்த இலக்கியங்களின் வாசல் தேடிக்கொடுத்த அறிவு, உலக இலக்கியங்களை நோக்கி திருப்புகிறது, சாருவுக்கு அதில் பெரும் பங்குண்டு, இன்றைய இளைய சமுதாயத்திற்கு பல உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு, இதன் பிறகு எஸ். ராமகிருஸ்ணன் வந்தார் எனது புத்தக அலமாரிக்கு அதன் சுகம் அடுத்து.

தவநெறிச்செல்வன்

மொழிப்பற்று,

நேற்று Asianet என்ற மலையாள தொலைக்காட்சியில் Idea star singer என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன், அதைப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த நிகழ்ச்சியின் தன்மை பற்றி அறிவார்கள், மிக அற்புதமான ஒரு நிகழ்ச்சி.

அதில் உள்ள மூன்று நடுவர்களில் ஒருவர் பிரபல பாடகி திருமதி சித்ரா அவர்கள், நேற்று போட்டியாளரில் ஒரு பெண் ஒரு தமிழ் பாடல் பாடும்போது சில தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்தார், அதனை சரி செய்யும் விதத்தில் திருமதி சித்ரா அவர்கள் தவறாக பாடக்கூடாது தமிழர்கள் தங்கள் மொழிமீது மிகவும் நேசம் கொண்டவர்கள் ஆகையால் அது அவர்களை புண்படுத்தும் நன்கு புரிந்துகொண்டு சரியாக பாடவேண்டும் என்று சொன்னார்கள்.

தமிழர்களின் மொழிப்பற்றின் ஒரு பிரபலத்தை இது காட்டுகிறது என்றே நினைக்கிறேன்
சாதாரணமாக நாம் இப்போது பல தமிழ் வார்த்தைகளை உண்டாக்கி வைத்துள்ளோம், மிகுந்த முயற்சியில் அவைகளை பயன் படுத்தவும் செய்கிறோம், ஆனால் பல மொழிசார்ந்த என் நண்பர்களுக்கு அவர்கள் மொழியில் அதற்கான வார்த்தைகள் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிப்பற்றில் குறையில்லை ஆனால் அந்த மொழியின் கலைச்சொற்கள் அவர்களின் மொழியாளர்கள், ஊடகவியலாளர்களால் சாதாரண மக்கள் வரை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்,

சாதாரணமாக கணினி, மடிகணினி, மிதிவண்டி, திரைப்படம், மற்றும் பல வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் நம்மிடையே வந்துவிட்டன, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர் அல்லது மற்ற நாட்டினர் மத்தியில் ரகசியம் பேச தூய தமிழுக்கு மாறுவதை சாதாரணமாக பார்க்கலாம், ஆனால் மற்ற இந்திய மொழிக்காரர்கள் அதில் ஆங்கில வார்த்தைகளையே உபயோகப்படுத்தவேண்டியுள்ளது.

நமது தமிழ் இப்போது ஒருவகையில் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்று நம்பலாம், 1 லட்சம் பேர் பேசினால் அந்த மொழி குறைந்தது அடுத்த 100 ஆண்டுகள் அழியாது என்று ஒரு கணக்கு சொல்கிறது, மிகவும் பழமையான நமது தமிழ் மிகவும் பரவலாக பேசப்படுகிற மொழியாக இருப்பது மிகவும் பெரிய விஷயம்தான். அடுத்து புதிய விஞ்ஞான உலகில் கணிப்போறியில் மிகவும் உபயோகப்படுகிற மொழியாக இருப்பதும் முக்கியகாரணம்.

நமது புதிய கல்வி அமைப்புகள் ஆங்கிலத்தின் மீதான வாய்ப்புகளால் அதனை முதன் மொழியாக ஆக்கிவிட்டார்கள், ஆகையால் எல்லா புதிய குழந்தைகளும் அதிகம் ஆங்கில வார்த்தைகளை பேசுவதை பெற்றோர்கள் பெருமையாக பேசக்கூடிய காலமாக இருக்கிறது, ஆகையால் அவர்களுக்கு தமிழின் பெருமையை பேசவேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம், நம்மை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் தாய் மொழியையே எல்லாவற்றுக்கும் பேசுகிறார்கள்.

நாம் ஏன் இப்படி ஆகிப்போனோம் என்கிற கவலை உள்ளது, தைரியமாக தமிழில் பேச நினைப்போம், அதையே எல்லா சூழலிலும் பேச முயல்வோம், தமிழர்கள் தங்களுக்குள் தமிழ் தெரியும் நிலையில் அதையே பயன் படுத்தலாம், முக்கியமாக தமிழ் பேசுவர்கள் பெருமை கொண்டு பேச வேண்டும்.

தமிழ் பேசுவதால் ஒரு படி மேலே இருப்பதாய் உணரவேண்டும், ஒரு வெளிநாட்டு மொழியை பேச தெரியாததால் அதற்காக கவலைப்பட வேண்டாம், ஜெர்மன் நமக்கு எப்படி தெரியாதோ அதுபோல் ஆங்கிலம் நமக்கு தெரியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,

முடிந்தவரை தமிழில் பேசுவோம்.

தவநெறிச்செல்வன்

Mar 20, 2010

தேசபக்தி என்றால் என்ன. ( மறுபதிப்பு)

சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது.

அதனை என் நண்பர்களும் அறியவேண்டி தருகிறேன்
கடந்துபோன ஒரு காலகட்டத்தின் கொடூரமான ஒரு பாரம்பரியமாகவே இன்று தேசபக்தி இருந்து வருகிறது. வெறும் எச்ச சொச்சமாக மட்டும் அது இருந்துவிடவில்லை. மாறாக தங்கள் அதிகாரத்தின் மூலமாக மட்டுமே அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கோலோச்சிவிட இயலாது என்பதை உணர்ந்து வைத்திருப்பதால், அவை தமது இருப்பிற்கு தேசபக்தியையே நம்பியுள்ளன. எனவே தந்திரமாகவும், வன்முறையின் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவை தேசபக்தியைத் தூண்டிவிடுகின்றன. அது அணைந்துவிடாமல் காப்பாற்றுகின்றன. அதன்மூலம் தம் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...

அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...

ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...

தேசபக்தி என்பது அடிமைத்தனம்...

தேசபக்த உணர்வு என்பது இயற்கையானதல்ல, அது அறிவுக்குப் புறம்பானது, ஆபத்தான உணர்வு என நான் பலமுறை கூறியுள்ளேன். மனிதகுலம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் துயர்களுக்கெல்லாம் பெரும்பான்மையான காரணமாக அதுவே உள்ளது.

இந்த உணர்வு துளிர்விடுவதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது. மாறாக மனித அறிவிற்குச் சாத்தியமான எல்லாக் காரணிகளையும் பயன்படுத்தி அது அழித்தொழிக்கப்பட வேண்டும். உலகளவில் நடைபெறும் ஆயுதக் குவிப்புகள், பேரழிவுக்குக் காரணமான போர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தேசபக்தி உணர்வுதான். பிற்போக்குத்தனமான, காலத்திற்கொவ்வாத, ஆபத்தான இந்தத் தேசபக்தி குறித்த என் கருத்துக்கள் அனைத்தும் இதுவரையில், இன்று வரையில் (கள்ள) மௌனத்தின் மூலமாகவோ, உள்நோக்கத்துடன் திரித்துக் கூறியோதான் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது சம்பந்தமில்லாமல் `கெட்ட தேசபக்தி' (அதாவது தேசவெறி)தான் மோசம், நல்ல தேசபக்தி ரொம்பவும் உயர்ந்தது, அறம் சார்ந்த உணர்வு என்கிற ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளன.

இந்த உண்மையான, நல்ல தேசபக்தி என்றால் என்ன என்று இதுவரை நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது வெறும் அலங்கார வார்த்தைகளாகவும், அர்த்தமற்ற உரைவீச்சுக்களாகவுமே இருந்துள்ளன. இறுதியில் தேசபக்திக்குச் சம்மந்தமில்லாத வேறு எதையாவது சொல்லி முடிப்பார்கள்.

தனது சொந்த மக்களின்மீது மட்டுமேயான அன்பு; ஒருவர் தன் அமைதியான வாழ்வை, சொத்துக்களை, ஏன் உயிர் வாழ்க்கையையே, எதிரிகளிடமிருந்து தம் மக்களைக் காப்பாற்றுவதற்குத் தியாகம் செய்யும் பண்பு - இதுதான் தேசபக்தி என்கிற கருத்து ஒவ்வொரு நாளும் தனது நலனுக்காக மற்றவர்களைக் கொன்று குவித்து மானபங்கப்படுத்துவதை நீதியாகவும், (ஒரே) சாத்தியமாகவும் கருதிய ஒரு காலத்திற்குரியது.

ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே மானுடத்தின் உயர் அறிவின் வித்தாகத் தோன்றியவர்கள், `மானுடர்க்கிடையேயான சகோதரத்துவம்' என்கிற உன்னதக் கருத்தாக்கத்தை உணரத் தொடங்கினர். இந்த உன்னதக் கருத்து மனிதப் பிரக்ஞையினூடாகப் பயணித்து வந்து நம்முடைய சகாப்தத்தில் பல்வேறு வடிவங்களில் கையகப்படத் தொடங்கியுள்ளது. தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, தொழில், வணிகம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று மனிதர்கள் மேலும் நெருக்கமாகப் பிணைந்துள்ளார்கள். அடுத்த நாட்டு மக்கள் மீதான ஆக்ரமிப்பு, படுகொலைகள், வன்முறைகள் எல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டன. எனவே எல்லா மக்களும் (மக்கள்தான், அரசாங்கங்கள் அல்ல) அமைதியாகவும், பரஸ்பர பயனளிப்பவர்களாகவும், வணிகம், தொழில், கலை, அறிவியல் எல்லா அம்சங்களிலும் உறவுகளைப் பேணுபவர்களாகவும், எக்காரணம் கொண்டும் இவ்வுறவுகளை அழிக்க விரும்பாதவர்களாகவும் ஆகியுள்ளனர். எனவே காலாவதியாகிவிட்ட தேசபக்தி இன்று தேவையற்றதாகி விட்டது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனிதர்களுக்கிடையேயான சகோதரத்துவம் என்கிற உயர் நிலையை நாம் எட்டிவிட்டதால் இந்த தேசபக்தி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இறுதியில் முற்றாக அழிந்துவிடும் என ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் இன்றைய நிகழ்வுகள் உள்ளன. காலத்திற்கொவ்வாத இந்தத் தீய உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது மட்டுமின்றி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறிய இடைவெளி. இதுவரை நீங்கள் வாசித்தது எதுவும் என்னுடைய எழுத்தல்ல. மனிதகுலம் கண்ட மகத்தான படைப்பாளிகளில் ஆகச் சிறந்தவரான லியோ டால்ஸ்டாய் `தேசபக்தி'யைக் கண்டித்து எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சில கூற்றுக்களை மட்டுமே இங்கு நான் மொழியாக்கித் தந்துள்ளேன். இந்த முழுக்கட்டுரையையும் மொழியாக்குவது என் நீண்டநாள் ஆசைகளில் ஒன்று.

டால்ஸ்டாய் ஒரு புனைவு எழுத்தாளர். ஆராய்ச்சியாளரோ, தத்துவ ஞானியோ அல்லர். ஆனால் எண்ணற்ற சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகட்கு ஊற்றுக் கண்ணாக அவரது இந்தச் சிந்தனைகள் அமைந்துள்ளன. குறிப்பாக சிலரை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புகழ்பெற்ற சமூகவியல் அறிஞரான மாக்ஸ் வெலர், வால்டர் பெஞ்சமின், ஜியார்ஜியோ அகம்பன், ழாக் தெரிதா... தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்முறை,. ஒரு சமூக அமைப்பு குறித்துச் சிந்தித்த ழீன் லுக் நான்சி (The Inoperative community, 1983) மாரிஸ் பிளாங்காட் (The unavowable Community, 1983), பெனடிக்ட் ஆன்டர்சன் (The Imagined community, 1983) ஜியார்ஜியோ அகம்பன் (The comming community, 1993) முதலிய நவீன சிந்தனையாளர்கள் பலரும் டால்ஸ்டாயின் சிந்தனைகளால் தூண்டப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவற்றோடு தெரிதாவின் இறுதி நூற்களில் ஒன்றான Polity of friendshipஐயும் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை விட்டுவிட்டேன். அவர்தான் ஹன்னா ஆரன்ட் (The origin of Totalitarianism).

அது சரி இத்தகைய தத்துவச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒரு புனைவு எழுத்தாளனால் தூண்டப்பட்டது எங்ஙனம்? உலகத் தரத்திலான நாவல்கள் ஏன் தமிழில் வரவில்லை. இன்னும் பல காலத்திற்கு வருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை என்பதற்கான பதிலை நாம் இங்கிருந்துதான் தொடங்கிச் சிந்திக்கவேண்டும்.

இதுகுறித்து மேலே பேசுவதற்கு முன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். தேசபக்திக்கு எதிராக இத்தகைய சிந்தனையை உதிர்த்துள்ளது டால்ஸ்டாய் மட்டுமல்ல. வேறு சில கூற்றுக்களையும் தொகுத்துக்கொள்வோம். வலைத்தளங்களில் இன்னும் உங்களுக்கு ஏராளமாகக் கிடைக்கக்கூடும்.

தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.''

மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.''

அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.''

பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.''

ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.''

ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.''

எம்மா கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.''

எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.''

சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).

ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.

எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''

சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படியான ஒரு பட்டியலை நான் இங்கே சுட்டிக் காட்டியதற்கான காரணம் நம்மூர் குண்டுசட்டிக் குதிரை ஓட்டிகள், உள்ளூர் புராணக் குப்பைகளால் மட்டுமே மண்டையை நிரப்பிக் கொண்டவர்கள், விசாலமான படிப்பனுபவமோ, வாழ்வனுபவமோ இல்லாத சுயவிரும்பிகளை ஒரு பரந்த தளத்தில் வைத்துக் காட்டுவதற்காகத்தான்.

டால்ஸ்டாய் முதல் ஈன்ஸ்டின்வரை, ஹன்னா ஆரன்ட் முதல் தெரிதாவரை தேசபக்தியை வெறுத்ததற்குக் காரணம் வெறும் போர் வெறுப்பும் அமைதி நாட்டமும் மட்டுமல்ல. `மற்றமை'யுடனான உறவு குறித்த அறம் சார்ந்த நோக்கங்களின்பாற்பட்டது இந்த வெறுப்பு. அறம் என்பது ஒரு கடப்பாடு (obligation)மதங்களும்கூட அதை ஒரு கடப்பாடுதான் எனச் சொன்னாலும் அறத்தை இறைவனுக்கான கடப்பாடாக (obligation to God) அவை முன்வைக்கும். அதை அரசுக்கான கூப்பாடாக மதவழிப்பட்ட அரசியலும், அதற்குப் பிந்தி அதே வடிவத்தில் `ஜனநாயக அரசுகளை'க் கட்டமைத்த நவீனத்துவமும் முன்வைக்கும். ஆனால் தத்துவமோ அறத்தை `மற்றதற்'கான கடப்பாடாக (obligation to other)க் கருதுவதன் விளைவாக மற்றதனைத்தையும் அயலாக (alien),எதிரியாகக் கருதும் தேசபக்தியை ஏற்றுக்கொள்வதற்கு அதில் இடமேயில்லை.

இந்தியச் சூழலில் மற்றதனைத்தையுமே எதிரியாகக் கருதும் மனநிலை உயர்சாதி மனங்களுக்கு இயல்பாகிப் போனதற்கு இன்னொரு உதாரணமாக மௌலியைக் குறிப்பிடலாம். கிராமப் பொதுச் சாவடியை `எத்தனை எதிரிகள் தங்கிப்போன இடமோ' என அவரது (கதை மாந்தரின்) மனம் கருகியதை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது.

மனிதர்களைப் பொருத்தமட்டில், வாழ்வது என்பது மற்றவர்களோடு வாழ்வதுதான். `மனிதன் ஓர் அரசியல் மிருகம்' எனச் சொல்வதன் பொருள் அதுவே. மனித உயிர்களுக்கு மட்டும்தான் இரு வாழ்வுகள் உள்ளன. வெறும் உயிர் வாழ்வுக்கு அப்பாற்பட்ட அரசியல் வாழ்வுக்கும் உரியவன் அவன். இந்த அரசியல் வாழ்வு அவனுக்கு மறுக்கப்படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (bare life) உரியவனாகிறான்.

அரசியல் என்பது ஏதோ கட்சி நடத்துகிற விவகாரமோ, இல்லை கட்சியில் உறுப்பினராவதோ அல்ல. அது சக மனிதர்களுடன் தொடர்ந்து உரையாடுவது (negotiating). மற்றவர்களுடன் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது (engagement).மற்ற யாருடனும் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ளத் தக்கவனாகவே மனிதன் அமைக்கப்பட்டுள்ளான். மனிதன் மட்டுமே பேசுபவனாக இருப்பதன் தாத்பர்யம் அதுவே. மற்றமையுடனான ஈடுபாடு என்பது அதைப் புரிந்துகொள்வதல்ல. தவறாகப் புரிந்துகொள்ளுதல்கூட ஒரு நல்ல அம்சமே. தவறாகப் புரிந்துகொள்ளுதலே உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது. அறிவு உற்பத்திக்குக் காரணமாகிறது. அதன்மூலம் மற்றமையுடனான தொலைவு குறைகிறது. இந்தத் தொலைவு குறையும்போது மற்றமையின் `அன்னியத்தன்மை' (strangeness) அழிகிறது.

மற்றமையுடனான இந்தத் தொலைவை அழித்துக் கொள்ளுதலைவிட மானுட வாழ்வின் இறுதி லட்சியம் என்னவாக இருக்கமுடியும்? ஆனால் மற்றவர்களை `அன்னியர்களாக' மட்டுமே பார்ப்பது, அவர்களுடன் ஈடுபடுத்திக்கொள்ளச் சாத்தியமே இல்லை எனக் கருதுவதன் உச்சபட்ச நீட்சியே தேசபக்தி. மற்றமையுடனான உரையாடல், பேச்சு, உரிமை கோருதல், உரிமை அளித்தல், தொலைவைக் குறைத்தல், ஈடுபடுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் உச்சபட்ச வெளிப்பாடே அரசியல். இந்த வகையில்தான் தேசபக்தியும் அரசியலும் சந்தித்துக்கொள்ள இயலாத இரு துருவங்களாகின்றன.

தேசபக்தி அரசியலை மறுக்கிறது.
அரசியலுக்கு இடமில்லாமற் செய்துவிடுகிறது. 9/11-க்குப் பின் ஜார்ஜ் புஷ் உருவாக்கிய `தேசபக்தி சட்டம்) (PatrioticAct)அயலவர்களின் (immigraants) உரிமைகளைக் கட்டுப்படுத்துவது நினைவிருக்கலாம். மாநில அளவுகளிலும்கூட பிஸி 4437 முதலான பல்வேறு சட்டங்கள் இவ்வாறு இயற்றப்பட்டன. இங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டித்தான் `தடா', `பொடா'க்களெல்லாம் உருவாயின. இவை `எல்லை'யில் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கும் எதிரி ஒருவரை வலிமையாகக் கட்டமைப்பது மட்டுமின்றி உள்நாட்டு மக்களின் அரசியற் பெயற்பாடுகளையும் ஒழித்துக்கட்டுவதை நாம் பார்க்காதிருக்கக்கூடாது.

தேசத்தின் மீது பக்தி செலுத்துவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. ஜெயமோகனின் தேசபக்திக் கட்டுரையை மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியடையும் என்.ஆர்.அய். தமிழிலக்கியவாதிகள் இன்று அவர்கள் வாழ்கிற அமெரிக்காவை விட்டுவிட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டால் ஒழிய தேசபக்தி காரணமாக இந்தியா திரும்புவார்களா, அவர்தம் வாரிசுகள்தான் இங்கே வர ஒப்புக்கொள்வார்களா? அவ்வளவு ஏன் இன்று ஈழத்தில் போர் முடிந்து ஏதோ ஒரு வகையில் அமைதி திரும்பினால் இன்று அகதிகளாய் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எத்தனை பேர் நாடு திரும்புவர்?

டால்ஸ்டாய் இன்றுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மனிதர்க்கிடையே ஏற்படுத்தியுள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டி தேசபக்தி சாத்தியமற்றுப் போனதைக் குறிப்பிடுவதைப் பார்த்தோம். அக்கட்டுரை மே 10, 1900-த்தில் எழுதப்பட்டது. 108 ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மாற்றங்கள். குடிமை, அடையாளம் தொடர்பான கருத்தரங்கங்களெல்லாம் ஏராளமாக மாறிவிட்டன. அடையாளம் இல்லாத சமூகக் கட்டமைப்பின் சாத்தியமின்மை, குடிமகன், உள்நாட்டவர் (indigenem), உள்நுழைந்தோர் (immigrants) என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம், இவற்றுக்கிடையேயான தெளிவான வரைகோடுகள் எல்லாம் இனி சாத்தியமேயில்லை. ஆனாலும் தேசபக்தியின் பெயரால்தான் இன்று அயலார்கள் (j / aliens / immigrants) வெற்று வாழ்க்கைக்குரியவர்களாக்கப்படுகிறார்கள்.

ஜியார்ஜியோ அகம்பன் இந்நிலையை `ஹோமோ சாசர்' (புனித மனிதன்) என்பார். பண்டைய ரோம ஆட்சியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் `சிவீ‡வீக்ஷ்மீஸீ' என்கிற அங்கீகாரத்தை இழந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அந்த நகர நாகரிகத்தில் எந்த சிவில் உரிமைகளும் கிடையாது. இவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம். குற்றமாகக் கருதப்படாது. ஆனால் இவர்கள் புனித பலிகளுக்கு உரியவர்களல்ல. தேசபக்தியின் பெயரால்தான் அன்று முதல் இன்றுவரை மனிதர்கள் அரசியல் வாழ்விலிருந்து அகற்றப்பட்டு வெற்று வாழ்க்கைக்கு உரியவர்களாக்கப்பட்டார்கள். இன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தேசபக்திக் கதையாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அடையாளத்தை வெற்று வாழ்வுக்குரியவர்களாக மாற்றுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.

தெரிதா தனது இறுதிப் பேட்டி ஒன்றில் கூறினார்: ``அடிப்படையில் ஒரு தத்துவவியலாளர் `பாஸ்போர்ட்' வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அடையாள அட்டைகளையும் அவர்களிடம் கோரக்கூடாது. `விசா'வும்கூட அவர்களுக்குத் தேவையாக இருக்கக்கூடாது. அவருக்கு எந்தத் தேசிய இனத்தின் அடையாளமோ, ஏன் தேச மொழியுமோ கூடத் தேவையில்லை. ஒரு தத்துவவியலாளராவதற்கான விறுப்புறுதி என்பது உலகளாவிய சமூகத்திற்கான (Universal community) பங்களிப்பைச் செய்வதற்கான விறுப்புறுதியாகும். உலகளாவிய சமூகம் என்பது வெறும் கலப்பினச் சமூகமல்ல. அது உலகளாவியது. குடியுரிமை, அரசு, கலப்பினச் சமூகம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.''

மானுடத்தை நேசிப்பவர்கள் வேறெப்படிச் சிந்திக்க முடியும்?

Jan 20, 2010

நீண்ட இடைவெளிக்க்குபிறகு

நீண்ட இடைவெளிக்க்குபிறகு இதை எழுதுகிறேன், பல வேலைகளுக்குகிடையில் நேரமின்மை காரணம் மற்றும் பல்வேறு பயணங்கள், பல்வேறு முயற்சிகள் என்று நிகழ்ந்து விட்ட நிலையில் எழுத்து சற்று தூரத்தில் இருந்து விட்டதாக உணர்கிறேன்.

சென்னை புத்தக கண்காட்சி முடிந்து விட்ட நிலையில் பல எழுத்தாளர்களின் நேரடி சந்திப்புகளையும், பல வாசகர்களின் நேரடி சந்திப்புகளையும் பற்றிய கட்டுரைகள் பல வந்து கொண்டிருக்கின்றன, அவைகளின் சுவாரஸ்யங்களுக்கு இடையில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குமான மன வேறுபாடுகள் மிக உச்சத்தை அடைந்து ஒரு பெரிய இலக்கிய சண்டையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

சாரு தொடங்கி வைத்த இந்த விளையாட்டு இருவரின் எழுத்துப்போராக மாறிவிட்டிருக்கிறது, அவரவர் தளங்களில் அதற்கான வாசகர்கள் இன்னும் தூபம் போடும் பணிகளை செய்கிறார்கள், அதனை எழுத்தாளர்களும் ஊக்குவிகிறார்கள்,
இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டியது அதனில் கிடைக்கும் இலக்கிய சுவையைத்தான், அதை விட்டு சண்டையை பெரிதாக்குகிற வேலையை அல்ல.

மனுஷ்ய புத்திரன் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள ஒரு பதில் கட்டுரை சாரு தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார், அதில் அமைந்துள்ள மேன்மையான மொழியின் வீச்சை கவனியுங்கள் அதைத்தாண்டி அதில் இருக்கும் மனுஷ்யபுத்திரன் என்கிற உயர்ந்த மனிதனையும் காணலாம்.

விலைவாசி உயர்வு மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது, கூடவே வருகின்ற இடைத்தேர்தலில் எல்லாம் திமுக கூட்டணி தான் கண்டுபிடித்து வைத்திருக்கிற புதிய பார்முலா மூலம் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறது, அதிமுக கிட்டதட்ட செயல்படாத ஒரு இயக்கமாக தெரிகிறது, என்னதான் மக்கள் பிரச்சினை இமாலய அளவு இருந்தாலும் அதனை பயன்படுத்தி ஒரு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் செய்து காட்டி திமுக அரசை பயமுறுத்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் ஜெயலலிதா இருப்பது எதனால் என்று தெரியவில்லை.

மத்தியிலும் பாஜக தனது வல்லமையை இழந்து தேய்ந்து கொண்டிருக்கிறது, இது ஆரோக்கியமான அரசியலாக எனக்கு தோன்றவில்லை, எங்கு பார்த்தாலும் விலை ஏற்றம் அதன் பாதிப்பு எங்கு கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை, தங்கம் வானத்தில் பறக்கிறது, ஒருவேளை இந்த ஏற்றம் 150 டாலர் வரை போய் பின்னர் வேகமாக கீழிறங்கிய பெட்ரோலிய எண்ணையைப்போல் இருந்தால் மிகவும் பிரச்சினைதான். ஆகையால் தங்கத்தின் நிலை என்ன ஆகுமோ.

வானிலை பிரச்சினைகள் மிக அதிகமாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஐரோப்பாவில் மிகவும் கொடூரமான பனி பொழிவு வாட்டுகிறது இதற்கெல்லாம் காரணம் என்று நம்மைதான் குற்றம் சாட்டுகின்றனர், கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் இந்தியாவையும் சீனாவையும் பிரேசிலையும் பிடித்து நெருக்கி பார்த்தார்கள் அதன் விளைவாக இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியை அதிகப்படுத்த மன்மோகன்சிங் முயற்சிப்பது தெரிகிறது, எல்லார்வீட்டு மொட்டை மாடியிலும் விரைவில் சோலார் பாட்டரிகள் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நிறைய விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன, முக்கியமாக தஞ்சை மாவட்டத்தில் இது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், இதனால் உணவு உற்பத்தி மிகவும் மோசமான ஒரு நிலைக்கு போகவேண்டிவரலாம், புதிய விளைநிலங்களை உருவாக்கும் வகையில் அரசு திட்டங்கள் ஏதும் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை, புதிய புறவழிச்சாலைகளை அமைக்கும் போது கூடவே அந்த பகுதிகளில் விவசாயம் செய்து வந்த இடங்கள் எல்லாம் உடனடியாக மனைகளாக மாறி விடுகின்றன. இந்த வேகம் மிக மோசமானதாக தோன்றுகிறது.

ஈழம் போர் முடிந்து விட்ட நிலையில் வழக்கம் போலவே போர் சம்பந்த பட்ட குற்றங்களும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் மிகவும் மனவேதனையை தருகின்றன. ஆனாலும் அதனிடையே வருகின்ற தேர்தல் ஒரு புதிய கணக்கை இந்தியாவுக்கும் ஏற்படுத்தி கொடுத்திருகின்றன, ஜனவரி 26ல் தேர்தல் முடிந்தால் இந்த கணக்கின் விடைகள் தெரிய வரலாம், ஆனால் இவையெல்லாம் வேதனையில் இருக்கும் தமிழர்களுக்கு எத்தனை உதவி செய்யும் என்று புரியவில்லை.

உலகத்தமிழ் மகாநாடு கோவையில் நடைபெறப்போகிறது, அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், இந்த மாநாடு முக்கியமான இடத்தை பெறுகிறது, அதற்கு முன் புதிய சட்டசபை வளாகத்தையும் திறந்து பணியாற்றிவிடக்கூடும்,

புதிய வருடம் தொடங்கி இருக்கிறது வழக்கம்போல் பல வாழ்த்துகள் தீர்மானங்கள் என்று தொடங்கி இருக்கிறது. என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.

சினிமாக்களில் வேட்டைக்காரன் மிக கடுமையான விமர்சனத்தை வலைகளில் சந்தித்தது, விஜய் ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை, இனி ஆந்திர ரீமேக் படங்கள் விஜய்க்கு அத்தனை கைகொடுக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஒரு முக்கியமான படமாக இருக்ககூடும் என்று தோன்றுகிறது, அதனைப்பற்றிய விமர்சனங்கள் பல்வேறு விதமாக இருப்பது ஒரு குழப்பம்தான், என்றாலும் தமிழின் தரம் ஒரு மிரட்டலான் முன் நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகத்தான் உணரமுடிகிறது. படம் பார்க்கவில்லை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும், முடிந்தால்

சரி இன்னும் நிறைய எழுதவேண்டும் பிரகு சந்திக்கலாம்

எல்லோருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

தவநெறிச்செல்வன்