Dec 25, 2011

அமெரிக்க பயணம்-2

இந்த முறை இரண்டுவார பயணமாக அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைத்தது, போனமுறைக்கும் இந்த முறைக்கும் நிறைய வேறுபாடுகள், அப்போது கொஞ்சம் கோடைகாலமாக இருந்தது. இப்போது நல்ல குளிர்கால தொடக்கம் நல்ல வேளையாக பனிப்பொழிவு ஆரம்பிக்கவில்லை, ஒருநாள் மட்டும் மழை அப்படியே பனியாக கொட்டியது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் இருந்தது.
இந்தமுறை முதலில் சென்றது பென்சில்வேனியா மாகாணதில் உள்ள பிட்ஸ்பர்க் நகரம், இது ஜார்ஜ் வாஷிங்டன் முதலில் அமெரிக்க சுதந்திரபோருக்காக முழங்கிய இடம். அவர் ஒரு பண்ணையாரக இருந்து சந்தர்ப்பவசத்தால் தளபதி ஆக்கப்பட்டவர். முழுவிவரம் வேண்டுமானால் பா.ராகவனின் “டாலர் தேசம்” படித்தால் புரியும்.



பிட்ஸ்பர்க் ஒரு மலைநகரம் என்று சொல்லலாம் சமதரையாக பார்க்கவே முடியவில்லை, எங்கும் மெலும் கீழுமாக வீடுகள் கட்டிடங்கள் என்று அற்புதமாக இருக்கிறது.பிர்மாண்டமான கட்டுமானங்கள் பள்ளத்தாக்குகளும் அவைகளை இணைக்க பெரும் பாலங்கள் என்று பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தனை சாதனைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நில அமைப்பில் பிட்ஸ்பர்க் ஒரு அற்புத நகரம்தான்.

நமது இந்தியர்கள் ஒரு அழகான வெங்கிடேஸ்வரா கோவிலை அங்கே கட்டி இருக்கிறார்கள். நான் போனது சுமார் ஒரு டிகிரி குளிர். உள்ளே வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு சீராக வைத்திருக்கிறார்கள், பகல் 12 மணிக்கு சுமார் 50 பேர் அமர்ந்து பெருமாளுக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். தமிழ் தெலுங்கு பட்டாச்சார்யார்கள் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு பெருமாளையும், தாயாரையும் அன்போடு ஆராதனை செய்வதை பார்க்க முடிந்தது. பெருமாள் மிக அழகாக இருக்கிறார் எப்போதும் போலவே. கோவில் கொஞ்சம் மலைமேல்தான் அமைந்துள்ளது. நல்ல மடப்பள்ளி ஒன்றும் உள்ளது. புளிசாதம், தயிர்சாதம், உப்புமா போன்ற பல உணவு பதார்த்தங்கள் விலைக்கு கிடைக்கிறது. நல்ல சுவையோடு.




குளிர்காலம் என்பதால் மரங்கள் மிகசோகமாக இலைகளை தொலைத்துவிட்டு எங்கும் ஒரு வெறுமை படர்ந்திருந்தது காண கஷ்டமாக இருந்து, குளிர் என்றால் சரியான குளிர். அதிகநேரம் சரியான காப்பு உடைகள் இல்லாமல் வெளியே நின்றால் அவ்வளவுதான். நான் சுமாரான உடைகளுடன் சென்று மிகவும் சிரமப்பட்டேன். என்றாலும் பின்னர் சில தேவையான உடைகளை வாங்கிக்கொண்டேன்.



இரண்டாம்நாள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும்போது மழைத்தூறல் தொடங்கியது அது ஒரு பனிப்பொழிவு, வெப்பநிலை மிககுறைவாக இருப்பதால் விழும் மழை அப்படியே பனியாக பொழிகிறது. வெளியே வந்தால் கார் எல்லாம் மெல்லிய பனி மூடிக்கிடக்கிறது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் அடித்ததால் மழை இல்லை, ஆகையால பனி பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் குளிர் 1 டிகிரி அளவில் இருக்கத்தான் செய்தது.
இரண்டு வாரம் அங்கிருந்துவிட்டு எதுவும் பார்க்க முடியவில்லை, காரணம் குளிர், பின்னர் வேலை சரியாக இருந்தது.

Oct 13, 2011

குருபூஜை விழா அழைப்பிதழ்



படத்தை கிளிக்கினால் பெரிதாக படிக்கலாம்

Oct 3, 2011

தளங்களில் நான் எழுதிய கருத்துக்கள்

காந்தி தனது போராட்டங்களின் விளைவுகளை அறியாமலே முன்னெடுத்தார் என்பது உண்மையாக இருக்காலம், எந்த போராட்டவாதியும் விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் காந்திஜியிடம் எந்த விளைவானாலும் தனது உயிரை பணயம் வைத்தாவது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் செளரி செளரா வன்முறையின்போது ஓத்துழையாமை இயக்கத்தை அவரால் நிறுத்த முடிந்தது.
காந்தியைத்தவிர மற்ற தலைவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திரப்போராட்டத்தை கடைசி இந்தியன் வரை கொண்டு செல்லும் சக்தியில்லை, ஆகையால்தான் சுதந்திரம் உறுதியாகும் வரை காந்தியை புறக்கணிக்கமுடியாத நிலையில் இருந்த தலைவர்கள், பிரிவினையின் போது அவரை கருவப்பில்லை போல வெளியே கடாசிவிட்டனர். அப்போது அவர்களுக்கு காந்தியும் தேவைஇல்லை அவருடைய மக்களும் தேவை இல்லை. தத்தமது அதிகார தேவைகளுக்காக எல்லா சமரசங்களும் நடந்தன.
பிரிவினையை தவறு என்றோ சரி என்றோ இங்கே நான் சொல்லவில்லை, ஆனால் காந்தியை அப்போது யாருக்கும் தேவைப்படவில்லை என்பதைதான் நான் இங்கே கூறுகிறேன். காந்தி மக்களுடன் இணைந்த தலைவராக மட்டுமே கருதப்பட்டார், நிர்வாக ரீதியான விஷயங்களுக்கு அவர் பொருத்தமில்லாதவராக பார்க்கப்பட்டார், அதனால்தான் அவரின் பொருளாதார கொள்கைகள் கூட சரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இப்போது கபில்சிபல், அன்னா ஹசாரேவின் எண்ணங்கள் நிர்வாகத்திற்கு சாத்தியமில்லை என்று மீடியாக்களிடம் எல்லாம் கூறிக்கொண்டிருக்கும்போது. மக்கள் கூட்டம் என்னவோ அன்னா ஹசாரே பின்னாடி நின்ற அதே கதைதான் காந்தியிடமும் நடந்தது, வழக்கமான இந்திய மக்களின் பூஜிக்கும் மனநிலை காந்தியையும் அப்படி ஒரு நிலையில் கொண்டுவந்து வைத்தது.
சொல்லும் செயலும் எண்ணமும் ஓன்றாக ஒரு மனிதனால் வாழ்ந்து காட்டமுடியும் என்ற நிருப்பித்தவர் காந்தி, அது அவருக்கு வெற்றிகளை கொடுத்தது என்பதுதான் வரலாறு, அதனால்தான் இன்னும் அவர் இங்கே விவாதத்தில் இருக்கிறார். காந்தியை திட்டுபவர்கள் விமர்சிப்பவர்கள் எல்லாம் அவரின் முஸ்லீம்கள் மீதான பற்றினை ஒரு குறையாக காட்டுவது அதிகம், எனக்கென்னமோ ஒரு சாதாரண மதசார்ந்து யோசிக்காத மனிதனுக்கு கூட காந்தியின் உணர்வே வரும் என்றுதான் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் இந்தியாவின் தந்தையான ஒரு தலைவர் எப்படி தன்னாட்டில் உள்ள எல்லா மத்ததினரையும் சமமாக பாவிக்காமல் இருக்கமுடியும்.
ஒருவேளை சுதந்திர இந்தியாவில் அவர் நீண்டகாலம் இருந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்க கூடும்.
*********************************************************************************************************************
எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே ஒரு வித மறுமலர்ச்சி நிலைகளை அடைந்து கொண்டேதான் வந்திருக்கிறது, அதன் விளைவுகள்தான அதனில் தோன்றிய புதிய புதிய பிரிவிகள், பிரட்டஸ்டண்டுகளும் ஆர் சி கிருத்துவர்களும் தனித்தனியே விவாதிக்கும்ப்போது ஏற்படும் தீப்பொறி, இஸ்லாத்தின் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடமும், இந்து மதத்தில் சிவா வைஷ்ணவா விவாதங்களிலும் பற்றி எரியத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் திரவிடம் வந்ததால் ஏற்பட்ட ஒரு மாற்றம் இப்போது இல்லாமல் போய்விட்டதால்தான் கருணாநிதியே இன்னும் மஞ்சள் துண்டுடன் இருக்கிறார், அவர் குடும்பத்தினர் கோயில்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை அறிவியல் வளர்ந்த நாடுகளிலும், சோற்றுக்கே வழி இல்லாத நாடுகளிலும் கடவுளும் மதமும் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை, நடுத்தர உலக நாடுகளில்தான் இன்று மதம் கடவுள் பற்றிய பயம் இன்னும் மிச்சமிருக்கிறது. இது ஒருவகை middle class mentality, இந்திய வாக்களார்களைப்போல உலகிலும் இந்த நடுத்தர வர்க்கம் அதிக எண்ணிக்கையில் உள்ள வரை அவர்கள் சார்ந்த சம்பவங்கள் வாழும், பலப்பல வேஷங்கள் கட்டி, அவ்வளவுதான்.

Sep 26, 2011

தமிழக உள்ளாட்சித்தேர்தல்-2011

அனேகமாக இந்த உள்ளாட்சித்தேர்தல் சம்பந்தமான கூத்துக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி கூட்டணிகளை விரும்பாமல் தனியே போட்டியிட முடிவு எடுத்த நிலையில் இதன் ஆழமான காரணம் என்னவென்று எனக்குத்தோன்றியதை இங்கே எழுதுகிறேன்.



சதாரணமாக தேர்தல் என்றாலே அதிமுகவும் சரி திமுகவும் சரி கூட்டணி கட்சிகளுக்காக தூது விடுவதும், அதை சாக்காக வைத்துக்கொண்டு ராமதாஸ், திருமா, காங்கிரஸ், கம்னியூஸ்ட்,தேமுதிக போன்றவைகள் பேரம் பேசுவதும் நடக்கும். இதுதான் இத்தனை தேர்தலில் நாம் கண்டது. இப்போது, திமுக என்னடாவென்றால் காங்கிரஸ் வேண்டாம் என்கிறது. ராமதாஸ் என்னடாவென்றால் எனக்கு அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்கிறார். அதிமுக என்னடாவென்றால் எந்த கட்சியும் வேண்டாம் என்கிறார்கள்.

இதில் மக்களுடந்தான் கூட்டணி என்ற புரட்சிகலைஞர் அதிமுக வெளியே அனுப்பிவிட்டதில் மிகுந்த வருத்ததுடன் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரிய கட்சிகள் ஆட்சி அமைக்க சின்ன கட்சிகளை கூப்பிட்ட காலம்போய். சின்ன கட்சிகள் இப்போது பெரிய கட்சிகளின் கடைக்கண் பார்வைக்ககாக காத்திருக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

நீண்டநாளக எல்லாருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும், இந்த ராமதாஸை இரண்டு பெரிய கட்சிகளும் வேண்டாம் என்று தைரியமாக ஒதுக்காததால்தான் அந்த ஆள் அங்கும் இங்கும் வசதிப்படி பேரம் பேசுகிறார் என்று. ஆனால் இன்று அப்படி பட்ட ஒரு முடிவை அவரே எடுத்திருக்கிறார்.

கிட்டதட்ட எல்லா கட்சிகளும் தனித்து நிற்க முயற்சிக்கின்றன, ராமதாஸும் திருமாவும் ஒருவேளை கூட்டணி போடலாம், அதிமுகவும் கம்னீயூஸ்ட் கட்சியும் கூட்டணிக்குள் வரலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன வென்றால், போன சட்டசபைத்தேர்தல் முடிவுகள் எல்லா அரசியல் கட்சிகளை குழப்பிவிட்டது என்பதுதான் உண்மை.
திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்தார், திருமா இருந்தார், காங்கிரஸ் இருந்தது. இன்னும் சில்லரைக்கட்சிகள் எல்லாம் இருந்தும் திமுக படுதோல்வியை அடைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக கம்னியூஸ்ட், மற்றும் சில்லரைக்கட்சிகள் இருந்தன அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள்.

உண்மையில் கூட்டணி கணக்கைப்பார்த்தால் திமுக கூட்டணிதான் வென்றிருக்கவேண்டும், பணநாயகம் வேறு ஆதரவாக இருந்த நிலையில். மதிமுக இல்லாத நிலையில் அதிமுக கூட்டணி ஒரு பலவீனமான கூட்டணிதான். என்றாலும் இந்த இமாலய வெற்றி எங்கிருந்து ஒரு பலவீனமான கூட்டணிக்கு கிடைத்தது.

இதற்கான காரணம் எந்த கட்சிக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை, அதைதெரிந்து கொள்ளத்தான் திமுகவும் அதிமுகவும் தனியாக நிற்கின்றன. திமுகவுக்கு ஒரு சந்தேகம் நாம் காங்கிரஸுடன் இருந்ததால் தான் தோற்றோமா இல்லை நாம் செய்த பொற்கால ஆட்சியில் மக்களின் வெறுப்பினால் தோற்றோமா என்று. ஆகையால் காங்கிரஸை கழற்றிவிட்டு அந்த சோதனையை நடத்தப்பார்க்கிறது. அதே நேரம் 2G குழப்பங்களில் கைகொடுக்காத காங்கிரசை கொஞ்சம் பயமுறுத்தவும், 63 இடங்கள் கேட்டு பாடாய்படுத்தினீர்களே தனியாக நின்று உங்கள் செல்வக்கை நீங்களே சுயபரிசோதனை செய்துகொண்டு வாருங்கள் என்ற தகவலையும் காங்கிரஸீக்கு கொடுக்க நினைக்கிறது திமுக.




ராமதாஸ்தான் முன்பே கழண்டுகொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆகையால் அவரை கழட்டி விடத்தேவை இல்லாமல் போய்விட்டது. ராமதாஸீக்கும் ஒரு சந்தேகம், போன நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம் ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை, பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி என நம்பி திமுகவுடன் இருந்தோம் அதுவும் படுதோல்வி அடைந்து விட்டது. உண்மையில் இனி எங்கிருந்தாலும் நமது செல்வாக்கு உயரப்போவதில்லை, உண்மையில் நமக்கு எத்தனை பேர் ஓட்டுப்போடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

தினமலரில் ராமதாஸ் பற்றி ஒரு செய்திவந்தால் அதற்கு வருகிற கமெண்ட்களின் எண்ணிக்கை சில நிமிடங்களில் 100ஐத் தாண்டிவிடுகிறது. அத்தனையும் வசவுகள்தான். அதெல்லாம் படிக்கிற வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை, யாராவது உதவியாளர்கள் அதை படித்துகாண்பிப்பார்கள் என்று நம்புவோம். இப்படி மக்களின் மனநிலை தனக்கு எதிர்மறையாக இருப்பதால் உண்மையில் தனது செல்வாக்கு என்னதான் என்பதை புரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை முயற்சியில் அவர் இருக்கிறார், ஆனால் அதை தனியே செய்தால் நிச்சயம் முடிவு என்ன என்பது ஓரளவு புரிவதால் திருமாவை கையைப்பிடித்து இழுக்கிறார். திருமாவின் நிலை இப்போது மிக மோசம்.

இலங்கை விஷயத்தில் தொடங்கி பல வகைகளில் தன்மீதான நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் அவர், எல்லோரும் கழட்டி விட்ட நிலையில் எதையாவது பிடித்துக்கொண்டு கரைசேர நினைக்கிற நிலையில் ராமதஸை கெட்டியாக பிடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அதிமுகவின் நிலை ஒருவகையில் ஒரு தீர்மானமான நிலைதான், சட்டமன்ற தேர்தலில் பெற்ற இமாலய வெற்றி, தேமுதிக இல்லாமல் இருந்திருதால் கூட கிடைத்திருக்கும் என்று தீர்மானமாக நம்புகிறார்கள். காரணம் மக்களின் திமுக மீதான வெறுப்பு. வைகோ தனியாக நின்றிருந்தால் கூட கணிசமாக ஜெயித்திருப்பாரோ என்னவோ? வேறுவழியில்லாமல் அதிமுகவுக்கு மக்கள் குத்தி தள்ளிவிட்டார்கள்.

ஆகையால் அந்த வெறுப்பின் தொடர்ச்சி இன்னும் இருப்பதால் அதை உபயோகப்படுத்தி தனியே நின்றே எளிதாக ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைப்பது சரிதானே? வரிசையாக திமுக முன்னாள்கள் உள்ளே போய்க்கொண்டிருக்க மக்களிடம் எந்த பதற்றத்தையும் காணோம் அதையெல்லாம் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜான்பாண்டியனை கைது செய்ததற்கே பரமகுடி பற்றி எரிந்த நிலையில், இத்தனை தலைவர்களை கைதுசெய்தும் பேரியக்கமாக இருக்கிற திமுகவினால் ஒரு வலுவான எதிர்ப்பு போராட்டாத்தை நடத்தமுடியாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் கைதுகளை ரசிக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்ததால் தான்.

ஆகையால் இந்த திமுக எதிர்ப்பு உணர்வை முதலாக்க ஜெயலலிதா நினைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.



இந்த தேர்தல் நடந்து முடியும்போது பல சில்லரைக்கட்சிகளின் சுயரூபம்,பலம் தெரிந்துபோகும் என்றுதான் தோன்றுகிறது. அதனடிப்படையில் அடுத்த தேர்தலுக்கான சீட்டு பேரங்கள் முடிவாகக்கூடும். 63 இடங்களை கேட்ட காங்கிரஸ் இந்தமுறை மிக மோசமான காலத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சீமான் போன்றவர்கள், ராஜீவ் கொலையில் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் கைதிகளை பற்றிய சர்ச்சைகள், நிச்சயம் காங்கிரஸீக்கு ஒரு தலைவலிதான். கிட்டதட்ட காங்கிரஸீன் தமிழக நிலையை பரிதாபமாக்கும்.அதனை தூக்கி நிறுத்தும் சக்தி கொண்ட எந்த தலைவரும் இப்போது காங்கிரஸில் இல்லை, இனி வரப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை, ஜீ.கே.வாசன் ஒரு பரபரப்பான தலைவராக இல்லை, சிதம்பரம் பெயர் கெட்டுக்கொண்டே இருக்கிறது. மற்ற தலைவர்கள் கேட்கவே வேண்டாம், ஈவிகேஸ் கொஞ்சம்

பேசிக்கொண்டிருந்தாலும் அதேல்லாம் தலைமைபண்பை கொண்டு கட்சியை தூக்கி நிறுத்துமா என்று தெரியவில்லை. தங்கபாலு தனது குலாம் நபி ஆசாத்துடன் உள்ள நட்பின் காரணமாக தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடித்து ஒரு வழியாக்கிவிடுவார் என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் இருந்து ஒரு எம்பியும் தேறாது என்று காங்கிரஸ் தலைமைக்கு என்று தெரிகிறதோ அன்றுதான் ராகுல் காந்தி, உத்திரப்பிரதேசத்தில் வீடுவீடாக செல்வதுபோல் இங்கும் வரக்கூடும்.

தேமுதிக இதில் மொசமாக பாதிக்கப்போகும் கட்சியாக இருக்கும், சரியாக செயல்படாத நிலையில் அவர்களின் செல்வாக்கு குறைந்து காணப்படுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இப்படி எல்லா கட்சிகளும் ஒருவகை சுய பரிசோதனையில் விருப்பத்துடனும் விருப்பமில்லாமலும் இறங்கி இருக்கின்றன.



ஆகவே இந்த தேர்தலில் பல கட்சிகளின் எதிர்கால முடிவாகும், மதிமுகவையும் கம்னீயூஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு தொலைக்காட்சி சானல்கள் இருப்பதால் அதுவும் களைக்கட்டும். பணநாயகத்தின் விளையாட்டு உண்டாகுமா இல்லையா என்றுதெரியவில்லை, இப்போதே ஸ்டாலின் தமிழக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போக இருப்பதாக அறிவித்துள்ளார். சோ அய்யர் விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றே தோன்றுகிறது. தமிழகம் இன்னொரு ஜனநாகயக் திருவிழாவுக்கு தயாராகிறது. முடிவோடு சந்திப்போம்

தவநெறிச்செல்வம்.

Aug 25, 2011

அமெரிக்கபயணம்



அமெரிக்காவுக்கு வந்து கிட்டதட்ட 2 மாதம் ஆகிவிட்டது, தொடர் பணிசுமையால் எதுவும் எழுதமுடியாத ஒரு நிலை, என்றாலும் இங்கு வந்தபின் இந்த நாட்டின் சூழல் பற்றிய விஷயங்களை என்னை கவர்ந்தவைகளை எழுத நினைக்கிறேன். டெல்லியில் இருந்து சிகாகோ வழியாக அல்பணி என்கிற நான் தங்கவேண்டிய நகரத்திற்கு வந்து சேர்ந்தேன், சுமார் 13 மணி நேரபயணம் டெல்லியில் இருந்து சிகாகோ பிஸினஸ் கிளாஸ் டிக்கட் என்பதால் நமது ஏர் இந்திய விமானத்தில் நல்ல கவனிப்புகள், மற்றும் இருக்கை கிட்டதட்ட ஒரு படுக்கை போல மிக சுகமாக மாறிக்கொண்டது ஒரு களைப்பும் இல்லாமல் சிகாகோவில் வந்து இறக்கி விட்டது. நேரமாற்ற குழப்பங்கள்தான் நமக்கு பெரிய சங்கடம்.

சிகாகோ ஏர்போர்டில் இருந்து வெளிவந்தால் வெளியே ஒரு ஈ காக்காவையும் காணும். நாம் நம் சென்னை திருச்சி ஏர்போர்ட் வாசலில் காத்துக்கிடக்கும் பல பயணிகளின் உறவுகளையும் நண்பர்களை கண்ட பழக்கத்ததில் இங்கு அப்படி கூட்டமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அப்படியாருமே இல்லை, எனது மொத்தமே ஒர் 10 பேருக்குள்ளாக மனிதர்கள் காணப்பட்டார்கள், அதுவும் இந்தியாவில் இருந்து வரும் உறவினர்களை அழைப்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன், அதில் ஒரு இந்தியர் நான் அடுத்த விமான நிலையத்திற்கு செல்லும் தொடர்வண்டியை பிடிக்க வழி சொன்னார்.

அந்த தொடர்வண்டியை பிடித்து அடுத்த விமானம் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தேன். எல்லா இடத்திலும் அத்தனை பெரிய மனித கூட்டம் இல்லை. பிறகு பெரிய காத்திருப்பு நான் அமெரிக்க நேரப்படி அதிகாலை 7 மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்து விட்டேன், எனது அடுத்த விமானம் மாலை 4 மணிக்கு ஆகையால் அதிகநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமிகவும் தண்டனையான விஷயம்தான்.

சரி அமெரிக்க வாழ்க்கையைப்பற்றி எழுதுதலாம், எங்கும் பசுமை நான் இருந்த இடம். குளிர்காலத்தில் ஒரே பனிக்காடாக மாறிவிடுமாம், நம் இமய மலை போல. செப்டம்பர்வரை கோடைகாலம் என்பதால் பசுமை. அழகான ஆறுகளை கடந்துதான் எனது பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

தங்கிய விடுதியின் ஜன்னலைத்திறந்தால் ஒரு பூங்காவில் இருப்பதைப்போல்தான் சுகமாக இருக்கிறது. எங்கும் யாரையும் உதவி கேட்கதேவையே இல்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் நம்மூரில் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதுபோல் கார் வாடகைக்கு கிடைக்கிறது. அதில் இருக்கும் GPS(GLOBAL POSOTIONING SYSTEM) உலக வரைபட உதவி இயந்திரம் கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் கிடைக்கிறது. அதில் நாம் செல்லும் விடுதியின் முகவரியை தெரிவித்தால் நாம் எப்படி போகவேண்டும் என்று பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வழி சொல்கிறது. சாலைகளும் காரோட்டிகளும் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் நமக்கு மிக சுலபமாக பழக்கமே இல்லாவிட்டாலும் கார் ஓட்டி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியும். தவறாக மாறிப்போய்விட்டால் கூட இருக்கிற இடத்தில் இருந்து மீண்டும் வழி சொல்கிறது. அமெரிக்க பழக்கமானவர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் என்னைப்போல் நாட்டுபுறத்தானுக்கு ஒரு அதிசயம்தான்.

பிறகு அமெரிக்க இரவு நடன விடுதிகள். அங்கே சிகரெட்புகையும், இசையின் ஒலியும் கட்டுக்கடங்காதது. வெள்ளிக்கிழமை இரவுகளில் தொடங்கும் கூத்துக்கள் மறுநாள் காலை வரை தொடர்கிறது. அங்கே தனியாக ஆடிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று நீங்களும் நடனத்தில் கலந்து கொள்ள வேண்டியது. அவருக்கு விருப்ப பட்டால் அவள் உங்களுடன் சேர அதன் பிற்கு நடக்கும் உற்சாக நிகழ்வுகளை இங்கே எழுத முடியாது. என்னால் அதிக நேரம் உள்ளே இருக்க முடியவில்லை புகை மூட்டத்தால். மற்றபடி அமெரிக்க பெண்களின் உடையும் நிறமும் அவர்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

எல்லா இடத்துலும் ஒரு புன்னகை கிடைக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு விலை. எங்குபோனாலும் நல்ல வரவேற்பு. ஆனால் பணம் பிரதானம். எல்லாம் குறியீடுகளுடனான வாழ்க்கை. எல்லா குறியீடுகளையும் புரிந்து கொள்ள பழகவேண்டும். காலநிலை நேர மாற்றங்கள் பழக சிரமப்படும் பின்னர் நம்மை அடிமையாக்கிவிடும் இந்த வாழ்க்கை.

இப்போது சிகாகோ விமான நிலைத்தில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் சுகங்களை எந்த சிரமமும் இல்லாமல் கட்டணத்திற்கு தருகிறார்கள். உங்களின் சுதந்திரம் 100 சதம் உத்திரவாதம். ஆனால் நிற வேற்றுமை உணர்வுகள் இல்லாமல் இல்லை. இல்லை என்பதுபோல் காட்ட முயற்சிகள் நடைபெறுகிறது. தொலைக்காட்சி சானல்களில் காணும்போது மேலே சொன்னவைகளை எதுவும் காணமுடியவில்லை. அதெல்லாம் காசு கொடுத்து காணவேண்டிய விஷயங்கள்.

உணவு, என்னைப்போல் சைவர்களுக்கு பிரச்சினைதான். சமைக்க தேவையான எல்லா விஷயங்களும் இந்திய கடைகளில் கிடைக்கின்றன. சமைக்கலாம்.முஸ்லீம் நண்பர் ஒருவர் என்னுடன் இங்கே பணியில் பயிற்சிக்காக வந்தார். அவருடன் ஒரு மசூதிக்கு சென்றேன். அங்கே பல நாட்டினரை சேர்ந்த இஸ்லாமியர்களை கண்டேன். நோம்பு நேரம் என்பதால் மாலையில் உணவும் தருகிறார்கள். ஒரு நல்ல சினேகம் அவர்களுக்குள்ளே. வளைகுடா நாட்டில் வெகு நாட்கள் இருந்ததால் சலாம் சொல்லுவது பழகிப்போன விஷயம் அந்த சுகம் இங்கேயும் கிடைத்தது.



நயாகரா சென்று வந்ததை மறக்க முடியாது. அங்கு போனது காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது ஒழுங்காக படியில் பார்த்து நடக்காததால். என்றாலும் நொண்டிக்கொண்டே எல்லாம் பார்த்து முடித்தேன். பிரமாண்டமான அருவிகள். குகைவழியே கீழே இறக்கி அருவியின் அருகே அழைத்துச்செல்கிறார்கள் ஒரு சாரலில் நனைந்த சுகம் கிடைக்கிறது. கனடா பகுதியில் இருந்து பார்த்தால் மிக அழகாக தெரியும் ஆனாலும் அமெரிக்க பகுதியில் இருந்துதான் விழுகிறது. ஆகையால் மிக அருகில் இருந்து பார்க்க முடிகிறது.பெரிய படகுகுகளில் கூட்டமாக ஆட்களை ஏற்றிச்சென்று அருவிக்கு அருகே கொண்டு போகிறார்கள். எதுவும் இலவசம் இல்லை. கார் நிறுத்துமிடத்தில் 10 டாலர் வசூலிக்கிறார்கள் என்றால் மற்ற விஷயங்களை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். நமது கொல்லிமலை அருவியை விட உயரம் என்று தோன்றவில்லை, ஆனால் அகலமும் நீரின் அளவும் மிக அதிகம். 5 மணிநேரம் பயணம் செய்து கண்டேன். இந்திய உணவகங்கள் இருக்கின்றன. நிறைய இந்தியர்கள் தனது பெற்றோரை அழைத்து வந்து நயாகராவை காட்டிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க வாழ் தன் மக்களின் நாகரீக உடைகளுக்குள் பொருந்தாமல் அவர்கள் நம்மவர்களாகவே இருந்தார்கள். தன் பேரப்பிள்ளைகளின் பார்வையாளர்களாக.நயாகராவைக்கண்டபோது எனக்கு என்னமோ நம்மூர் சுற்றுலா தளத்தில் இருப்பதுபோல்தான் தோன்றியது. பூங்காக்கள் வரிசைகள் என்று என்னை பெரிதாக பிரமிப்படையச்செய்யவில்லை என்று மற்றும் தோன்றியது.ரசனை குறைவானதால் இருக்கலாம்.




பெரிய வியாபர நிலயங்களில் எல்லாம் பொருட்களைப்பார்க்கும்போது எல்லாம் வாங்க தூண்டுகிறது. நல்ல விலை. அமெரிக்கர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ. குழந்தைகளுக்கு மிக நல்ல சிந்தனையைத்தூண்டும் விதத்தில் பொருட்கள் இருக்கின்றன. எங்கும் சினேகத்துடன் உதவியாளர்கள். விதவிதமான உபகரணங்கள் சொல்லிமாளாது. ஒரு புதிய உலகம் புதிய வாழ்க்கைமுறை. எல்லாமும் எல்லா சுதந்திரங்களும் விலைக்கு கிடைக்கிறது. அழகான வீடுகள் ஆனால் புயலுக்கும் மழைக்கும் பயப்படவேண்டும். நான் இருந்தபோது நியுயார்க்கிலும் வடக்கு கரோலினாவிலும் இரின் புயல் தாக்கியது. நான் இருந்த இடம் நியுயார்க்கில் இருந்து 150 மைல் ஆகையால் ஓரளவு காற்றும் நல்ல மழையும். பல சாலைகள் மூழ்கி விட்டன. மற்ற சேதங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சானல்களில் கண்டிருக்கலாம். என்றாலும் எனக்கென்னமோ இந்த வாழ்க்கை ஒரு இயந்திரத்தனமாகத்தான் தோன்றுகிறது. எதுவும் நிரந்தரமில்லை. அறிவியல் எல்லா இடங்களிலும் பொங்கிவழிகிறது. எதுவும் அறிவியல் உதவிகொண்டே பார்க்கப்படுகிறது. அதுசரியா என்றுதான் தெரியவில்லை.

எல்லா பயணக்கட்டுரைப்போல நம்மூர் இட்லிக்கும் சாம்பாருக்கும் எதுவும் ஈடில்லை என்றுதான் எழுதிமுடிக்கதோன்றுகிறது. நிறைய சீமான் மற்றும் தமிழருவி மணியனின் பேச்சுக்களைக்கேட்டேன். எல்லாம் பழயதுதான், பல மலையாளப்படங்களைப்பார்த்தேன். எல்லாம் youtube உபயம். அதைப்பற்றியெல்லாம் எழுதுகிறேன் பின்னர்.

இப்போதைக்கு இதுபோதும் என்றே தோன்றுகிறது.

Jul 11, 2011

கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!



யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை.
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
பெரியோரை வியத்தலும் இலமே!
பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

Jul 3, 2011

பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?

முதுபெறும் பத்திரிக்கையாளர் திரு.மலர்மன்னன் கருணாநிதி பற்றி திண்ணை இணைய இதழில் எழுதி இருக்கும் கட்டுரை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக பட்டது. பத்திரிக்கையாளர் "சோ"அவர்களைப்போல கருணாநிதியை கடுமையாக விமர்ச்சித்து வந்தவர் திரு மலர்மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கும் கூட திமுக தலைவர் மீது ஒரு தீராத வருத்தம் எதிர்மறை எண்ணங்கள் உண்டு. என்றாலும் அவரைப்பற்றி நல்லவைகளும் உண்டு என்பதை இந்த கட்டுரை கூறுகிறது. என் நண்பர்கள் படிக்க வேண்டி அதை இங்கே தருகிறேன்.



அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும்
கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக்
கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே,
அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே
இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில்
இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான்.

இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன்.

தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் சென்னை மாநகரில் மேட்டுக் குடியினர் வசிக்கும் கோபாலபுரம்
என்ற பகுதியில் சுயமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கியவர் மு. கருணாநிதி. உண்மையில்
எளிமையாக வாழ்ந்த குடும்பமே யன்றி வறுமையில் வாடிய
குடும்பம் அல்ல, கருணாநிதியுடையது. திரைப்படங்களுக்குக்
திரைக்கதை வசனம் எழுதும் தொழிலை மேற்கொண்டிருந்த அவர், அன்றைய கால கட்டத்தின் வெகு ஜன ரசனைக்கு ஏற்பக் கதை வசனம் எழுதிப் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி
வசனகர்த்தாவாக ஐம்பதுகளின் தொடக்க முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்தாம். ஏவி எம் செட்டியாரே வீடு தேடி வந்து ஒப்பந்தம் செய்து கணிசமான தொகையினை முன்பணமாகக் கொடுத்துச் செல்லும் அளவுக்கு அவர் தமது துறையில் முன்னணியில் இருந்தவர்தாம். அவருடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் இருந்தவரை யார் எந்த நேரம் சென்றாலும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக விருந்துபசாரம் செய்யப்படும் வீடாக அவரது வீடு இருந்தது. அம்மையாரின் கைப்பக்குவமும் அபாரமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் கருணாநிதியின் கோஷ்டியினர் என்றே
கருதப்பட்டு வந்த மயிலாடுதுறை எஸ். கருணானந்தம், வட ஆர்க்காடு மாவட்டச் செயலாளராக இருந்த முல்லை சத்தி,
ப. உ. சண்முகம், எனப் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தமையால் கருணாநிதியின் குணச் சித்திரத்தை
என்னால் ஓரளவேனும் சரியாகவே வரைந்துகொள்ள முடிந்தது.
நட்பின் இலக்கணம் தெரிந்து நடப்பவர் கருணாநிதி. நண்பர்கள் தாம் சமயங்களில் அவர் காலை வாரியதுண்டே தவிர
ந்ண்பர்களை அவ்ர் விட்டுக்கொடுத்ததில்லை. நான் இங்கு குறிப்பிடுவது கருணாநிதி கோஷ்டியினர் என்ற வட்டத்திற்குள்
வந்தவர்களைத்தான்.

அந்தக் காலத்தில் தி.மு.க. முன்னணியினரின் வருமானத்திற்கு ஆதாரம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுதான். கூட்டத்தில் பேச இவ்வளவு, வந்து போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என்றெல்லாம் பேசி வைத்துக்கொண்டு, முன்பணமாகவும் சிறிது பெற்றுக் கொண்டு பேச வருவார்கள். அன்றைய கிளைக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகள். ஒரு கூட்டம் நடத்தி முடிக்கவே திண்டாடித் திணறிப்
போவார்கள். கூட்டம் முடிந்ததும் பேச்சாளர் இரவுச் சாப்பாட்டுக்கும் வழிச் செலவுக்கும் கூட்டத்தில் பேசுவதற்காகப்
பேசிக்கொண்ட தொகையில் மீதிப் பணத்தையும் எதிர்பார்ப் பார்கள். பேச்சாளருக்கு யார் வீட்டிலாவது சாப்பாட்டுக்கு ஏற்பாடாகிவிடும். வழிச் செலவுக்கும் எப்படியாவது காசு தேற்றிவிடுவார்கள். ஆனால் பேசுவதற்காகக் கேட்ட
தொகையில் முன்பணம் போக மிச்சத்தைக் கொடுப்பதில்தான்
திண்டாட்டமாகிவிடும். அண்ணே, தேறலே அண்ணே என்று தயங்கித் தயங்கி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு
மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பணிந்து நிற்பார்கள்.
பேச்சாளர் எரிந்து விழுவார். அவருக்கு மாத வருமானம் மேடைப்
பேச்சில்தானே! அது பாதிக்கப்படும்போது எரிச்சல் ஏற்படுவது
இயற்கையே அல்லவா?

கருணாநிதியும் குறிப்பிட்ட தொகை பேசிக் கூட்டத்துக்கு வருபவர்தாம். அந்த நாளிலேயே சுயமாகச் சம்பாதித்த
பணத்தில் காரும் வைத்திருந்தார். காருக்குப் பெட்ரோல் செலவும்
தரச் சொல்லுவார். ஆனால் எனக்குத் தெரிந்து பெரும்பாலான கூட்டங்களில் அவர் பேசிச் செல்லும்பொழுது காருக்குப் பெட்ரோல் செலவாகவோ கூட்டத்தில் பேசியதற்கான தொகையோ அவருக்குக் கழகத் தோழர்களால் கொடுக்க முடிந்ததில்லை. ஆனால் அதற்காகக் கருணாநிதி சிறிதும் முகம் சுளித்ததில்லை. கட்சியை வளர்ப்பதில்தான் அவரது கவனம் முழுவதும் இருந்ததேயன்றி கட்சியில் இருப்பதை வருமானத்திற்கான ஒரு வழியாக அவர் கருதியதில்லை.
சொந்தக் காசிலேயே பெட்ரோலும் போட்டுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. இதனால்தான் மாநிலம் முழுவதும் கட்சியில் அவரது அபிமானிகளின் எண்ணிக்கை பெருகியது.

கருணாநிதி சூட்டிகையானவ்ர், கட்சியின் வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு உள்ளவர், நிலைமைகளை சமாளிக்கக் கூடியவர் என்றெல்லாம் கட்சியில் பெரும்பான்மையினருக்கு நம்பிக்கை இருந்தமையால்தான் அண்ணாவுக்குப் பிறகு அவர் முதல்வராக முடிந்தது.

உழைக்கும் வர்க்கத்தின் தோழர்கள் என்று உரிமை கொண்டாடும் இடதுசாரிக் க்ட்சிகளின் கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் நீண்ட நெடுங் காலம் நீடித்த போதிலும் கொல்கத்தா நகரின் சாலைகளில் மனிதனுக்கு மனிதன் வாகனமாய் அமைந்தது போன்ற கை ரிக்‌ஷா ஓடுவது கண்ணை உறுத்தும் காட்சியாக இருந்து வந்தது. 2005-ல்தான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா கை ரிக்‌ஷா ஒழிக்க்ப்படும் என்றும் கை ரிக்‌ஷா ஒட்டுபவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்தார். பலன் கை ரிக்‌ஷா இழுப்பவர்கள் வயிற்றுப் பிழைப்பை இழந்தனர். சிலர் கள்ளத்தனமாகத் தொடர்ந்து நகரின் ஒதுக்குப் புறங்களிலும் இருண்ட பகுதிகளிலும் கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஆனால் தமிழ் நாட்டில்
1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர் களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்.. இன்று கொல்கத்தாவில் கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலுக்கு மீண்டும் சட்டரீதியான அனுமதி வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இடதுசாரியின் நீண்ட கால ஆட்சி கை ரிக்‌ஷாவை மாநகரின் அவமானச் சின்னமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கருதியதேயன்றி, கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளியின் சுய கெளரவம் குறித்தோ, அவனது வயிற்றுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதுபற்றியோ கவலைப்படவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கொல்கத்தாவில் ரிக்‌ஷா இழுப்பவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான பிஹாரிலிருந்து பிழைக்க வந்த ஏழைகள். ரிக்‌ஷா ஓட்டும் வங்காளியைப் பார்க்க இயலாது!

சீமான்களின் உபரி வருமானத்திற்கு ஒரு வழியாகவும் சபல புத்தியின் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் கடைசிப் பணம் வரை இழப்பதற்குக் காரணமாகவும் இருந்த குதிரைப் பந்தயத்தை ஒழித்ததும் கருணாநிதி எடுத்த ஒரு முக்கிய மக்கள் நலப் பணி என்று கூற வேண்டும். (உயர் நீதி மன்றத்தில் அது அடிபட்டுப் போனது வேறு விஷயம். அதை ஒழிக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் சென்றதுதான் கருத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சம்). இதற்கு திருஷ்டி பரிகாரம்போல் அவர் மது விலக்கைக் கைவிட்டிருக்க வேண்டாம். .அதிலும் தள்ளாத வயதில் ராஜாஜி வீடு தேடி வந்து கேட்டும் மது விலக்கைக் கைவிடுவதில் அவ்ர் உறுதியாக இருந்திருக்கலாகாது. இன்று பதின்ம வயதினரும் குடிப் பழக்கத்தை ஒரு நாகரிகம்போல் பயின்றுவிட்டிருப்பதைப் பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது.

பரிசுச் சீட்டுத் திட்டத்தை அண்ணா கொண்டு வந்த பொழுது ஒரு ரூபாய்தானே ஒருவர் செலவழிக்கப்போகிறார், அதனால் அவரது பொருளாதாரம் அப்படியொன்றும் பாதிக்கப்படாது என்று
எண்ணிவிட்டார். ராஜாஜி அதையும் கண்டிக்கவே செய்தார். மக்களை அரசாங்கமே சூது ஆடப் பழக்குவது தவறு என்று எச்சரித்தார்.
ராஜாஜி எச்சரித்தது போலவே கருணாநிதி காலத்தில் பரிசுச்சீட்டு
ஒரு போதைப் பழக்கம் போலப் பரவிவிட்டது. அப்போதே அந்தத் திட்டத்தை கருணாநிதி கைவிட்டிருந்தால் பாராட்டுக்குரியவ ராகியிருப்பார்.

தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பஸ் வசதி என்ற நிலை உருவாகக் காரணமும் கருணாநிதியின் முனைப்பே என்று சொல்ல வேண்டும்.

நெருக்கடி நிலைக் காலத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. இதற்காகக் காமராஜரே கருணாநிதியைப் பாராட்டியதை நேரில் கேட்டவன் நான். அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்தபோது அக்கட்டுரையைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் மறு பிரசுரம் செய்தன. பரவாயில்லை, காமராஜர் என்னைப் பாராட்டினார் என்பதற்கு மலர் ஒரு சாட்சியாக இருக்கிறான் என்று அதைப் படித்துவிட்டுக் கருணாநிதி திருப்திப் பட்டுக்கொண்டதாகப் பின்னர் சாவி சொல்லிக் கேள்வியுற்றேன்.

அரசு அலுவலர்களுக்கு இன்று பலவாறான நலன்கள் கிட்டு வதற்கு அடித்தளமிட்டவரே கருணாநிதிதான். அதனாலதான் தி.மு.க அரசு என்றாலே அரசு ஊழியர் நல அரசு என்ற பிம்பம் தோன்றிவிட்டது.

எழுத்தாளர்கள் விஷயத்தில் கருணாநிதி எவ்விதப் பாகுபாடும் பார்க்காததையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் அவர் பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்ற வேறுபாட்டையோ, மாறுபட்ட கருத்தினர் என்ற முரண் பாட்டையோ பொருட்படுத்துவதில்லை.

அவரது ஆட்சிக் காலத்தில் நூல்கள் நாட்டுடைமை என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகவே முழு வேகத்தில் நடைபெற்று பல எழுத்தாளர் குடும்பங்களுக்கு கணிசமான நிதி உதவி கிட்டுவது சாத்தியமாகி வந்தது..

தி.மு.க. ஆட்சி என்றால் கருணாநிதி சொல்வதுதான் வேதவாக்கு என்பது தெரிந்த விஷயந்தான். இருந்தாலும் கழக அரசு. தி.மு.கழக ஆட்சி என்றெல்லாந்தான் அவர் குறிப்பிடுவது வழக்கமேயன்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது வாயில் எனது ஆட்சி என்று வந்ததில்லை!

Jun 30, 2011

மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை

மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை, பேஸ்புக்கில் வந்திருக்கிறது எனது நண்பர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறேன், சாரு பதில் சொல்வாரா தெரியவில்லை, ஆனால் மனுஷ்யபுத்திரன் மிக உயர்வாக தெரிகிறார்.



சமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.



இந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை. இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது. தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதியதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்?



ஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதா தன்னலமற்றவராக இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.



கடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.



’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்க கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ.

இந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’





இந்த இடத்தில் சாரு இன்று ’தன்னை அழிக்க, ஒடுக்க முயலும் ’ ஒரு ஒரு நிறுவனம் பற்றி ஆறு மாதத்திற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள்.


’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’





உணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்

http://www.dailymotion.com/video/xhen2c_charu-2010-charu-speechvideo_creation



உயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன் இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல் நம்பர் சாருவுக்குதான் தெரியும், எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார்? அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின் சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.



இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொல்வதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.



இன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லை



கனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.



கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றன



கனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.



இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.



கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களைச் சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.



எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லை



எதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.



சாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.



நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.



நாமார்கும் குடியல்லோம்

நமனையஞ்சோம்.

Mar 26, 2011

முருகா.


திரு. பிரபு, ஒரு மெக்கானிகல் இஞ்சினியர், உண்மையான தெய்வ பக்தியும் சிறந்த குண நலங்களும் உள்ள மனிதர் அவர் எழுதிய ஒரு பிரார்த்தனைப்பாடல் இங்கே. இறையருள் கிட்ட ஓதி மகிழலாம்.

உடற் பிணிகால், ஓம் காரனை உருகி அளத்தவை


கொற்றவன் குருபரன்
பெற்றவன் மானிடன்
உற்றவன் விளைபயன்
நிற்றவன் நான்பதர்
பற்றிய செய்கையெலாம்
பயனது பாவமானால்,
அற்றவை செய்யுங்கால்,
அறம் நீ
கருத்தில் கொளாதொழிந்ததேன்?
சிறியவன் நானுற்றது,
வினை விளை பயனே!

கொற்றவா உனை-அழைக்கும்
திறன்கால் நிற்றவன் நீ
ஏற்றது என் செய்வாய்?-எனை
தேற்ற வா முருகா . . .
உருகி நான் நிற்கிறேன்,
நற்றவை செய்தொழுக ...
உற்றவா உந்துணை கொள்கிறேன்,

பெற்றவன் நீ குரு ...
பொறுப்பது உன் கடன்
பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து,
தஞ்சமடைந்த அடியேனுக்கு
அருள் செய் முருகா . . .


by.முருகனடிமை பிரபு . . .

Mar 23, 2011

தமிழக தேர்தல் 2011


தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி, கட்சிகள் கூட்டணி நாடகங்கள் முடிந்து பிரச்சாரங்களுக்கு தயாராகிவிட்டன. நீண்ட அரசியல் ஆர்வம் உள்ள யாவருக்கும் இந்த தேர்தல் ஒரு திருவிழாதான். இந்தியாவில் எனக்கு பிடித்த கொண்டாட்டம் என்ன என்று கேட்டால் அது தேர்தல் என்றுதான் நான் சொல்லுவேன்.

காரணங்கள், பல பெரிய சிறிய மனிதர்கள் என்றில்லாமல் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு கடமையும் நினைவு கூறப்படுகிற காலம். ஓவ்வொருவரும் சில மணித்துளிகளாவது நாட்டைப்பற்றி நினைக்கின்ற காலம். ஊரெல்லாம் வண்ண தோரணங்கள், வாணவேடிக்கைகள், பலரின் நிஜ முகங்களை கிழித்துப்போடும் பொது கூட்டங்கள். ஊர்வலங்கள். என்று மொத்த நாடுமே உற்சாகத்தில் திகழும் ஒரு சுகம் இப்போதுதான்.
முக்கியமாக தொலைக்காட்சி பெட்டிகள் மக்களை வீட்டுகுள்ளேயே கட்டிப்போட முடியாத ஒரு விழா, மற்ற விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மனிதர்களை வெளியே வரமுடியாமல் கட்டிப்போட இந்த நாட்களில் தொலைக்காட்சிகளால் முடியவில்லை. காரணம் தேர்தலின் பொருட்டு அவைகள் செய்யும் விளம்பரங்கள் பல நாட்களாய் தொடர்வதால் மக்கள் அதில் அலுத்துப்போய் விடுகிறார்கள்.

ஆனால் இப்போதைய தேர்தல் தேர்தல் எனக்கு கொஞ்சம் ஆர்வமில்லாமல்தான் இருக்கிறது. மிகுந்த காரணங்கள் உண்டு. கட்சிகளிடையே பொங்கி எழுந்திருக்கும் சந்தர்ப்பவாதம், பேரங்கள்,தேர்தலுக்காக மட்டும் கூட்டு என்ற புதிய சித்தாந்ததங்கள், ஊழலில் பொங்கி திளைத்து கிடப்பவர்கள் எல்லாம் ஊழல் என்றால் என்ன என்பது மாதிரி ஒரு அப்பாவியான முகத்தோடு உலாவரும் கொடூரம். நம் பிரதமர் கூட இப்படி ஆகிவிட்டாரே என்று ஒரு ஆதங்கம்.

நல்லவேளையாக உச்சநீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் கேள்வி கேட்க ஆளிருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல்.

சரி தேர்தலுக்கு வருவோம். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கலாம் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாக எல்லாரிடமும் இருக்கும். எனக்கு அதற்கான பதில் சுலபமாக தெரியும். திருமங்கலம் தேர்தல் போல் நடந்தால் திமுக கூட்டணி ஜெயிக்கும், அல்லது அப்படி இல்லாமல் இருந்தால் அதிமுக கூட்டணி ஜெயிக்கும். ஆனாலும் வைகோவை இழந்தது அதிமுகவிற்கு இருவகையான இழப்பு, ஒன்று கூட்டணி மற்றும் பிரச்சார பலம் குறைந்துவிட்டது, இரண்டு வைகோவை ஏமாற்றிய ஒரு மோசமான சந்தர்ப்பாவதியாக ஜெ. என்னைப்போன்றவருக்கு தெரிவது.

இதில் தேர்தல் கமிஷனின் பணி பாராட்டக்குரியது என்றுதான் தோன்றுகிறது. காரணம் திமுக தலைவர் கமிஷனை கண்டிக்கிறார் என்றால் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்கள் என்றுதான் பொருள். ஆகையால் இறுதிவரை அவர்கள் அவ்வாறு செயல்பட வேண்டும் நடுநிலைமையோடு என்று எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.

சரி இதில் கட்சிகள் கூட்டு சேர்ந்திருக்கிற நிலையை பார்க்கும்போது வருகிற சட்டசபை ஒரு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக அணி வெற்றி பெற்றால் அது முழு மந்திரிசபை அமைக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது காரணம் 160 இடங்களில் அவர்கள் போட்டி இடுவதுதான். திமுக தலைவரின் தேர்தல் கணக்கு என்னவென்று புரியவில்லை, பல கணக்குகளை மாற்றும் திட்டங்களை வைத்திருக்க கூடும், கடுமையான அனுபவக்கூட்டணி திமுக அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதிமுக அணியில் காலத்தில் முடிவு எடுக்க முடியாத இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளதால் இது பலவகைகளில் இன்னல்களை கொடுக்கும், தேமுதிக கூட பண்ருட்டியாரை இரண்டாம் இடத்தில் வைத்து கொஞ்சம் அரசியல் காய்களை நகர்த்துகிறது என்பது தெளிவு, இப்போது அதிமுக அணி ஒரு பலம் பொருந்திய அணி போல காணப்படுவது உண்மை ஆனால் அதன் அனுபவ குறைவு திமுகவுக்கு மிகவும் சாதகமான சூழலை உண்டாக்கும்.

சரி மக்களின் மனநிலை எப்படி என்றால் சிறிய உதாரணம் திமுக தலைவர் சென்னை விட்டு திருவாரூருக்கு போனதும், தளபதி ஆயிரம் விளக்கு விட்டு குளத்தூருக்கு போனதும் ஒரு உதாரணம், 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று சொல்லும் தலைவர்களே தாங்கள் போட்டி இட்ட தொகுதிகளில் போட்டி இட முடியாத நிலை இருப்பது மக்களின் மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கிராமப் புறங்களில் இந்த பாதிப்புகள் இல்லாமல், இலவச தொலைக்காட்சி பெட்டியும், 108 சேவையும் சமையல் வாயு இணைப்பும் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஆளும்கட்சி இருப்பதுதான் சோகம், இன்றைய ஊடகங்கள் நகரங்கள் அளவுக்கு செய்திகளை கிராமங்கள் தோறும் பரப்புகின்றன என்பது கவனிக்கவேண்டியது. 5 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்த தலைவர்கள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானதற்காக சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழ் மக்கள் விரைவில் திமுக தலைவரின் வாயால் திட்டு வாங்க போகிறார்களா அல்லது வாழ்த்து பெறப்போகிறார்களா என்பதை மே 13 க்கு பிறகுதான் தெரியும்.

இந்த தேர்தலின் பிரச்சார நாட்களை 17 நாட்களாக தேர்தல் கமிஷன் குறைத்திருப்பது ஒரு வித்தியாசமான மாற்றம், இது பல சட்டவிரோத பிரச்சினைகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும். என்றே தோன்றுகிறது. இதெல்லாம் திமுக தலைவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்காத விஷயம். மற்றும் கடுமையான சோதனைகளால் பணம் புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் ஒரு வகையில் இந்த தேர்தலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளாகும்.

போகப்போக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Mar 22, 2011

ஜப்பான் அணு விபத்து கொஞ்சம் விளக்கமாக.


புக்குஷிமா தய் இச்சி அணுமின் நிலையம்

(படங்கள் விக்கீபிடியாவிலிருந்து)



மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் ஜப்பான் புக்குஷிமா நகரில் உள்ள தய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள BWR அதாவது Boiling water Reactor. இது ஒரு கனமான காங்ரீட் கட்டிடம், இதன் அளவு என்ன என்பதற்கு ஒரு சிறிய ஓப்புமை. அதாவது எண் 5 குறிக்கப்பட்டுள்ள இடம் மட்டும் 40 அடி நீளம் 40 அடி அகலம் உள்ளது சுமார் 35 அடி உயரம் உள்ளது. அப்படியானால் மொத்த அணு உலையின் நீள அகலம் எவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.




இதில் எண் 21, 10, 20, 2, இவையெல்லாம் கடுமையான காங்ரீட் சுவர்கள் இவைகளின் கனம் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும்(சரியான அளவு தெரியவில்லை). எண் 11 ஆரஞ்சு நிறத்தில் உள்ள இருப்புத்தகடு அதுவும் மிகுந்த கனம் உள்ளது. இந்த கனமான அமைப்புகள் அதிலிருந்து வரும் அணு அலைகளை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. இதில் வெடி விபத்து ஏற்பட்டது எண் 22, 26 அமைந்துள்ள மேற்கூரை பகுதியில்தான், எண் 22, 26 அணு உலைகளில் யுரேனியம் அல்லது அதுபோன்ற அணு உருளைகளை கையாளும் கிரேன் உள்ள பகுதி. மேற்பகுதியில் ஏற்பட்ட வெப்பநில்நிலை அதிகரிப்பால் அந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இங்கே ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் தொழில் பாதுகாப்பு முறைகளில் மிக கவனம் உள்ளவர்கள் கூடவே மனிதர்களின் ஆரோக்கியத்திலும் மிக கவனம் உள்ளவர்கள், ஆகையால் தங்களின் பாதுகாப்பு அரண்களை எந்த அளவுக்கு செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிரச்சினை எங்கே.

மேலே உள்ளப்படத்தில் மூன்று இடங்களில் அணுக்கதிர் உருளைகள் பாதுகாக்கப்படுகின்றன. எண் 3ல் புதிய அணு உருளைகள், எண் 1ல் செயல்பாட்டில் உள்ள உருளைகள் அவைகள்தான் வெப்ப உற்பத்தியில் இருக்கின்றன. எண் 27ல் பயன்படுத்தப்பட்டு சொற்ப அணு கதிர்வீச்சு உள்ள உருளைகள் (spent fuel rod).

சரி இந்த அணு உலைகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்ப்போம். இந்த அணு கதிர் உருவாக்கும் உருளைகளை உலைகளுக்குள் வைத்து சிறிய அணுவைக்கொண்டு அதில் அணு கதிர் வீச்சை உருவாக்குகிறார்கள், அதன் பெயர் ஆங்கிலத்தில் chain reaction அதாவது அதில் இருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் அடுத்த அணுக்களைத்தாக்கும்பொது அது மேன்மேலும் அது சங்கிலித்தொடர்போல போய்க்கொண்டே இருக்கும் அந்த கலத்தின் உள்ளே அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோழிய இந்த தொடர்ச்சி நிற்காது. இந்த சூழலில் மிக அதிகமான வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தை தண்ணீரை சூடாக்க உபயோகப்படுத்தி நீராவியாக்கி அந்த நீராவி மூலம் மின் உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த அணு உருளைகளின் அணுக்களை கட்டுப்படுத்த எண் 39 கட்டுப்படுத்தும் உருளைகள் என்கிற control rod உள் செலுத்தப்பட்டுகின்றன, இதனால் அணு உலையின் செயல் நிறுத்தப்படும். காரணம் இந்த control rod என்பது உலைக்குள் இருக்கும் அணுக்களை தனக்குள் கவர்ந்துகொள்ளும் பண்பு வாய்ந்தது, அதனால் chain reaction நடைபெறுவது தவிர்க்கப்படுகிறது. பூகம்பம் வந்த அன்று இந்த கட்டுப்படுத்தும் உருளைகள் தானியங்கி கருவி மூலம் சரியாக செயல்பட்டு அணு உலை செயல்பாட்டை கட்டுப்படுத்திவிட்டன. ஆனாலும் வெப்பம் அதிகரிக்க காரணம்.

1.பக்கத்தில் எண் 5 ல் உள்ள எண் 27ல் பாதுகாக்கப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட உருளைகள் இருந்த தொட்டியின் தண்ணீர் அளவு குறைந்து அது தீ பிடித்தது.
2.மொத்த அணுமின் நிலையமும் மின் வெட்டு ஏற்பட்டு பிரதான அணு உலையின் குளிர்விக்கும் சாதனம், பம்புகள் செயல்பட முடியாமல் போனது.

சாதாரணமாக மின் வெட்டு ஏற்பட்டால் டீசல் ஜெனரேட்டர் செயல்பட்டு குளிர்விக்கும் பம்புகளை செயல்படுத்தும், அதுவும் தீர்ந்து போனால். பாட்டரிகள் செயல்ப்பட்டு 8 மணி நேரத்திற்கு பம்புகளை செயல்படுத்தும்.



ஜப்பானில் பழய அனுபவங்களின்படி மின் வெட்டு பூகம்பங்களினால் ஏற்படும்போது அதனை சரி செய்ய சில மணிநேரங்களே ஆகும் அதனை கணக்கில் கொண்டுதான் இந்த கால அளவுக்குள் எல்லா அவசர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் அதனைத்தொடர்ந்த சுனாமியும் ஜப்பான் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் வந்ததுதான். ஜப்பானின் கட்டிடங்கள் மற்றும் பல அமைப்புகள் சுமார் 7 ரிக்டர் அளவு பூகம்பத்திற்கு தாங்க கூடியதாக கட்டமைக்க பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் 9 ரிக்டர் அளவில் வந்ததும், கூடவே சுனாமியும்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

இப்போது கடல்நீரைக்கொண்டு தற்காலிகமாக தீயணைப்பு எந்திரங்களாலும் ராணுவ ஹெலிக்காப்டர்களாலும் தண்ணீர் கொட்டி குளிர்விக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நேற்றைய நிலவரப்படி மின் நிலையம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வரும் நாட்களில் குளிர்விக்கும் பம்புகள் இயங்கத்தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பின் ஒரு பாதுகாப்பான நிலைவரும். அதுவரை எதுவும் சொல்வதற்கில்லை.

அதற்குள் ஏற்பட்ட அணுக்கசிவால் உணவுப்பொருட்கள், மற்றும் தண்ணீர் போன்றவற்றில் அணு கதிர்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் ஒரு பாதுகாப்பற்ற நிலைதான் இவ்வளவும்.

Mar 18, 2011

ஜப்பானில் இன்றைய நிலமை(18/3/2011)

இன்றுகாலை முதல், பாதிக்கப்பட்ட அணுமின்நிலையத்தில் எமர்ஜென்சி டீசல் மின் உற்பத்தி இயந்திரம் செயல்படத்தொடங்கிவிட்டது. அதனால் தண்ணீர் மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள் மெல்ல செயல்படத்தொடங்கும், ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்குவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த முன்னேற்றம் ஒரு நல்ல அறிகுறிதான்.

ஆனால் உலகத்தில் அதிக வயதானவர்கள் உள்ள தேசம் என்பதால், இந்த நிலைமையில் அவர்களை பாதுகாப்பது மிக சிரமாக இருக்கிறது. பலர் காலநிலை மோசம் மற்றும் நல்ல இருப்பிடம் இல்லததால் மரணமடைந்திருக்கிறார்கள்.

Mar 17, 2011

ஜப்பானில் நடப்பதென்ன? ஒரு எளிமையான விளக்கம்.


இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் அணு உலைகளை குளிர்விக்கும் அமைப்பு செயல்படவில்லை, கூடவே சாதாரணமாக அணுமின்சாரம் தயாரிக்க உதவும் கதிர் இயக்க பொருளான யுரேனியம் உருளைகள் எப்போதும் நீரின் அடியிலேயே பாதுகாக்கவேண்டும். அல்லது அது வெளியில் தெரியத்தொடங்கினால் அது உருகத்தொடங்கிவிடும். அந்த உருகுவது என்பது மிக மோசமான ஒரு விளைவு. பல அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம். அப்போது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான ஒரு அழிவைக்கொடுக்கும்.

அந்த உருளைகள் இருக்கும் ரீயாக்டர் என்கிற கொதிகலனை குளிர்விக்க பல முறைகளை தொடர்ந்து செயல்படுத்திப்பார்த்தும் ஓன்றும் நடைபெறவில்லை,இன்னும் அதன் வெப்பத்தை தணிக்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று புரியவில்லை. கடல் நீரை கொண்டும், ஹெலிக்காப்டர் மூலமும் தண்ணீர் கொட்டிப்பார்க்கிறார்கள் ஓன்றும் வெற்றிப்பெற்றதாக தெரியவில்லை, ஆகையால் ஒரு பெரிய விளைவை எதிர்பார்த்து உலகமே பயந்து போய் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இங்கே மனித முயற்சி தாண்டிய இரு விஷயம் நடைபெறவேண்டுமோ என்று தோன்றுகிறது.

Mar 12, 2011

ஜப்பானில் பயங்கர சூழல்



ஜப்பானில் பயங்கர சூழல் பூகம்பங்கள், சுனாமி, அணுமின்நிலையம் வெடித்தது இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன, நண்பர் முருகவேல் அங்கிருக்கிறார், நேற்று தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. எங்கும் மின்சாரம் இல்லை, இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைத்தது. அவர் போனில் சொன்னது அப்படியே.

நான் 25ம் மாடியில் இருந்தேன் பூகம்பம் தொடங்கியவுடன் பக்கத்து கட்டடங்கள் சினிமாவில் ஆடுவதுபோல் ஆடத்தொடங்கின, முதலில் வழக்கமான சின்ன பூகம்பம் என்று நினைத்து சிர்த்துக்கொண்டிருந்த ஜப்பானியர்கள் ஆட்டம் அதிகமாக தொடங்கியதும் புரியாமல் பதற்றத்துடன் அழத்தொடங்கி இருந்தனர், நானும் எனது நண்பரும் அடுத்த 5ம் நிமிடத்தில் தரைத்தளத்தை எட்டி இருந்தோம் வரும் வழியெல்லாம் மனிதர்கள் புரியாமலும் செய்வதறியாமலும் ஓடிக்கொண்டிருந்தனர்.



எனக்கு ஓடி வந்த ஓட்டத்தில் காலெல்லாம் பயங்கர வலி. 15 கிமீ நடந்தே வீடு வந்தேன். நான் இருப்பது டோக்கியோ என்பதால் சுனாமி தாக்குதல் பகுதியில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவு என்பதால் வெள்ள பாதிப்பு இல்லை.
இன்று காலை கடைகளில் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை, இன்று காலை கடுமையான வெடிசப்தத்துடன் ஒரு அணுமின் நிலையம் வெடித்துள்ளது. என்ன நடக்கும் என்று புரியவில்லை. என்றாலும் இன்று மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணையம் செயல்படத்தொடங்கி இருக்கிறது.

வீட்டில் இருந்த அரிசியை மின் அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டதாகவும், இந்தியர்கள் நாளை முதல் விமானசேவை மீண்டும் தொடங்குவதால் நாட்டுக்கு திரும்ப முயல்வதாகவும் கூறினார்.

Mar 7, 2011

பின் நவினத்துவம் பற்றிய ஒரு விளக்கம்.

எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியது.

1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.



2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.



3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.

Feb 24, 2011

மதங்களும் சில விளக்கங்களும்

பகவத் கீதை இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்திற்கு எப்படி திருகுரான் கடமைகளை கூறுகின்றதோ, கிருஸ்துவத்தில் எப்படி விவிலியம் கூறுகின்றதோ, புத்த மதத்தில் எப்படி திரிபிடகா கூறுகின்றதோ அவைகளை பின்பற்றிதான் மதம் தனது பாதையை செலுத்துகிறது. இதில் ஏற்படுகிற புத்தி ஜீவிகளின் குறும்புகள்தான் மதங்களிடையேயான பிரச்சினைகளுக்கு காரணம். இப்படி எல்லா மதங்களுக்கும் ஒரு புனித நூல் இல்லாமல் இல்லை. ஒரு மதத்தை சேர்ந்தவன் தனது வாழ்முறைக்கு வேண்டிய கடமைகளை அல்லது சிரமங்களைப் பற்றிய சந்தேகங்களை அந்த புத்தகத்தில்தான் தேட வேண்டியுள்ளது.

மத பெரியவர்களின் பணி, அதில் உள்ள விஷயங்களை சராசரி மனிதனின் தேவையான தருணங்களில் சொற்பொழிவுகளாகவோ அல்லது எழுத்துக்களாகவோ மக்களை சென்று அடையச்செய்யும் பணியில் இருக்கிறார்கள். இதைதான் சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும், திருக்கோயில்களும், மடங்களும் செய்யவேண்டும், அவரவர் வாழ்முறை சிரமங்களை எல்லாம் களைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர இப்படி ஓர் அமைப்பு உருவானது.

இந்து மதத்தின் தொடங்கிய காலம் மிகவும் பழமையானது என்பதோடு, அதன் பழமையான கோட்பாடுகள் மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கீதை வழங்கப்பட்டது மகாபாரதத்தில்தான். அதற்கு முன் சட்டங்களை வகுக்க காரணமானது மனுஸ்மிருதிதான். ஆனால் மனு தர்மம் தற்போதைய பெரியார், அம்பேத்கார் இவர்களின் காலம் வரை பின்பற்ற பட்டிருக்கிறது. உண்மையில் இந்த சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்க தொடங்கியது இவர்கள் இருவர்தான் என்று தெரிகிறது. இதற்கு முன் இத்தனை நீண்ட காலமாக இந்த மனுதர்மம் எப்படி எல்லோராலும் கடை பிடிக்க பட்டது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. மிகுந்த ஒரு அடிமை வாழ்வை மிக சாதாரணமாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிக மேன்மையான வாழ்வை பிராம்ணர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

என்றாலும் பெண் என்ற விஷயத்தில் எல்லா மதங்களும் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றன அதன் ஆழமான சூட்சுமம் என்ன வென்று தெரியவில்லை. இன்றைய பிராமணர்கள் கூட அந்த விஷயத்தில் மனுதர்மத்தை தொடரவில்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்கள் தங்கள் கர்ப்ப பைகளை வெட்டி எறிய வேண்டும் என்று பெரியாரின் சிந்தனை மிகுந்த ஆழமான புரிதலுக்குரியது. ஒரு கடுமையான அடிமைத்தனத்தை வேறோடு பிடிங்கி எறிய வேண்டிய, ஒரு தாங்க முடியாத ஆழமான கோபத்தின் வெளிப்பாடு அது. இதை எல்லாம் உணரும் போது பெரியாரின் பிரமாண்டம் ஒரு விஸ்வரூபமாக தெரிகிறது.

ஆதி சங்கரர் தொடங்கி எல்லா மதவாதிகளும் தத்தம் மதங்களின் குறைபாடுகளை அப்போதைய வாழ்முறையை அனுசரித்து மாற்றி அமைத்திருக்கிறார்கள், நரபலி இந்து மதத்தில் இருந்து நீக்கப்பட்டது ஒரு உதாரணம். எல்லா மதங்களிலும் பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன, மதபற்றாளர்கள் அதை மறுக்கத்தான் செய்வார்கள், மிகக்கடுமையான சட்டங்களை கொண்ட இஸ்லாம் கூட இதில் விதி விலக்கில்லை, ஏனென்றால் உலகின் தற்போதைய வளர்ச்சியில் வாழ் முறைகளின் சிரமங்கள் காரணமாக இவைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாராணமாக இஸ்லாம் சட்டங்கள் அதிகம் கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் மது முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், புகைபிடிக்கும் சாதனங்கள் மக்கா மதினா தவிர மற்ற இடங்களில் தாராளமாக கிடைக்கிறது. இத்தனைக்கும் திருக்குரான் மற்றும் நபிமொழிகள் எந்த வகையான போதை வஸ்துக்களையும் கடுமையாக எதிர்க்கிறது.

இது தொடர்புடைய நபிமொழி கீழே:

"ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளை குறைவாகப் பாவிப்பதும் ஹராமே"

எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி.
ஹராம் என்றால் தீமையானது, விலக்கப்படவேண்டியது என்று பொருள்.

இதுவே திரு குரானில்:

5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

நபிமொழிகள் என்ற தொகுப்பு ஹதீஸ்கள் என்று இஸ்லாத்தில் வழங்கப்படுகிறது, அதாவது நபிகளாரல் சொல்லப்பட்டது, நபிகளாரால் செய்யப்பட்டது, நபிகளாரால் பல்வேறு சூழலில் அங்கீகரிக்கப்பட்டது. குரானில் கிடைக்காத தீர்வுகளுக்கு, அல்லது எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவைகளின் விளக்கம் என்று கொள்ளலாம். உதாரணமாக திருக்குரான் அல்லாஹுவுக்கு வழிபடுங்கள் என்று கூறுகிறது ஆனால் எப்படி வழிபடவேண்டும் என்று கூறவில்லை, அதை நபியவர்கள் வழிபடும் முறையைப்பார்த்து தொழுகை முறை பின்பற்றப்படுகிறது. அதனால் மது பற்றிய மேலே கொடுக்கப்பட்டுள்ள நபிமொழி மிகவும் அத்தாட்சி வாய்ந்தது.

இப்படி மதங்கள் தங்களின் மறு உருவாக்கத்தை காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப மாற்றி வந்திருக்கின்றன. மனுதர்மம், இன்று கிட்டத்தட்ட உபயோகத்தில் இல்லாத ஒரு சாஸ்திரமாக இருக்கிறது. கலப்புத்திருமணங்களும், சேரிகளுக்கு செல்லும் சங்காராச்சாரிகளும் ஒரு உதாரணம். எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும் சமுதாய தேவைகளை பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் இறைவன் என்கிற பதம் பல்வேறு நிலைகளை அடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். எல்லா மதங்களின் அடிப்படை இறைவன், ஆகையால் மதங்கள் தங்களை மறு உருவாக்கம் செய்யும்போது இறைவன் பற்றிய நிலைப்பாடுகளையும் அவனுடனான வணக்கமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டி இருக்கிறது.

பத்து அவதாரங்களையும் கூர்ந்து கவனித்தால் அது புரியும். கடைசியாக வந்த ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் மிகவும் அதிகம் வேறுபாடு கொண்டவை, ராம அவதாரத்தில் மனிதனின் ஏகப்பத்தினி விரதம் மேன்மையாக சொல்லப்பட்டு பின்னர் வந்த காலத்திற்கு ஏற்ப கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணருக்கு பாமா ருக்குமணியை மனைவியாக்கினார்கள். கூடவே எளிமையான நாமாவளி சங்கீர்த்தனம் மற்றும் பஜனை முறைகள் வழிபாட்டு முறைகளில் புதிய அவதாரங்களாகின. இன்றைய நவநாகரீக கேளிக்கைவிடுதிகளில் ஆடிப்பாடும் இளைஞர் கூட்டம் கிடைப்பதாக சொல்லும் ஒரு வகை ரிலாக்ஸ், ராதாகல்யாண பஜனைகளிலும் அங்கே இனிமையான பஜனை இசைகளில் மூழ்கி ஆடும்போது கூடுதலாகவே கிடைக்கும். அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளலாம்.

இதில் நுட்பமாக புரிவது ஆங்கிலத்தில் சொல்வதானால் option என்று சொல்லப்படுகிற வாய்ப்புகள். அவைகள் மற்றவரை பாதிக்காதவகையில் இருந்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ராமர் காலத்தில் அவருடைய தந்தையாருக்கு கூடுதல் மனைவிகள் ராமருக்கோ ஒரு மனைவி மட்டும்தான்.

இரண்டாவது மூன்றாவது மனைவிகளின் தேவை வரும்பொது அதுவும் ஒரு அங்கீகரிக்ப்பட்ட விதமாக அமைய வேண்டிய சூழல்வரும்போது கிருஷ்ண அவதாரம் வருகிறது. நீ ஒரு மனைவியோடு வாழ்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு ராமன், இல்லை கூடுதல் மனைவிகள் வேண்டுமானால் அதற்கு ஒரு கிருஷ்ணன், மனைவியே இல்லாமல் வாழவேண்டுமானால் அதற்கும் ஒரு வாமன பரசுராம அவதாரம். என்று option களை கூட்டிக்கொண்டே போகவேண்டிய தேவை உண்டாகும்போது மதங்கள் தங்களை திருத்திக்கொண்டன.

எப்படி ஆரம்பத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ரீமோட் கண்ட்ரோல் இல்லாமல் இருந்தது, ஆனால் பின்னர் ஒரு புண்யவான் ரீமோட் கண்ட்ரோலை கண்டுபிடித்து சந்தையில் விட்ட பின் அந்த வசதி இல்லாத நிறுவனங்களும் அதை கடைபிடிக்கவேண்டி வந்ததுபோல், ஒரு மதம் சில சிந்தனை மாற்றங்களை, எளிய வழிபடும் முறைகளை கொண்டு வந்த பின், மற்ற மதங்கள் தானே தன்னிலும் அவைகளை ஏதோ ஒரு ரீதியில் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் மாற்றங்களை உட்புகுத்துகின்றன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த ‘அறக்’ எனும் கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்!” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘‘இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936).

மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து நான் புரிந்து கொண்டது, தண்டனையின் அளவை அந்த தொண்டரின் குடும்ப சூழலுக்கு ஏற்ப குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார் நாயகம் அவர்கள், இதைத்தான் நான் முதலில் கூறிய option என்பதன் தேவை. கடைசியில் இவ்வளவு ஏழ்மையான ஒரு குடும்பத்தில் உள்ள மனிதரிடம் நாம் போய் ஒரு அடிமை உண்டா, 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என்று கேட்டு விட்டோமே என்று நினைத்து சிரித்திருக்ககூடும் என்று நினைக்கிறேன். இந்த சம்பவத்தில் அவரின் சிரிப்பு பல சிந்தனைக்களுக்கு நம்மை உள்ளாக்குகிறது, ஒரு நபித்துவம் பெற்ற மனிதர் தன்னிடம் அபயம் தேடி வந்த தொண்டரை எள்ளி நகையாடி சிரிக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை வாசகர்கள் உள்வாங்கி அவர் ஏன் சிரித்திருக்க கூடும் என்று உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் பல சுவையான காரணங்கள் கிடைக்கும்.

கேரளத்தில் கோயில்களில் மிகச்சாதாரணமாக ஒரு காட்சியை காணமுடியும். அங்கு உள்ள கோயில்களுக்கு செல்லும் போது மேல்சட்டை அணியாமல்தான் செல்லவேண்டும், கீழே வேஷ்டி அணிய வேண்டும் இதை கடுமையாக முன்பெல்லாம் நடைமுறைப்படுத்தி இருந்திருக்க கூடும். இப்போது என்ன நடக்கிறது என்றால் கீழே பேண்ட் அணிந்தவர்கள் சட்டையை மட்டும் கழட்டி விட்டு உள்ளே செல்லலாம் என்று மாறி, பின்னர் சட்டையைகூட ஒருகையை கழட்டிவிட்டு மறுகையில் மாட்டிக்கொண்டு செல்லலாம் என்று மாறிவிட்டது. இதன் வெளிப்பாடு என்ன, பழய முறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் கோவிலுக்கு வரும் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். ஆகையால் மாற்ற வேண்டிய அவசியம்.

அது இன்னும் சிறிது காலத்தில் இது இன்னும் எளிமையாகிப்போகும் என்றுதான் நம்புகிறேன்.
இப்படி எல்லா மதங்களும் எளியமுறைகளையும் கடுமையான முறைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன, புத்த மதத்தில் ஹீனயான, மகாயான பிரிவுகள் இப்படித்தோன்றியவைதான். பல மத அறிஞர்கள் தங்களின் மத கோட்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார்கள் அதன் அவசியம் தங்களின் மதம் சார்ந்தவர்களின் கூட்டம் குறைந்து விடக்கூடாதென்ற எண்ணம் அவ்வாறு குறையும் பட்சத்தில் சமுதாயத்திற்கு கிடைக்கும் லாபம் குறைந்து போகும், இப்படியாக அரசியல் பொருளாதாரா வாழ்நிலை காரணங்கள்தான் மதங்களை கட்டிப்பிணைத்து வைத்திருக்கின்றன.

இதில் இறைவன் என்ற நிலையை நாம் எங்கே இணைக்கிறோம் என்றால், பயத்தில்தான் என்று தோன்றுகிறது. மனிதன் தன் அறியாமையினால் அல்லது முழுதும் அறிந்து கொள்ளக்கூடிய நிலையை அடையாததினால் ஏற்படுகிற குழப்பத்தில் காரணகாரியங்களைத்தேடி அலைகழிக்கப்படும்போது யாராவது ஒருவர் தன் மனநிலைக்கு கேற்ப ஒரு விளக்கத்தை கூறி அதன் தற்செயலான வெளிப்பாடுகளை உதாராணங்களாக காட்டும்போது ஏற்படும் மயக்கம் அல்லது ஆறுதல், மனிதனை அந்த திசையில் பயணிக்க வைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

கர்ணன் படத்தில் ஒரு வசனம் வரும் கர்ணன் மீது அர்ச்சுனன் வீசும் அம்புகள் மாலையாக விழும்போது கிருஷ்ணர் ஒரு வசனம் சொல்வார், “தருமம் அவன் தலையைக்காக்கிறது, படைத்தவன் வலிமையும் அதன் முன் செல்லாது” என்று. இது கீதையில் இருந்து எடுக்கப்பட்ட வசனம்.

படைத்தவன் இறைவன் என்றால் தர்மத்தின் முன் எல்லாம் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற பொருள் வருகிறது, தர்மத்தின் விளைவு என்ன மற்றவருக்கு உதவுவது, அதன் அடிப்படை மனித வாழ்வின் மேன்மைதான். இப்படி எல்லா சண்டைகளும் தத்துவங்களும் சுற்றி சுற்றி மனித வாழ்வின் மேன்மையை அதில் நிலவ வேண்டிய அமைதியையும் நிம்மதியையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. மதங்களின் சட்டத்திட்டங்கள் நோக்கம் இதைத்தான் சொல்கின்றன, கால நேர அறிவின் வீச்சுக்கு ஏற்ப அந்த சட்டங்களின் குறைகள் களையப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, எப்படி பல சாஸ்திரங்கள், புனித நூல்களின் கட்டளைகள் அப்படியே பின்பற்றாமல் மாறி வசதிக்கேற்றார்போல் பொருள் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றனவோ அப்படி.

இறைவன் மனிதனுக்கு உள்ளே உள்ள பயத்தில்தான் இருக்கிறான், மனித இன நிம்மதிக்கு கேடு நேர்ந்தால் அதை ஏற்படுத்தியவர் இறைவனின் தண்டனைக்கு உட்பட்டவர் என்கிற பயம்தான் எல்லோரரையும் ஒரு ஒழுங்கில் செல்லவைக்கிறது. பைபிளில் சொல்லப்படுகிற பாவத்தின் சம்பளம் மரணம் என்பது ஒரு உதாரணம்.

மரணத்திற்கு பிந்திய வாழ்வைப்பற்றி மதங்களின் நிலையும் கூட பயத்தை அடிப்படையாகக் கொண்டேதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த பயத்தின் நோக்கம் மனித குல அமைதி என்றாலும், இந்த பயம் நம்மை ஆட்கொள்ள காரணமாக இருப்பது பற்று, ஒரு பற்றுள்ள வாழ்வில் இருந்து விடுபடப்போகிறோமே என்ற பயம்தான் நம்மை பல தவறுகளில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த பற்றை எல்லா மதங்களும் தவிர்க்கவேண்டும் என்று கூறினாலும், அதன் சட்டதிட்டங்களின் வழியே பற்றை போற்றி பாதுகாக்க செய்கின்றன. நமது வழிபாட்டு முறைகள் சடங்குகள்,அதற்கான உடைகள், குழந்தைகளை பேணுதல், குடும்ப வாழ்வின் மகத்துவம், உணவின் சுவைகள், பெருமைகள் என்று பலவற்றை மதங்கள் நமக்கு கற்றுக்கொடுத்து அந்த பற்றை இழந்துவிடுவாய் என்று பயம் காட்டியும்தான், மதங்கள் ஒருவகை சட்டத்தை நிலை நிறுத்துக்கின்றன.

இது ஒருவகை அரசியல், இங்கே எல்லா செயல்பாடுகளின் மொத்த நோக்கம் மனித சமுதாயத்தின் நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டும்தான். அதில் மதங்கள் தங்கள் தங்கள் வழிகளின் மூலம் வெற்றியும் பெற்றிருக்கின்றன, அதில் தோல்விகண்ட மதங்கள், சட்டங்கள் அழிந்து போய்விட்டன, அல்லது நிராகரிக்கப்பட்டன.

யூத மதம் உலகின் உயர்ந்த குடிமக்கள் நாங்கள்தான் என்கிற பெருமையோடு இருந்தாலும், அவர்களின் அந்த வகைக்கோட்பாடுகள் ஓட்டுமொத்த சமுதாயத்திற்கு நல்லதாக படாததால் மெல்ல மெல்ல மற்ற மதங்கள் தோன்ற வேண்டிய தேவை வந்தது, இன்று யூத மதம் சொற்பமாக சுருங்கிப்போனதும் அதனால்தான். மனுதர்மம் காணாமல் போனது கூட இந்த ஓவ்வாத கோட்பாடுகளால்தான். இப்படி மனித சமுதாயத்திற்கு நிம்மதியையும், மகிழ்ச்சியும் தரமுடியாத மதங்கள், தன்னை காலசூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் அல்லது மெல்ல மெல்ல காணாமல் போகும் என்பதுதான் வரலாறு கண்ட உண்மை.

மதங்களின் நீண்ட பயணத்தில் அவைகள் தங்களை பல உருவங்களாக மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன, எந்த மதமும் தொடங்கிய விதத்தில் இன்று இல்லவே இல்லை, மதங்கள் உருவான காலத்தில் உலகின் அரசியல் பொருளாதார வாழ்வியல் முறைகள் வேறு. இன்று வேறு. ஆகவே இந்த மாற்றங்களை தவிர்க்க முடியவில்லை, இந்த மாற்றங்களை அங்கீகரிக்காத மதங்கள் மக்களின் ஆதரவை இழந்திருக்கிறது. அல்லது தன்னை மாற்றிக்கொண்டு பல புதிய பிரிவுகளை ஏற்று புதிய அவதாரங்களை கொண்டிருக்கிறது. இந்து மதம் தனது பழய நிலைகளை விட்டு இன்று கண்டுள்ள பிரிவுகள் ஏராளம் ஆனால் அவை எல்லாம் ஒன்றே என்கிற மனோபாவம் இந்துக்களிடம் ஏற்பட்டுவிட்டது, ஒரு காலத்தில் திராவிட தென்னாட்டில் இருந்த சைவ வைஷ்ணவ போட்டிகள் இன்று மக்களிடம் இல்லை,இன்னும் பல இயக்கங்களாக அவைகள் மாறி இருந்தாலும் மக்களுக்கு அவைகள் எல்லாம் ஓன்றாகவே தெரிகிறது.

ஆனால் கிருஸ்துவத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பிரிவுகள் மிக கடுமையான எதிர்வாதங்களை கொண்டிருக்கின்றன, அவர்கள் பரஸ்பரம் தங்கள் வழிபடும் இடங்களைக்கூட பிரித்தே வைத்திருக்கிறார்கள், இந்து மதத்தில் இருந்து பிரிந்து புதிய மதமாக உருவான சீக்கிய மதத்தினர் இந்து கோவில்களுக்கு செல்வதும், இந்து தெய்வ வழிப்பாடுகளை தொடரவும் செய்க்கிறார்கள். வாழ்க்கை போராட்டம், உழைப்பின் தேவை உணர்ந்து கடும் உழைப்பாளிகளான மனிதர்கள் இறைவன், மதம் போன்றவற்றை எந்த பாகுபாடும் இல்லாமல் இயல்பாக அணுக பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உழைப்பும் வேலையும்தான் முதல், வழிபாடும், மதங்களும் எந்த பெரிய இடத்தையும் வகிக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளிலும் கூட கிருஸ்துவமதம் எங்கும் பரவி இருந்தாலும், பல விஷயங்களை அது வாழ்முறைக்கு தோதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

போப்பாண்டவர் பல புதிய விஷயங்களை இனி கத்தோலிக்க இறைச்சேவையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்முறையாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது ஒருவகை எடுத்துக்காட்டு. இப்படி மதங்களின் தேவைகள் குறைந்துகொண்டே வருகிறது, அல்லது மதங்கள் தங்களை வாழ வைத்துக்கொள்ள தங்களை மறு உருவாக்கம் செய்து கொள்கின்றன.

மனிதனின் கல்வி அறிவின் வளர்ச்சிதான் இந்த எல்லாவகை மதம் சார்ந்த உணர்வுகளை தெளிவு படுத்துகிறது, மனிதனின் சிந்தனையின் வளர்ச்சி குறைவாக இருந்த காலத்தில் மதம் அவனுக்காக சிந்தித்தது, இன்று மனிதனின் சிந்தனை அபார வளர்ச்சி கண்டுள்ள நிலையில் மெதுவாக மதம் தனது அடையாளங்களை இழந்து ஒரு பொது தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது, அதனால்தான் இப்போது இந்திய கார்பரேட் சாமியார்கள் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களையும் தங்கள் இயக்கங்களில் சேர்த்துக்கொண்டு சர்வமத பிரார்த்தனைகளை தங்கள் தினசரி வழிபாடுகளில் சகஜமாக்கி இருக்கிறார்கள்.

கிட்டதட்ட இது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறத்தல் என்ற நிலைதான், ஒரு சிந்தனை தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்வதற்காக உருவாகிறது, அதன் பலனால் பக்குவம் அடைந்துவிட்ட பின் அதற்கான அடையாளத்தை தனது எந்த உருவத்திலும் ஏற்படுத்திக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. பெயரை வைத்துதான் பெரும்பாலானவர்களின் மதங்கள் அடையாளம் காணப்படுகின்றன, புதிய தலைமுறையினர் இன்று மத அடையாளங்களை அணிவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள், தமிழகத்தில் ஜாதி முறை கணிசமாக நடைமுறையில் இருந்தாலும், இப்போது தனது ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் இடுவதை சுத்தமாக தவிர்த்து விட்டார்கள். ஒரு சில ஜாதி தலைவர்களைத் தவிர. அதுபோல்தான் மதங்களின் அடையாளங்கள் மெல்ல தவிர்க்கப்படுகின்றன.

இவையெல்லாம் மதங்களின் ஒருவகை மறு உருவாக்கம்தான், இவைகளை தவிர்க்கவே முடியாது, அதற்காக மதங்களில் மாறதவைகள் இல்லவே இல்லையா எனக்கேட்கலாம், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாராணமாக திருக்குரான் அரபி மொழியின் மூல வடிவம் கிட்டதட்ட 1500 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மற்றும் எல்லா மதங்களின் அடிப்படை கொள்கைகள் பெரிய மாற்றங்களை பெறவில்லை, ஆனால் வாழ்முறைகள் அணுசரிப்புகள் மாறி விட்டிருக்கின்றன.

எப்படி இன்றைய மென்பொருள் துறையில் ஒரு முக்கிய இயங்கும் மென்பொருள்( operationg system) ஓன்று போல உள்ள மொழிகளில் உருவாக்கப்பட்டாலும், அதன் உபயோகம் பல வாய்ப்புகளை உள்ளடக்கிய புதிய வெளியீடுகளாக வேகத்திலும் வசதிகளிலும் வருகிறதோ, அதாவது, window-3.0. windows -95,98,xp,vista, இப்போது win-7. இதில் எல்லாவற்றிலும் அடிப்படையான உருவாக்கும் மொழி கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும், ஆனால் அதன் பயன் நிகழ்கால வேகத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமையாகவும் அதனுடனான கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரமானதாகவும் மாறி இருக்கிறது.

முன்பெல்லாம் கல்லூரிகளில் கம்யூட்டர் சாலைகளுக்கு உள்ளே செல்லும்போது காலனிகளை வெளியே விட்டுதான் செல்ல வேண்டும். இப்போது அது மாறிவிட்டது, குளிர்சாதனம் இல்லாமல் கம்யூட்டர்கள் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை மாறி எல்லா காலநிலையிலும் இன்று அவைகள் வேலைசெய்கின்றன. முன்பு கோவில்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன, கேரளாவில் சட்டை போடக்கூடாது என்பது மாதிரி, கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகள் போடக்கூடாது என்பது, குடுமி வைத்துக்கொள்வது என்பன போன்று பல. இன்று சங்கராச்சாரியார்கள் டெம்போ டிராவலரில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மதங்களின் மீதான தெளிவு கூடிக்கொண்டே வருவதுதான் இந்த குழப்பங்களுக்கான தீர்வு, அது மிகவும் சார்ந்திருப்பது மனித இனத்தின் அறிவின் வளர்ச்சியைத்தான் என்று தோன்றுகிறது.

Feb 7, 2011

அம்மாவின் கைகள்.

ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார், அதை அப்படியே கொடுத்திருக்கிறேன், எழுதியவர் பெயர் தெரியவில்லை.





சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

முடிவு நம்மிடமே இருக்கிறது!