Oct 28, 2012

மகாத்மாவுக்கே பட்டமா?



மகாத்மாவுக்கு தேசத்தந்தை பட்டம் கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இதைக்கேட்டவுடன் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இனி காங்கிரஸ் கட்சி நாட்டுக்கே தேவை இல்லை என்பதுதான்.


எனக்கு தெரிந்து பாரத ரத்னா, பத்ம பூஷன் போல தேசத்தந்தை பட்டம் ஒன்றும் அரசு கையிருப்பில் இல்லை என்பதால் கொடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள், கையிருப்பில் இருந்தால் இந்த வருடம் மகாத்மாவுக்கு கொடுத்த தேசதந்தை பட்டத்தை அடுத்த வருடம் எனக்கு கொடுங்கள் என்று பலரும் வரிசையில் நிற்க தொடங்குவார்கள், ஆகையால் இந்த முடிவு ஒரு வகையில் சரியென்றே பட்டாலும், அதை வெளிப்படுத்திய விதம் கொடுமையாக உள்ளது, சட்டத்தால் அங்கீகரிக்க முடியாத ஒரு பட்டத்தை ஏன் இத்தனை நாள் பாட புத்தகங்களிலும், சுதந்திர தின, குடியரசுதின பேச்சுக்களில் எல்லாம் இந்திய தலைவர்கள் உபயோகப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.இந்தியாவின் தேசத்தந்தை யார் என்று கேள்வி கேட்டு அதற்கு மகாத்மா காந்தி என்று பதில் எழுதி, மார்க்கும் கொடுத்த ஆசிரியர்களின் நிலை என்ன, இனி கொஞ்சநாளைக்கு மக்களுக்கு இந்த விஷயம் விவாதத்தில் இருந்தாலும் இருக்கும், மற்றதெல்லாம் மறக்கலாம்,

இனிமேல் அப்படி அரசால் அங்கீகரிக்கப்படாத பட்டங்கள் எல்லாம் என்ன ஆகும், அவைகள் வரலாறுகளில் இருந்து நீக்கப்படுமா?

நேதாஜியால் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டு அது பிரதமர் முதல் சாதாரண மனிதன் வரை எல்லோராலும் தொடரப்பட்டு வந்த இந்த பட்டம் இல்லாததால் மகாத்மாவுக்கு ஒன்றும் குறையில்லை, அந்த பட்டம் இத்தோடு நின்றுபோகப்போவதும் இல்லை,

மக்களால் போற்றிப்புகழப்படும் மகாத்மாவை தேசதந்தையாக பெற்றதற்காக இந்தியா பெருமைப்படுகிறது, அப்படிப்பட்ட மிக உயர்வான உணர்வை எல்லாம் சட்டம் என்கிற குறுகிய வட்டத்தில் சுருக்கத்தேவை இல்லை, அந்தப்பட்டம் அவருக்கு மட்டுமே உரியது என்றும் நமக்கு பெருமையான விஷயம் என்று சொல்லி அரசு விலகிக்கொண்டிருந்தால் இந்த குழப்பங்கள் எழப்போவதில்லை, அதைவிட்டு விட்டு சட்டத்தில் இடமில்லை அது இல்லை இது இல்லை என்றெல்லாம் கூறி மத்திய அரசு தன்னை கீழ்மைப்படுத்திக்கொண்டதாகத்தான் நான் நினைக்கிறேன்.

மகாத்மாவின் வாழ்வியலை, அவரின் தியாகங்களை அவரின் உழைப்பை, அவரின் சத்தியத்தை உணராத இன்றைய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மைதான் இதெல்லாம், இதெல்லாம் தெரிந்துதான் அன்றே மகாத்மா சொன்னார், கலைத்துவிட்டுப்போங்கள் இந்த காங்கிரஸை என்று, கடைசியாக மக்கள் இப்போது அதனை உணர்ந்து கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது, அடுத்த தேர்தலில் அதைச்செய்வார்கள் என்றே நினைக்கிறேன்,

தவநெறிச்செல்வன்.

Sep 13, 2012

காப்பி அடிக்கும் கலைஞன்

நான் கலைஞான முடிவதேயில்லை


எப்படி எழுதினாலும் சுவையாயில்லை

எப்படி இசைத்தாலும் சுகமாயில்லை

எப்படி நடித்தாலும் இதமாயில்லை

ஆனாலும்

நான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன்

உனக்காக ஒரு காதல் கடிதமும்

உன் சிரிப்புக்காக ஒரு சிம்பொனியும்

உன் கண்களுக்காக ஒரு கலைப்படமும்

ஆனால்

எடுத்து முடித்த பின்

எனக்குப்புரிந்தது

கலைஞர்கள்

உருவாவதில்லை

பிறக்கிறார்கள்  என்று.

அணு அரசியல்

அணுவை பிளக்க அறிந்தோம்


அதை ஆக்கத்திற்கென்றே உரைத்தோம்

ஆனாலும்

பொக்கரான்களில் புழுதிகளுக்கிடையே

போர்த்தி வைத்தோம்.

ஆக்கத்திற்கென்று கூறீனீர்களே? என்றார்கள்

ஆமாம்

அதற்காகத்தான் அதற்கு

“அமைதி அணுகுண்டு”

என்று பெயரிட்டோம் என்றோம்.

உலகமெல்லாம்

அணுவைக்கண்டு அலறுகிறபோதும்

நாங்கள் அதை

கூடங்குளத்தில் கொண்டுவந்தோம்

2020ம் ஆண்டில்

உலக வல்லரசாய் உயர்வதற்கு

உதவும் திட்டம் என்றோம்

அன்று கேரளம்

இந்தியா 2020ல் வல்லரசாய் மாறுவதை விரும்பவில்லை

தானைத் தமிழகம்

தலைகுனிந்து வல்லரசு பட்டத்தை

வாரி வழங்க முன் வந்தது.

ஆனாலும்

ஒன்றும் அறியா மக்கள்

வேண்டாம் வீபரீதம் என்றார்கள்

எங்களின் சவக்குழியில் விளக்குகள்

எதற்கென்றார்கள்.

நாங்கள் நிபுணர்களை நாடினோம்

ஒரே நாளில் உற்பத்திக்கான

ஓப்புதலை வழங்கினார்கள்

என்னே எளிமை

பின்னே ஏன் போராட்டம் என்றோம்?

20 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

அழிக்க முடியாதது அணுக்கதிர் வீச்சு

என்றார்கள்,

கதீர் வீச்சை கண்ணிலே காட்டமாட்டோம் என்றோம்

கழிவுகள் கடலில் கரைந்தால்

கடல் வளம் காணாமல் போகுமே என்றார்கள்

இருக்கும் அணு உலைகளில்

ஏற்பட்ட விபத்தை எல்லாம் பட்டியலிட்டார்கள்.

கவலைப்படாதீர்கள் காப்பாற்றுகிறோம் என்றோம்

எப்படி காப்பாற்றுவீர்கள் என்றார்கள்

இன்னும் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்றோம்

போபாலில் போனவர்களை

காப்பாற்றிய கதை தெரியாதா என்றார்கள்

மீடியாக்களின் மீது கோபம் வந்தது,

செய்திகளை வெளியிடுவதில் தர்மம் வேண்டும் என்றோம்.

எல்லா செய்திகளையும்

இப்படி வெளியிட்டால்

எப்படி வளர்ச்சி திட்டங்களால் எங்களை வளர்த்துக்கொள்வது என்றோம்

ஆயிரங்களில் தொடங்கி

கோடிகளைத்தாண்டி

லட்சம் கோடிகளையும்

கோடி கோடிகளை தாண்டி விட்டோம், இதுவா பிரமாதம்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று

எங்களுக்கு நன்றாக தெரியும்

எதிர்பாருங்கள்

இதுவும் தாண்டிப்போகும் ஒருநாள்.

-------------------------------------------------------------------------தவநெறிச்செல்வன்

Sep 11, 2012

ஏதோ எழுதுகிறேன்

நீண்டநாளாகிவிட்டது பதிவு புதியது எழுதி, முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் face book எனது நேரத்தை பிடித்துக்கொண்டது மற்றும் கூடவே பிறந்த சோம்பேறித்தனம் என்று சொல்லலாம், இப்படி பல காரணங்கள். நீண்ட நாளுக்கு பிறகு நடக்க முடியுமோ என்று பயந்து பயந்து தள்ளிப்போட்ட அண்ணாமலையாரின் கிரிவலம் இரண்டு முறை செய்து முடித்தேன், நம்ம ஊர் சாமிதானே என்கிற அலட்சியம் மற்றும் 14 கிமீட்டர் நடக்க முடியுமா என்கிறதான பயம் இப்படி பல காரணங்கள். மலையை சுற்றும்போது செருப்பு போடாமல் சுற்ற வேண்டும் என்று கூறினாலும் நான் செருப்பு போட்டுக்கொண்டுதான் சுற்றி வந்தேன். மெல்ல நடந்து ஒரு 6 மணிநேரத்தில் சுற்றிவந்தேன், வரும் வழியில் கிடைக்கும் உணவு பதார்த்தங்கள் மற்றும் குளிர்பானங்கள் என சாப்பிட்டுக்கொண்டே ஒரு சுற்றுலா போலத்தான் வந்தேன் என்றாலும் கோவிலைத்தாண்டியபிறகு நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. என்றாலும் மெல்ல நடந்து வந்து சேர்ந்தேன்.


நடப்பதில் பல நன்மைகள் இருப்பது உண்மை, மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சாமிகள், மனசு கவலையா இருந்தா உலாத்துங்கோ சரியாயிடும் என்று பலமுறை சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதுபோல் பல சித்புருஷர்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் குருமூர்த்து சாமிகள் வீட்டிற்கு வந்திருந்தார்கள், அவர்களின் அருகாமை பல அற்புதங்களை விளக்கியது, முதல்நாள் திருகழுக்குன்றத்தில் இருந்து வந்த அடியார் தலமையில் நடந்த திருவாசக முற்றோதல் விழா திருவண்ணாமலையில் நடந்தது. திருவாசகத்தை இப்படியும் படிக்கலாம் ஒரு கொண்டாட்டத்தோடு என்பது எனக்கு புதிதாக இருந்தது. ஒரு புளகாங்கிதமான பரவசநிலையில்தான் முழுமையாக இந்த விழா நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டு பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.

ஸ்ரீகுருமூர்த்தி சாமிகள் வந்திருந்து எனக்கு திரு அருட்பாவினை விளக்கி பல விஷயங்களை எடுத்து கூறினார், மகான்களில் வகைப்படுத்தல்களில் எங்குமே அடங்காத ஒரு அற்புத வடிவம் வள்ளல் பெருமானார், மகாத்மா காங்தி அடிகள் எப்படி வாழ்முறை சோதனைகள் ஓவ்வொன்றையும் செய்துபார்த்து உலக்கு விளக்கினாரோ அதுபோல் வள்ளல் பெருமான் ஞான வழி சோதனைகள் பலவற்றையும் தானே செய்துபார்த்து அதனை அனுபவித்து நமக்காக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும் அத்தனை தெளிவு, நான் சொல்கிறேன், பொய்யில்லை, நம்பு மானிடா என்பதை மிகத்தெளிவாக கூறுகிறார், இத்தனை அற்புதமான ஒரு வள்ளலை நாம் எப்படி தொடராமல் போனோம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. எம்ஜியாரையும், கருணாநிதியையும், சாதாரண சொற்ப அதிகாரங்களுக்காக தொடரும் இத்தனைக்கோடி கூட்டம், அற்புதங்கள் பல செய்யும் வாய்ப்புகள் உள்ள சன்மார்க்க நெறியை ஏன் தொடரவில்லை, வள்ளலாருக்கு பின் ஒருவர் கூட அவர் நிலையை அடைந்தவர் இல்லையா? அல்லது வெளியில் தெரியவில்லையா? என்று தெரியவில்லை.

இப்பொது அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கிய தொழிற்ச்சாலையில் இருந்து இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன், இது செனக்டடி என்ற ஊரில் நியுயார்க் மாகானத்தில் இருக்கிறது. GE நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி நிலையம், மிக பிரமாண்டமான தொழிலகம், ஆச்சர்யமான பணிகள், பயிற்சிக்காக இங்கே இரண்டு வாரம் தங்கி இருக்கிறேன்.

**********

மொட்டையன் சாமிகள், மூக்குப்போடி சாமிகள், முருகானந்தம் சாமிகள், கோணிப்பை சாமிகள், என்று பலவாறு அழைக்கப்படும் மகான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர். திருவண்ணாமலையில். சிலகாலங்களுக்கு முன் எல்லோராலும் அனுகக்கூடியவராக இருந்தார், இப்போது கடும் தனிமைதேடி யாரையும் அருகில் அனுமதிப்பதை தவிர்க்கும் வண்ணம் மிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோல் நடித்து, அருகில் போனால் விரட்டும் விதமும் நம்மை குலை நடுக்க வைக்கும் பயமுறுத்தலும் கொண்ட மகானாய் இருந்து வருகிறார். பலருக்கு அவரைத்தெரிந்திருக்கலாம், அவரால் பல நன்மைகள் பெற்றவர்கள் திருவண்ணாமலையில் எங்கும் உள்ளார்கள். எப்போதாவது அப்பிரதட்சனமாய் அண்ணாமலையை சுற்றி வருவார், காரிலோ, ஆட்டொவிலோ, அல்லது இரண்டு சக்கர வாகனத்திலோ, அப்படி அழைத்துப்போகிறவருக்கு அன்று அதிர்ஷ்டம்தான்.

அடுத்து சின்ன குஞ்சு என்று அழைக்கப்படும் மகான், இவர் வாழ்ந்து வருவது பூந்தோட்டம் என்கிற கிராமம், மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் வழியில், புகழ்பெற்ற சரஸ்வதிதேவி ஆலையம் உள்ள கூத்தனுரூம் இங்குதான் உள்ளது. முக்கிய சாலையின் பக்கத்திலேயே இந்த பெண் மகானின் தங்குமிடம், மகா நிர்வாணகோலத்தில் இருக்கும் இவர் நன்கு நம்மிடம் சாதாரணமாக பேசும் நிலையில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை ஊர்மக்கள் கல் போன்றவற்றால் அடித்து துன்புறுத்தினாலும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து சென்ற சேதுராமன் அவர்கள் அவரிடம் வணங்குவதும் அவருக்கு பணிவிடைகள் செய்வதும் கண்டு ஊர்மக்கள் மெல்ல புரிந்து கொண்டு இப்போது குடில் அமைத்து தந்திருக்கிறார்கள்.

அடுத்து பெயர் தெரியாத இன்னொரு மகான் ஆத்தா என்று என்னாலும் என் குடும்த்தினராலும் அழைக்கப்படும் பெண் மகான், இவர் இப்போது திருவண்ணாமலையில் இருக்கிறார். தினம் அண்ணாமலை சுற்றி வருவதும், தனது இரண்டு மூக்கிலும் காகிதத்தை வைத்து அடைத்துக்கொண்டு 24 மணிநேரமும் காணப்படுவதும் ஆச்சர்யமான ஒன்று. பல மொழிகளை பேசுவதால் பூர்வீகம் எதுவெனத்தெரியவில்லை, ஆந்திராவக இருக்கும் என்ற ஊகம் உண்டு பெயர் தெரியவில்லை.

இன்னும் பல மகான்களைப்பற்றி தொடர்ந்து எழுதவேண்டும். இதை எல்லாம் எழுதும் படி என்னை வற்புறுத்தியது எனது மனைவிதான்.

இது ஒரு ஆன்மிக பதிவுபோன்று ஆகிவிட்டது. என்றாலும் வாழ்வின் திசையில் நாம் எங்கு அடித்துச்செல்லப்படுகிறோம் என்று தெரியாமல், உறவுகள் சொந்தங்கள் இப்படி பலவற்றில் உழன்று வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று தேடிக்கொண்டே இருந்தாலும், அது நமது பக்கத்தில் இருப்பதை நாம் உணர்வதே இல்லை. இது போன்ற காலாவதியான தத்துவங்களை எழுதிக்கொண்டே இருப்பது என்னைப்போன்றவர்களுக்கு வாடிக்கையாகபோய்விட்டது என்றுதான் அவைகளை நான் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று தோன்றுகிறது. ஆனாலும், வீட்டில் பிரச்சினைகள் எல்லோருக்கும் பின்னாடி வந்து கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மனசிக்கல்களை என்னதான் செய்து தொலைத்தாலும் தாண்டி வரமுடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். எல்லாவற்றின் மூலமும் எளிமையும் தொண்டும்தான். அவைகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதில் இருக்கும் சுகம் வேறில் இல்லை. எல்லா பந்தங்களையும் நேசிப்பதிலும் அதை இழுத்துக்கொண்டு ஓடுவதிலும் பல சிரமங்கள் இருந்தாலும், அது நமக்கு வேண்டியவர்களுக்கு செய்கிறோம் என்று எண்ணாமல் நமது கடமையை செய்கிறோம் என்று எண்ணும்போது ஒரு திருப்தி வரும்,

ஆமாம் ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம், ஆகையால் உங்கள் நிழலைத்தவிர மற்றதெல்லாவற்றுக்கும் நீங்கள் வள்ளல் பெருமான் தான். முடிந்தது கொடுக்கும்போது அந்த ஜீவன் மகிழும், அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மேன்மைப்படுத்தும், சரியாக சொல்லிவிட்டேனா தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.

தவநெறிச்செல்வன்.

May 4, 2012

நான் படித்த புத்தகம்- மொகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

மூலம்: வின்செண்ட் A.ஸ்மித், தமிழில்: சிவ.முருகேசன்.


விலை:300.00, வெளியீடு : சந்தியா பதிப்பகம்- சென்னை- 044 24896979.



பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த பெர்னியர் மொகலாய சாம்ராஜ்ய காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து எழுதப்பட்ட ஒரு பயணநூல், மிகவும் ஆழமான குறிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது, ஜாஹாங்கீர், ஷஜஹான், ஒளரங்கசீப் ஆகிய மன்னர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற இவர் தான் கண்டவற்றைப்பற்றி மிக அழகாக அந்த கால இந்தியாவினைப்பற்றிய குறிப்புகளாய் எழுதியுள்ளார், படிக்க சுவாரஸ்யத்துடன் பல சம்பவங்கள் உள்ளன, ஒளரங்கசீப் ஆட்சியில் அமர்ந்தபோது ஏற்பட்ட சகோதரசண்டையை அருகில் இருந்து விவரித்துள்ளார், மிகவும் கொடூரமான சகோதர யுத்தம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது,



தாரா ஷூகோ (ஷஜகானின் முதல் மகன்) எவ்வளவு துன்பங்களை அனுபவித்து கடைசியில் பலியாகிற சம்பவங்கள் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. தர்பாரில் நடக்கும் விசாரனை முறைகள், அந்தபுற மாதர் நிலை, அலிகளின் பங்கு, கோட்டை காவல் முறைகள், உள்ளுக்குள் நடந்த விதிமுறை மீறல்கள், அரசர்களின் ஊர்வலங்கள், அவர்களின் பொழுதுபோக்குகள், என்று மிக விரிவான விளக்கங்களுடன் மிக சுவாரஸ்யமாக செல்கிறது நூல்.


1656-1668 வரையிலான டெல்லியையும் ஆக்ராவையும் மிக அற்புதமாக ஓப்பிட்டு அதன் நகர அமைப்பும், வீடுகள் ஏன் மெற்கத்திய நாடுகள் போல் அமைக்கப்படவில்லை, காலநிலையின் பாதிப்பு எப்படி கட்டட கலையோடு இணைந்து செயல்படுகிறது என்று விளக்கமாக கூறியுள்ளார். வந்தார்கள் வென்றார்கள் மதன் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சில மாறி இருக்கின்றன. உதாராணம் தாரா ஷூகோ வின் இறுதி ஊர்வலம். ஷஜஹானுக்கும் அவர் மகள் பேகம் சாஹேப் ஆகியோரின் வாழ்நிலை.


ஒளரங்கசீப் தனது ஆட்சிமுறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், அவரின் கீழ் இருந்த பிரபுக்கள்(ஒமர்) மற்றும் அதன் கீழ் நிலை அதிகாரிகள், அவர்கள் வீட்டு பெண்கள், மன்னரின் வருமானம், பிரபுக்கள், முதல் சிப்பாய்கள் வரையிலான சம்பளம் நிலவரம், மக்களின் பொருளாதார நிலை, விவசாயிகள் எப்படி நடத்தப்பட்டார்கள், மதம் எத்தனை பங்கு வகித்தது.


நிலங்கள் மன்னரைத்தவிர யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் எப்படி உற்பத்தி முன்னேற்றம் அடையாமல் போகிறது போன்ற வற்றை மேற்கத்திய நிர்வாகத்துடன் ஓப்பிட்டு எழுதியுள்ளார்.


நூலின் தொடக்கத்தில் உள்ள அறிமுகங்கள் கொஞ்சம் போரடித்தாலும் முக்கிய நூலுக்குள் நுழைந்ததும் வேகம் எடுக்கிறது. தமிழ் படுத்திய சிவ முருகேசன் மிக போரடிக்காமல் அழகாக வேகமாக படிக்கும் வண்ணம் எளிய தமிழில் அழகாக எழுதியுள்ளார். பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள உதவிய நூல். அவசியம் படிக்கலாம்.

தவநெறிச்செல்வன்.

Mar 20, 2012

என்னவோ போங்க மனசே சரியில்லை.

இதோ அமெரிக்காவுக்கு மூன்றாம் முறை வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது, ஆனால் இது வரை அமெரிக்கப் பயணம் -3 இன்னும் எழுதவில்லை, இந்த முறை அமெரிக்க கிராமங்களுக்கிடையே பயணம். நிறைய எழுதலாம், டெக்ஸாஸ், நியு மெக்சிகோ , கலிபோர்னியா என்று பயணம் தொடர்கிறது. செவ்விந்தியர்கள் வாழும் பகுதிகளில் மாதக்கணக்கில் இருக்கிறேன். அமெரிக்காவின் இன்னொரு முகம். நல்ல பனியும் குளிரும். சில இரவுகள் -11 டிகிரி வரை செல்கிறது. இரவு நேரப்பணி என்பதால் அதை நேரடியாக அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

எழுத்தில் ஆழம் இல்லாமல் போனதாக நண்பர் கூறி இருந்தார், பல வருடங்களுக்கு முன் அப்படித்தான் எழுத தோன்றியது. அது என்னவோ பலருக்கு புரியாமல் போனதாக தோன்றவே எளிமையாக எழுத தொடங்கினேன்.

ஒரு எழுத்தாளனின் வலிமை அல்லது ஆத்ம சுகம் ஒரு ஆழமான எழுத்தில்தான் இருக்கிறது என்று கொள்வதா, இல்லை பலர் படிக்க அதனால் கிடைக்கும் ஆழமான இன்பமா என்று தெரியவில்லை.

ஏதாவது எழுதலாம் என்று தோன்றுவது ஒருவகை கிளுகிளுப்பான உணர்வு, திருடனுக்கு நல்ல அடர்த்தியான தங்க சங்கிலியைப்பார்க்கும் போதும் காமுகனுக்கு நல்ல அழகான பெண்களைப் பார்க்கும்போதும், இயற்கை ரசிகனுக்கு ஒரு மலர்த்தோட்டத்தை பார்க்கும்போதும், சாப்பாட்டு ராமனுக்கு நல்ல விருந்தை பார்க்கும்போதும், ஒரு தாய்க்கு ஏதாவது ஒரு கைக்குழந்தையைப் பார்க்கும்போதும், அரசியல் வாதிக்கு ஒரு ஓப்பந்தகாரரை பார்க்கும்போதும், ஏற்படுவதுபோன்ற உணர்வுதான் இது.

எதையாவது புதிதாக பார்க்கும்போது (அது எழுத்தாளனுக்குத்தான் புதிதாக இருக்கும்,) அதை படிக்கப்போகிறவர்களுக்கு அது புதிதானதல்ல என்றாலும் அது புதிதுபோல தோன்றும்படி எழுதநினைப்பான், ஆனால் அது புதிதாக இருந்ததா என்று தெரியாது.

காதலில் சொதப்புவது எப்படி என்று ஒரு படம் வந்திருக்கிறது, காதலைப்பற்றிய படம் என்பதால் சுவாரஸ்யம் குறையவில்லை, ஆனால் இளைஞர்களின் புதிய கலாச்சாரத்தை இது கூறுகிறது, மயக்கமென்ன என்று ஒரு படம் அதுவும் கிட்டதட்ட இப்படி ஒரு கதைதான், அம்மாக்கள் அப்பாக்கள் குழந்தைகள் தன் ஆண்பெண் நண்பர்களுடன் பழகுவதை மிக சாதாரணமாக பார்க்கிறார்கள், அல்லது ரசிக்கிறார்கள். ஒருவன் காதலியை இன்னொருவன் சாதாரணமாக கைப்பற்றுகிறார்கள். காதலிகள் மிக வீராப்பாக இருக்கிறார்கள். காதலர்களை மிரட்டுகிறார்கள். அப்படி மிரட்டுகின்ற காதலி கிடைக்காமல் போனதில் மிக கவலைப்படுகிறார்கள் உருகுகிறார்கள். இது ஒன்றுதான்வேலை என்பதுபோல் இருக்கிறது.


முன்பெல்லாம் காதல் என்றால் வெளியில் சொல்ல பயப்படுவார்கள், ஆனால் இன்று காதலர்கள், கல்லூரி கூட்டத்தில் வைத்துதான் காதலை சொல்கிறார்கள், அல்லது பெண்ணின் காலில் விழுகிறார்கள், அதைப்பெண் மிகுந்த பெருமையுடன் அல்லது அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இது என்ன கொடுமை என்றுதான் கூறத்தோன்றுகிறது. இப்படி தொடங்கும் ஒரு காதல் கல்யாணத்தில் முடியும்போது அந்த பெண் எப்படி தனது மாமனார் மாமியார் இருவரையும் ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று தெரியவில்லை.

பெண்கள் மிக சுலபமாக ஆண் நண்பர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி படம் போகிறது, படத்தில் கதை சாதனைகள் இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் கலாச்சாரத்தை காணும்போது ஆச்சர்யமும் பயமும்தான் வருகிறது. ஒருவேளை எனக்குள் இருக்கும் ஹைதர் காலத்து மனிதனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையோ என்னவோ.

இன்னொரு படம் செல்வராகவனின் “மயக்கமென்ன” ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் ஒன்றாக இரவு கடற்கரையில் மதுபானம் உணவு சகிதம் இருக்கிறார்கள், இவர்களின் மற்றொரு நண்பன் தனக்கு புதிதாக கிடைத்த தோழியை அல்லது காதலியாக போகிறவளை அறிமுகப்படுத்த அழைத்து வருகிறான் அப்போது நடக்கும் உரையாடல் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒருவேளை இதுதான் யதார்த்தமான உலகம் என்று இயக்குனருக்கு தெரிந்து இருக்கலாம். அப்படியே அந்த பெண் நண்பர்களின் பெற்றோர்களின் யதார்த்த மன உணர்வுகளையும் காட்டி இருக்கலாம்.

அதன் பின் அந்த காதலியை கதாநாயகன் கைபிடிக்கிறான், இந்த படத்தில் அடிப்படை கதை இதுவல்ல, கதா நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன் அவன் வாய்ப்புகள் இன்றி அலைக்கழிக்கப்பட்டு பிற்பாதியில் மனநிலை கெட்டு அந்த நேரத்தில் அவன் காதல் மனைவி மிகுந்த அவமானங்களுக்கு இடையில் அவனை உலக விருது கிடைக்கும் நிலைக்கு உயர்த்துகிறாள். ஆனால் மனதில் நிற்பதோ முன் பாதி படம்தான். எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் பார்த்தவர்கள் கூறலாம்.

இதில் வசனங்கள் மிக சக்தி வாய்ந்தது. காடுகளில் பறவைகளை படம் எடுக்க புறப்படும் கதாநாயகன் தன் உடைகளை எடுத்து வைக்கும்போது அவனின் நண்பன் தன் காதலியையும் (கதாநாயகி) அழைத்துக்கொண்டு வர விரும்பி அவளுக்கு தொலைபேசுகிறான். அப்போதில் இருந்து அவர்கள் காட்டில் இருந்து திரும்பி வரும் வரை உள்ள வசனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாகவே தோன்றுகின்றன.

உண்மையில் அந்த கதாநாயகியின் பாத்திரப்படைப்பும் அதன் வசனமும், அதன் நடிப்பும் படத்திற்கு மிக அற்புதமான உதவி ஆனால் இடைவேளைக்கு பிறகு அது முழுக்க வீணாக்கப்படுகிறது, அதாவது திருமணத்திற்கு பிறகு.

இந்த படங்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறதா? அல்லது இயக்குனர் மனதில் உள்ளதை சொல்கிறதா? அல்லது இளைஞர்களுக்கு புதிய வழியை சொல்கிறதா? இதில் எதுவாய் இருந்தாலும் இது ஒரு நல்ல அடையாளமாக தோன்றவில்லை.

கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் வந்து சிதறிக்கொண்டிருக்கும் நமது கலாச்சார அமைப்பில் இது என்னவகையான நன்மையை செய்யப்போகிறதோ தெரியவில்லை. கல்யாணம் வரை இப்படி ஆளை மாற்றிக்கொண்டிருப்பவருக்கு கல்யாணத்திற்கு பிறகு அப்படி ஒரு எண்ணம் வர எத்தனை தயக்கம் வரபோகிறது. இது எப்படி பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவப்போகிறது என்று புரியவில்லை.

பழமை நிறைய பிற்பொக்குத்தனம் நிறைந்தது என்பதுதான் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை, ஆனால் சில அடிப்படையான விஷயங்கள் விட்டுக்கொடுக்க முடியாததுதான். ஒரு பெற்றோருக்கு தன் பிள்ளைகள் மீதான உரிமையை கேள்விகேட்கும் நிலைக்கு கொண்டு செல்வதுதான் இந்த வாழ்க்கை முறையின் விளைவு என்றால் அவர்களின் எதிர்காலம் என்னாவது. மெல்ல மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இந்தியா போகுமாயின் அதன் தேவை என்ன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

இங்கே அமெரிக்காவில் இருக்கும் வாழ்க்கை முறை என்னை பெரிதும் ஆச்சர்யப்படுத்துகிறது. உணவகங்களுக்கு போனால், பல வயதான தம்பதியர் தாங்களே காரில் வந்து உணவருந்தி விட்டு செல்கிறார்கள், இதிலென்ன அதிசயம் என்றால், அவர்கள் மிகவும் முதுமையில் இருக்கிறார்கள். அவர்கள் தன் பிள்ளைகளை சார்ந்து இருக்கவில்லை, அது அவர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்களது தனிமை கெட்டுவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுபோல் பெரும்பாலான அமெரிக்க குடும்பங்களில் சமையல் என்பது என்றாவது ஒருநாளைக்குத்தான் இருக்கும்போல் தெரிகிறது. ஆண் பெண் இருவரும் வேலைக்கு போவதால் அவரவர்கள் அங்கு உள்ள உணவகங்களில் சாப்பிட்டுக்கொள்கிறார்கள். இரவும் ஒன்றாக எங்காவது சாப்பிட்டுக்கொள்கிறார்கள். ஆகையால் இங்கு உணவகங்கள் நல்ல விற்பனையை பார்க்கின்றன.

உணவு உண்டாக்குவது என்பது பெண்ணுக்கு மட்டும் விடப்பட்ட காரியம் இல்லை. அந்த பணியில் ஆண்களும் சேர்ந்தாக வேண்டும். நம் நாட்டில் தினமும் உணவகங்களில் சாப்பிட்டால் நம் வயிறு என்னாவது நினைத்தாலே பகீர் என்கிறது.

சென்னைப்போன்ற பெரு நகரங்களில் இந்த பழக்கம் இருவரும் வேலைப்பார்க்கும் இடங்களில் இருக்க கூடும் என்றே நினைக்கிறேன், அதெல்லாம் பார்த்தால் பழய தலைமுறைக்கு ‘“பொண்டாட்டிக்கு சமைச்சு போடறான் வெக்கங்கெட்ட பய” என்று சொல்ல தோன்றுமோ?

வாழ்க்கையில் பழமைக்கும் புதுமைக்குமான போராட்டம் என்றும் ஓயப்போவதில்லை, அவரவர் வசதிக்கு ஏற்ற சூழலுக்கு அவரவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரயாண தூரம் குறைவுதான் அதிக பட்சம் 100 வருடம். ஆகையால் சுற்றி இருப்போர்களிடம் அன்பாக இருங்கள். பார்க்கின்றவர்களிடம் எல்லாம் குறைகளை மட்டுமே தேடிப்பிடிக்காதீர்கள். உங்களின் கோபம் அல்லது ஒருவர் மீதான வெறுப்பு எந்த நன்மையும் செய்யாது உங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி.
தவநெறிச்செல்வன்.

Feb 9, 2012

எழுத்தாளர்களின் அடிதடிகள்.

தமிழ் இலக்கிய உலகில் ஒரு அடிதடி நடந்து கொண்டிருக்கிறது, அதனைப்பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசனை. சரி கருத்து தெரிவிக்கிற உரிமை என்னத்திற்கு விட்டு கொடுப்பானேன் என்று இங்கே எனது கருத்தை பதிவு செய்து விடலாம் என்று இருக்கிறேன்.
பெரும்பாலும் இந்த அடிதடி சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் நடக்கும் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் முடிந்தவர்கள் எண்ணை ஊற்றுவார்கள். இப்படி சர்ச்சைகளின் உருவமாக இருந்த சாரு ஜெயமோகனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மனுஷ்யபுத்திரனையும் ரஜினியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த கூட்டமைப்பின் விதமே புரியவில்லை, பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் இந்த எழுதாளர்களின் சண்டைகள் கொஞ்சம் நஞ்சம்மல்ல.
ஆனால் வாசகர்களுக்கு இது ஒருவகை அல்வாதான், இவர் இப்படியும் பேசுவாரா என்றும் ஒவ்வொருவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கூடவே சுவாரஸ்யமான கூத்துக்களும் கிடைக்கும்.
இத்தனை வருஷம் தமிழ்நாட்டில் இருந்தும் ரஜினி இன்னும் நல்லா தமிழ் பேசவில்லையே என்று சந்திரமெளலீஸ்வரன் கேட்டபோது எனக்கும் கூட கொஞ்சம் உறுத்ததான் செய்தது. ரஜினி எங்கே பேசினார் என்கின்றீர்களா, எஸ். ராமகிருஷ்ணனுக்கு கனடாவின் ஒரு அமைப்பு இயல் விருது கொடுத்திருக்கிறது. அதற்கு உயிர்மைப்பதிப்பகம் ஒரு விழா எடுத்தது, அதில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு பேச அதுதான் இன்று முக்கிய விஷயம் ஆகி விட்டது. டிசம்பர் 6ம் தேதி சாரு எக்சைல் என்ற தனது நாவல் வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த, அதற்கு போட்டியாக மனுஷ்ய புத்திரனும் எஸ்ராவும் சேர்ந்துகொண்டு கூட்டம் கூட்ட ரஜினியை கூட்டி வந்து விட்டார்கள்.
இதனை உடனடியாக சாரு எக்சைல் விமர்சனக்கூட்டம் போட்டு எழுத்தாளர்கள் நடிகர் பின்போவது வெட்கக்கேடு என்று பேச, நீ மட்டும் குஷ்புவையும், ஓவியாவையும் கூப்பிடவில்லையா, மிஷ்கினிடன் கொஞ்சநாள் கோண்டாட வில்லையா என்று கேள்விகள்.
மனுஷ்யபுத்திரனுடன் சாரு பிரிந்ததில் எக்சைல் நாவல் கிழக்கு பதிப்பகத்துக்கு கிடைத்து. இன்னும் பல சாருவின் நாவல்கள் மனுஷ்யபுத்திரந்தான் வெளியிடுகிறார்.
இதனிடையில் காவல்கோட்டம் எழுதிய சு,வெங்கடேசனையும் அந்த நாவலையும் எஸ்ரா போட்டு கிழிகிழி என்று கிழித்து அதைப்படித்து அது குப்பை என்ற் நான் வாங்க கூட இல்லை. இப்பொது அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்து விட்டதில் எஸ்ராவின் பேரும் கிழிகிறது. ஒரு பக்கம் ஜெயமோகன் காவல்கோட்டம் அற்புதமான நாவல் என்று கூற, எஸ்ரா சொந்த பிரச்சினையால்தான் அப்படி எழுதினார் என்று பதிவுகள் வர, நம்ம எஸ்ரா இதெல்லாம் செய்வாரா என்று கேள்வி வருகிறது.
அடபோங்கப்பா என்று அலுப்பு வந்து தொலைக்கிறது. இடையில் சாரு தனது பேஸ்புக்கில் எஸ்ரா நல்ல டிரான்ஸ்லேட்டர் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சாருவுக்கும் எஸ்ராவுக்கும் பிரச்சினை என்னவென்று தெரியவில்லை, அவர் மனுஷ்யபுத்திரன் கூட இருப்பதால் இருக்கலாம். இடையில் சாரு ஒரு பெண்ணிடம் உரையாடியதை தமிழச்சி போட்டு வறுத்தெடுத்தார் அது என்ன ஆயிற்று அதற்கு சாரு ஏதும் பதில் சொன்னாரா என்றும் தெரியவில்லை.
சாரு ஒருபக்கம் ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரன் தன்னால் முடிந்த அளவுக்கு சாருவையும் தனது பேஸ்புக்கில் போட்டு தாக்குகிறார், சாரு இப்போது ஞானியை சேர்ந்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஞானி சாருவை இண்டெர்நெட்டில் பிச்சை எடுக்கும் எழுத்தாளர் என்று திட்டியதாக ஞாபகம். இப்படி இந்த சண்டை போய்கொண்டிருக்கிறது. எனது போன பதிவு போல இது எழுதாளர்களைப்பற்றிய புரளி என்பதால் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கிறது.
எனக்கென்னமோ இவர்கள் எல்லாம் பேசிவைத்துக்கொண்டு சொல்வதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது, ஆகையால் விரைவில் இவர்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.
சரி ஒரு புரளி பேசிய திருப்தியுடன் முடிக்கிறேன்.
தவநெறிச்செல்வன்

Jan 21, 2012

புரளிதான் அடிநாதம்.

”எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் பிறர் மனைவியைக் காதலிக்கற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும், எனக்கும் எழுதும் பொழுதோ, மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும், நிர்ப்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும், பிடுங்கல்களும், அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்கு பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.”

தி. ஜானகிராமன்! சிலிர்ப்பு என்ற சிறுகதைத் தொகுப்பில். இந்த மேற்க்கோளை குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் கீழே நான் எழுதப்போவதவற்கும் எந்த சம்பந்தமில்லை. இந்த விவரம் சாரு தளத்தில் இருந்து கிடைத்தது.

ஒருவன் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் மேலே உள்ள முதல் பாரா ஒரு சரியான பதிலாக இருக்க கூடும்,

தி.ஜானகிராமனின் மோகமுள் கொஞ்சம் படித்ததோடு சரி, வேறு எதையும் படிக்கவில்லை, சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை இழுத்து பிடித்து படிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில எழுத்தாளர்களின் எழுத்து நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எழுத்தாளர்கள் மாறி இருப்பார்கள், அல்லது மாறிக்கொண்டே இருப்பார்கள். சாரு அந்தவிதத்தில் மாறாமல்தான் இருக்கிறார். அவருடைய எழுத்தை பிடிக்காதவர்கள் கூட தொடர்ந்து படிக்க நேரும் என்றுதான் தோன்றுகிறது படிக்க தொடங்கிவிட்டால், அதற்கு பயந்து கொண்டு வாங்காமல் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

போகட்டும். இந்த கட்டுரை எழுதவேண்டிய நோக்கம் புத்தக விழா நடந்து முடிந்து விட்ட நிலையில் ஊரில் இருந்தும் போகமுடியாமல் போய்விட்ட வருத்தம் ஒரு பக்கம். நீண்ட நாட்களாக எதுவும் பதிவிடாதது ஒருபக்கம், முதல் பாராவை படித்து விட்டது ஒருபக்கம் என்று பல காரணங்கள். விளைவு உங்களுக்கு இந்த கட்டுரைத் தொல்லை.
மனிதன் தன்னைப்பற்றி அல்லது தான் அறிந்தது பற்றி வெளியே சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான், இல்லாது போனால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடக்கூடும். அதற்காகத்தான் அவனை சமூகச்சூழலில் வைத்திருக்கிறார்கள். காலையில் எழுந்து பல்தேய்க்க பிரஷ் கேட்பதில் தொடங்கி வழக்கமாக கைக்கு வரும் காப்பியை ரெடியா என்று கேட்டு. எவ்வளவு எழுப்பினாலும் எழும்பாத குழந்தையை அதே முறையில் மீண்டும் முயற்சி செய்து. அன்றைய பேப்பர் படித்து அடிக்கும் கமெண்ட் களை ரசிக்க நேரமில்லாத மனைவியிடம் அந்த காலை வேளையில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கூறிப்பார்த்து.

அல்லது காலையில் கரவைக்கு இழுத்து போகும் மாட்டிடம் தன் வீட்டு கதைகள் எல்லாம் சொல்லி, எல்லோரும் படுத்துகிறார்கள் நீயாவது சீக்கிரம் வந்து தோலையேன் என்று புலம்புவதும்.

பக்கத்து வீட்டு கதைகளை வேலைக்காரி சொல்லும்போது அது அநாகரீகம் என்று தெரிந்தாலும் நாம் கேட்டு நமக்குள் வைத்துக்கொள்ளப்போவதால் தப்பேதும் இல்லை என்று உற்சாகப்படுவதும். அதே கதையை அக்கறையாய் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லும்போது அக்கறையின் காரணமாக அறிவுரைதானே சொல்கிறோம் என்று நியாயப்படுத்திக்கொள்வதும். அதனால் பூகம்பம் வெடிக்கும் போது பிரச்சினைகள் வெளிவந்தால்தான் அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதற்காக முயன்ற பெருமையை ஏற்றுக்கொள்வதும் அதுபோய் ஒரு ஸ்டவ் வெடிப்பில் முடிகிறபோது தர்மபிரபுவாய் மாறி அங்கேயே நீதி வழங்குவதும் கூட ஒருவகையில் முதல் பாராவைத்தான் நினைவு படுத்துகிறது.

மனித மனம் பேசத்தான் ஆசைப்படுகிறது. ஆனால் அங்கே பேசமுடியாத போத அது எழுத்தாய் வருகிறது. தூய தமிழில் இதை புரளி பேசுவது என்பார்கள். புரளி மட்டும் பேசாமல் இருந்தால் மனிதன் பைத்தியம் பிடித்தவனாகிவிடுவான். அவரவர் நிலைக்கேற்ப அந்த புரளி சுகமும், தன்மையும், சுவையும் கூடியதாக இருக்கிறது. ஆகையால் இப்படி புரளி பேசி பெரிய பிரச்சினைகளை கண்ட மனிதன் ஒரு முடிவுக்கு வந்தான்.

நிஜத்தில் நடக்கும் விஷயங்களை பேசினால்தானே பிரச்சினை வருகிறது. என் வீட்டு வாசலில் வந்து கண்ட கண்ட வார்த்தைகளில் திட்டுகிறாய். நானே ஒரு குடும்பத்தை அல்லது கூட்டத்தை கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றிய புரளியை பேசுவதென்ன பதிப்பித்து புத்தகமாகவே வெளியிடுவேன் என்று முடிவெடுத்த புரளி மன்னர்களால்தான் கதைகளும் நாவல்களும் வந்தனவோ என்னவோ.

இப்போது பெரிய எழுத்தாளர்கள் அல்லது புத்தகம் வாசிப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் நல்ல 100 புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதை காணலாம். அவையெல்லாம் புரளிகளா என்றால் இல்லை. புரளிகளை தேடிப்போனவைகள் பயணக்கட்டுரைகளாகின்றன, நாகரீக பறிமாற்றங்களாகின்றன. அல்லது வரலாற்று புதினங்களாகின்றன. ராஜராஜன் அல்லது சுந்தரசோழர் வீட்டு குடும்பச்சண்டைதானே பொன்னியின் செல்வனாகியது. அதை எத்தனை சுவாரஸ்யத்துடன் படிக்க முடிந்தது. ஆனால் கற்பனை நாவல்கள் அத்தனை சுவாரஸ்யமாக படிக்க முடியாமல் போனதன் காரணம், பொன்னியின் செல்வன் நடந்த ஒரு குடும்பசண்டை. கற்பனை அல்ல என்பதால் கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஏதோ ஒரு சாதராண சம்பவமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப்பார்த்தால் இதில் உள்ள மனோ தத்துவம் புரியும் எல்லா கலைகளிலும் அடி ஆழம் ஒரு புரளிதான் என்று தோன்றுகிறது.