Feb 9, 2012

எழுத்தாளர்களின் அடிதடிகள்.

தமிழ் இலக்கிய உலகில் ஒரு அடிதடி நடந்து கொண்டிருக்கிறது, அதனைப்பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசனை. சரி கருத்து தெரிவிக்கிற உரிமை என்னத்திற்கு விட்டு கொடுப்பானேன் என்று இங்கே எனது கருத்தை பதிவு செய்து விடலாம் என்று இருக்கிறேன்.
பெரும்பாலும் இந்த அடிதடி சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் நடக்கும் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் முடிந்தவர்கள் எண்ணை ஊற்றுவார்கள். இப்படி சர்ச்சைகளின் உருவமாக இருந்த சாரு ஜெயமோகனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மனுஷ்யபுத்திரனையும் ரஜினியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த கூட்டமைப்பின் விதமே புரியவில்லை, பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் இந்த எழுதாளர்களின் சண்டைகள் கொஞ்சம் நஞ்சம்மல்ல.
ஆனால் வாசகர்களுக்கு இது ஒருவகை அல்வாதான், இவர் இப்படியும் பேசுவாரா என்றும் ஒவ்வொருவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கூடவே சுவாரஸ்யமான கூத்துக்களும் கிடைக்கும்.
இத்தனை வருஷம் தமிழ்நாட்டில் இருந்தும் ரஜினி இன்னும் நல்லா தமிழ் பேசவில்லையே என்று சந்திரமெளலீஸ்வரன் கேட்டபோது எனக்கும் கூட கொஞ்சம் உறுத்ததான் செய்தது. ரஜினி எங்கே பேசினார் என்கின்றீர்களா, எஸ். ராமகிருஷ்ணனுக்கு கனடாவின் ஒரு அமைப்பு இயல் விருது கொடுத்திருக்கிறது. அதற்கு உயிர்மைப்பதிப்பகம் ஒரு விழா எடுத்தது, அதில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு பேச அதுதான் இன்று முக்கிய விஷயம் ஆகி விட்டது. டிசம்பர் 6ம் தேதி சாரு எக்சைல் என்ற தனது நாவல் வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த, அதற்கு போட்டியாக மனுஷ்ய புத்திரனும் எஸ்ராவும் சேர்ந்துகொண்டு கூட்டம் கூட்ட ரஜினியை கூட்டி வந்து விட்டார்கள்.
இதனை உடனடியாக சாரு எக்சைல் விமர்சனக்கூட்டம் போட்டு எழுத்தாளர்கள் நடிகர் பின்போவது வெட்கக்கேடு என்று பேச, நீ மட்டும் குஷ்புவையும், ஓவியாவையும் கூப்பிடவில்லையா, மிஷ்கினிடன் கொஞ்சநாள் கோண்டாட வில்லையா என்று கேள்விகள்.
மனுஷ்யபுத்திரனுடன் சாரு பிரிந்ததில் எக்சைல் நாவல் கிழக்கு பதிப்பகத்துக்கு கிடைத்து. இன்னும் பல சாருவின் நாவல்கள் மனுஷ்யபுத்திரந்தான் வெளியிடுகிறார்.
இதனிடையில் காவல்கோட்டம் எழுதிய சு,வெங்கடேசனையும் அந்த நாவலையும் எஸ்ரா போட்டு கிழிகிழி என்று கிழித்து அதைப்படித்து அது குப்பை என்ற் நான் வாங்க கூட இல்லை. இப்பொது அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்து விட்டதில் எஸ்ராவின் பேரும் கிழிகிறது. ஒரு பக்கம் ஜெயமோகன் காவல்கோட்டம் அற்புதமான நாவல் என்று கூற, எஸ்ரா சொந்த பிரச்சினையால்தான் அப்படி எழுதினார் என்று பதிவுகள் வர, நம்ம எஸ்ரா இதெல்லாம் செய்வாரா என்று கேள்வி வருகிறது.
அடபோங்கப்பா என்று அலுப்பு வந்து தொலைக்கிறது. இடையில் சாரு தனது பேஸ்புக்கில் எஸ்ரா நல்ல டிரான்ஸ்லேட்டர் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சாருவுக்கும் எஸ்ராவுக்கும் பிரச்சினை என்னவென்று தெரியவில்லை, அவர் மனுஷ்யபுத்திரன் கூட இருப்பதால் இருக்கலாம். இடையில் சாரு ஒரு பெண்ணிடம் உரையாடியதை தமிழச்சி போட்டு வறுத்தெடுத்தார் அது என்ன ஆயிற்று அதற்கு சாரு ஏதும் பதில் சொன்னாரா என்றும் தெரியவில்லை.
சாரு ஒருபக்கம் ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரன் தன்னால் முடிந்த அளவுக்கு சாருவையும் தனது பேஸ்புக்கில் போட்டு தாக்குகிறார், சாரு இப்போது ஞானியை சேர்ந்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஞானி சாருவை இண்டெர்நெட்டில் பிச்சை எடுக்கும் எழுத்தாளர் என்று திட்டியதாக ஞாபகம். இப்படி இந்த சண்டை போய்கொண்டிருக்கிறது. எனது போன பதிவு போல இது எழுதாளர்களைப்பற்றிய புரளி என்பதால் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கிறது.
எனக்கென்னமோ இவர்கள் எல்லாம் பேசிவைத்துக்கொண்டு சொல்வதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது, ஆகையால் விரைவில் இவர்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.
சரி ஒரு புரளி பேசிய திருப்தியுடன் முடிக்கிறேன்.
தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்