Sep 13, 2012

அணு அரசியல்

அணுவை பிளக்க அறிந்தோம்


அதை ஆக்கத்திற்கென்றே உரைத்தோம்

ஆனாலும்

பொக்கரான்களில் புழுதிகளுக்கிடையே

போர்த்தி வைத்தோம்.

ஆக்கத்திற்கென்று கூறீனீர்களே? என்றார்கள்

ஆமாம்

அதற்காகத்தான் அதற்கு

“அமைதி அணுகுண்டு”

என்று பெயரிட்டோம் என்றோம்.

உலகமெல்லாம்

அணுவைக்கண்டு அலறுகிறபோதும்

நாங்கள் அதை

கூடங்குளத்தில் கொண்டுவந்தோம்

2020ம் ஆண்டில்

உலக வல்லரசாய் உயர்வதற்கு

உதவும் திட்டம் என்றோம்

அன்று கேரளம்

இந்தியா 2020ல் வல்லரசாய் மாறுவதை விரும்பவில்லை

தானைத் தமிழகம்

தலைகுனிந்து வல்லரசு பட்டத்தை

வாரி வழங்க முன் வந்தது.

ஆனாலும்

ஒன்றும் அறியா மக்கள்

வேண்டாம் வீபரீதம் என்றார்கள்

எங்களின் சவக்குழியில் விளக்குகள்

எதற்கென்றார்கள்.

நாங்கள் நிபுணர்களை நாடினோம்

ஒரே நாளில் உற்பத்திக்கான

ஓப்புதலை வழங்கினார்கள்

என்னே எளிமை

பின்னே ஏன் போராட்டம் என்றோம்?

20 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

அழிக்க முடியாதது அணுக்கதிர் வீச்சு

என்றார்கள்,

கதீர் வீச்சை கண்ணிலே காட்டமாட்டோம் என்றோம்

கழிவுகள் கடலில் கரைந்தால்

கடல் வளம் காணாமல் போகுமே என்றார்கள்

இருக்கும் அணு உலைகளில்

ஏற்பட்ட விபத்தை எல்லாம் பட்டியலிட்டார்கள்.

கவலைப்படாதீர்கள் காப்பாற்றுகிறோம் என்றோம்

எப்படி காப்பாற்றுவீர்கள் என்றார்கள்

இன்னும் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்றோம்

போபாலில் போனவர்களை

காப்பாற்றிய கதை தெரியாதா என்றார்கள்

மீடியாக்களின் மீது கோபம் வந்தது,

செய்திகளை வெளியிடுவதில் தர்மம் வேண்டும் என்றோம்.

எல்லா செய்திகளையும்

இப்படி வெளியிட்டால்

எப்படி வளர்ச்சி திட்டங்களால் எங்களை வளர்த்துக்கொள்வது என்றோம்

ஆயிரங்களில் தொடங்கி

கோடிகளைத்தாண்டி

லட்சம் கோடிகளையும்

கோடி கோடிகளை தாண்டி விட்டோம், இதுவா பிரமாதம்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று

எங்களுக்கு நன்றாக தெரியும்

எதிர்பாருங்கள்

இதுவும் தாண்டிப்போகும் ஒருநாள்.

-------------------------------------------------------------------------தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்