Mar 23, 2011

தமிழக தேர்தல் 2011


தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி, கட்சிகள் கூட்டணி நாடகங்கள் முடிந்து பிரச்சாரங்களுக்கு தயாராகிவிட்டன. நீண்ட அரசியல் ஆர்வம் உள்ள யாவருக்கும் இந்த தேர்தல் ஒரு திருவிழாதான். இந்தியாவில் எனக்கு பிடித்த கொண்டாட்டம் என்ன என்று கேட்டால் அது தேர்தல் என்றுதான் நான் சொல்லுவேன்.

காரணங்கள், பல பெரிய சிறிய மனிதர்கள் என்றில்லாமல் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு கடமையும் நினைவு கூறப்படுகிற காலம். ஓவ்வொருவரும் சில மணித்துளிகளாவது நாட்டைப்பற்றி நினைக்கின்ற காலம். ஊரெல்லாம் வண்ண தோரணங்கள், வாணவேடிக்கைகள், பலரின் நிஜ முகங்களை கிழித்துப்போடும் பொது கூட்டங்கள். ஊர்வலங்கள். என்று மொத்த நாடுமே உற்சாகத்தில் திகழும் ஒரு சுகம் இப்போதுதான்.
முக்கியமாக தொலைக்காட்சி பெட்டிகள் மக்களை வீட்டுகுள்ளேயே கட்டிப்போட முடியாத ஒரு விழா, மற்ற விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மனிதர்களை வெளியே வரமுடியாமல் கட்டிப்போட இந்த நாட்களில் தொலைக்காட்சிகளால் முடியவில்லை. காரணம் தேர்தலின் பொருட்டு அவைகள் செய்யும் விளம்பரங்கள் பல நாட்களாய் தொடர்வதால் மக்கள் அதில் அலுத்துப்போய் விடுகிறார்கள்.

ஆனால் இப்போதைய தேர்தல் தேர்தல் எனக்கு கொஞ்சம் ஆர்வமில்லாமல்தான் இருக்கிறது. மிகுந்த காரணங்கள் உண்டு. கட்சிகளிடையே பொங்கி எழுந்திருக்கும் சந்தர்ப்பவாதம், பேரங்கள்,தேர்தலுக்காக மட்டும் கூட்டு என்ற புதிய சித்தாந்ததங்கள், ஊழலில் பொங்கி திளைத்து கிடப்பவர்கள் எல்லாம் ஊழல் என்றால் என்ன என்பது மாதிரி ஒரு அப்பாவியான முகத்தோடு உலாவரும் கொடூரம். நம் பிரதமர் கூட இப்படி ஆகிவிட்டாரே என்று ஒரு ஆதங்கம்.

நல்லவேளையாக உச்சநீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் கேள்வி கேட்க ஆளிருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல்.

சரி தேர்தலுக்கு வருவோம். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கலாம் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாக எல்லாரிடமும் இருக்கும். எனக்கு அதற்கான பதில் சுலபமாக தெரியும். திருமங்கலம் தேர்தல் போல் நடந்தால் திமுக கூட்டணி ஜெயிக்கும், அல்லது அப்படி இல்லாமல் இருந்தால் அதிமுக கூட்டணி ஜெயிக்கும். ஆனாலும் வைகோவை இழந்தது அதிமுகவிற்கு இருவகையான இழப்பு, ஒன்று கூட்டணி மற்றும் பிரச்சார பலம் குறைந்துவிட்டது, இரண்டு வைகோவை ஏமாற்றிய ஒரு மோசமான சந்தர்ப்பாவதியாக ஜெ. என்னைப்போன்றவருக்கு தெரிவது.

இதில் தேர்தல் கமிஷனின் பணி பாராட்டக்குரியது என்றுதான் தோன்றுகிறது. காரணம் திமுக தலைவர் கமிஷனை கண்டிக்கிறார் என்றால் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்கள் என்றுதான் பொருள். ஆகையால் இறுதிவரை அவர்கள் அவ்வாறு செயல்பட வேண்டும் நடுநிலைமையோடு என்று எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.

சரி இதில் கட்சிகள் கூட்டு சேர்ந்திருக்கிற நிலையை பார்க்கும்போது வருகிற சட்டசபை ஒரு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக அணி வெற்றி பெற்றால் அது முழு மந்திரிசபை அமைக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது காரணம் 160 இடங்களில் அவர்கள் போட்டி இடுவதுதான். திமுக தலைவரின் தேர்தல் கணக்கு என்னவென்று புரியவில்லை, பல கணக்குகளை மாற்றும் திட்டங்களை வைத்திருக்க கூடும், கடுமையான அனுபவக்கூட்டணி திமுக அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதிமுக அணியில் காலத்தில் முடிவு எடுக்க முடியாத இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளதால் இது பலவகைகளில் இன்னல்களை கொடுக்கும், தேமுதிக கூட பண்ருட்டியாரை இரண்டாம் இடத்தில் வைத்து கொஞ்சம் அரசியல் காய்களை நகர்த்துகிறது என்பது தெளிவு, இப்போது அதிமுக அணி ஒரு பலம் பொருந்திய அணி போல காணப்படுவது உண்மை ஆனால் அதன் அனுபவ குறைவு திமுகவுக்கு மிகவும் சாதகமான சூழலை உண்டாக்கும்.

சரி மக்களின் மனநிலை எப்படி என்றால் சிறிய உதாரணம் திமுக தலைவர் சென்னை விட்டு திருவாரூருக்கு போனதும், தளபதி ஆயிரம் விளக்கு விட்டு குளத்தூருக்கு போனதும் ஒரு உதாரணம், 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று சொல்லும் தலைவர்களே தாங்கள் போட்டி இட்ட தொகுதிகளில் போட்டி இட முடியாத நிலை இருப்பது மக்களின் மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கிராமப் புறங்களில் இந்த பாதிப்புகள் இல்லாமல், இலவச தொலைக்காட்சி பெட்டியும், 108 சேவையும் சமையல் வாயு இணைப்பும் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஆளும்கட்சி இருப்பதுதான் சோகம், இன்றைய ஊடகங்கள் நகரங்கள் அளவுக்கு செய்திகளை கிராமங்கள் தோறும் பரப்புகின்றன என்பது கவனிக்கவேண்டியது. 5 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்த தலைவர்கள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானதற்காக சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழ் மக்கள் விரைவில் திமுக தலைவரின் வாயால் திட்டு வாங்க போகிறார்களா அல்லது வாழ்த்து பெறப்போகிறார்களா என்பதை மே 13 க்கு பிறகுதான் தெரியும்.

இந்த தேர்தலின் பிரச்சார நாட்களை 17 நாட்களாக தேர்தல் கமிஷன் குறைத்திருப்பது ஒரு வித்தியாசமான மாற்றம், இது பல சட்டவிரோத பிரச்சினைகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும். என்றே தோன்றுகிறது. இதெல்லாம் திமுக தலைவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்காத விஷயம். மற்றும் கடுமையான சோதனைகளால் பணம் புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் ஒரு வகையில் இந்த தேர்தலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளாகும்.

போகப்போக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

2 comments:

  1. Ayya...
    YEdho JAyalolita vum Kumbalum Yokkiya seelargal polavum... Oolal..adavadi..vottuku paname kodukadhadhu polavum... Avargal aatchi seydhapodhu thenum paalum odinadhu polavum yeludhi ullirgale... Kollai adichalum yethunai thittangal seyal opaduthapatullana theriyuma kadandha aatchiyil. Thamil naatil dhan ullirgala neengal..? Website s ai parthu vimarsanam seyyadheergal!!!

    ReplyDelete
  2. அய்யா அனானி அவர்களே, ஜெயலலிதா சிறப்பான ஆட்சி தந்தார் என்று எங்காவது நான் எழுதி இருக்கின்றேனா? உங்களின் கோபம் புரியவில்லையே.இருவருமே ஓன்றென ஆனபின் யாரைப்போய் பாராட்ட?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்