Apr 19, 2009

பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல்

இந்த தேர்தல் எத்தனை விதமான முடிவுகளைத்தரப்போகிறது என்று தெரியவில்லை அதனோடு ஒரு சரியான முடிவுக்கு வர முடியாமல் கிட்டதட்ட எல்லா கணிப்பாளர்களும் திணறுவது அவரவர் முடிவுகளை காணும்போது தெரிகிறது, இருந்தாலும் கேரளத்தின் சூழ்நிலையை அங்கே உள்ள நண்பர்கள் மூலம் காணும்போது அது காங்கிரஸூக்கு சாதகமான சூழல் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

என்ன இருந்தாலும் தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் எனக்கூட்டணி காட்சிகள் மாறப்போவதால் எந்த கட்சியும் தற்போது மிக கடுமையான விமர்சனங்களை வைக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது, அதிமுக கூட தேர்தலுக்கு பின் காங்கிரஸூடன் கூட்டணி வாய்ப்புகளை நிராகரிக்காது என்றே நம்புகிறேன், அப்படி தேர்தலுக்கு பின் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை தமிழகத்தில் விலக்கவேண்டி வரலாம்,

 

இப்படி பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல் செல்கிறது, ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் மிகப்பெரிய தோல்வியை தழுவக்கூடும் என்று கூறுகிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஒருவேளை அப்படி நடந்தால் அது புதிய கட்சி தொடங்க ஆசைப்படும் மற்ற நடிகர்களுக்கு பாடமாக அமையலாம்,

 

தேமுதிகவின் இந்த தேர்தல் ஒரு முன்னேற்ற பாதையாக இருக்கும் என்று நம்புகிறேன்,

அவர்கள் வெற்றி பெறுவதை விட சதவீதத்தை கூட்டும் முயற்சியில்தான் இருக்கிறார்கள், காங்கிரஸூடனான கூட்டணி ஏற்படாதது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன்,

 

சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகுறிகளை இந்த தேர்தல் உண்டாக்கும்.

 

திமுகவின் உள்கட்சி விவகாரங்கள் இந்த தேர்தலுக்கு பின் புதிய பரிமாணம் பெறலாம் அதன் தோல்வி விகிதம் மற்றும் அழகிரியின் மதுரை வெற்றி வாய்ப்புகள் போன்றவைகள் இதற்கான காரமாக அமையும், மதுரை அந்த வகையில் மிக முக்கிய பங்காற்றப்போகிறது.

 

குஜராத்திலும் இந்த தேர்தல் ஒரு புதிய திசையில் செல்கிறது, அதன் நவீன் பட்நாயக் தனது கூட்டணியை மாற்றி விட்டதில் ஒரு அக்னி பரிட்சையை எதிர்கொள்கிறார், அவர் மீண்டும் பெறும் வெற்றியின் அளவு பல கணக்குகளை மாற்றப்போகிறது,

 

இதில் முக்கியமான விஷயம் மாயாவதியின் வெற்றிதான், எனக்கென்னவோ இந்த முறை மாயாவதி மிக அதிகப்படியான தொகுதிகளை பிடிப்பார் என்றே படுகிறது அதனால் ஏற்படும் மாற்றம் நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தை மத்திய ஆட்சி அமைப்பில் உண்டாக்கும், இந்த தேர்தல் மாயாவதின் தேர்தலாக அமைந்துவிட நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே நினைக்கிறேன், லாலுவும், சிபுசோரனும் இன்னும் ஒரு குழப்பமான தேர்தல் முடிவுக்கு வித்திட்டிருக்கிறார்கள், அவர்களின் கூட்டணி தொடர்பான முடிவுகள் சரியான பலனைத்தரும் என்று தோன்றவில்லை.

 

மகராஷ்டிரா நிலமையும் ஒரு குழப்பத்தில்தான், சரத்பவாரின் நிலையில் உள்ள குழப்பங்கள் பிரதமர் ஆசை போன்றவை என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை, சிவசேனாவின் முடிவுகள் சரத்பவாருக்கு சாதகமாக இருக்க கூடும் தேர்தலுக்கு பின் ஆனால் அங்கு சீட்டுக்கள் சிதறிப்போகும் வாய்ப்புகள் இருக்கின்றன,

 

ராஜஸ்தான் குஜராத் இரண்டும் ஒரு வகையில் பிஜெபிக்கு சாதகமாக போகலாம்.

 

இப்படி குழப்பங்கள் மிக அதிகமான தேர்தல் இதுவாகத்தான் இருக்கும், எக்கச்சக்கமான கட்சிகள் என்பதால் யாரும் யாரையும் விடமுடியாத நிலை எங்கும் காணப்படுகிறது, உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அரசியல் நிலைமை இங்கு, இடதுசாரிகள் மிக மோசமான நிலைக்கு இந்ததேர்தலில் கொண்டு செல்லப்படலாம்.

 

உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டு கிடக்கிற நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று என்பது நிச்சயம், இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிக மோசமான பொருளாதார பிரச்சினையால் திணறிக்கொண்டிருக்கிறார்கள், அதில் இருந்து மீள அவர்களுக்கு இந்தியா சீனா போன்ற நாடுகளுடனான வர்த்தகம் மிக முக்கியம், அதற்கு இந்தியாவில் அமையப்போகும் அரசின் செயல்பாடு இடதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் போகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

 

ஒகே.

 

தேர்தல் கிட்ட நெருங்கி கிட்டே இருக்கு, அவங்க அவங்க வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கலாம் ஆனா பகுத்தறிவு பண்பாளர்கள் எல்லாம் அஷ்டமி நவமின்னு பார்க்க வேண்டி இருக்கிறதால கொஞ்சம் லேட்டாதான் வருவாங்க, அது பிரச்சினை ஆகாம இருக்கனும் இல்ல, நவமி ராமருக்கு உகந்த நாள் அப்படிங்கறதால யாராவது பி.ஜே.பி காரங்க தாக்கல் பண்ணாலும் பண்ணலாம்.

 

அது போகட்டும் இந்த தேர்தல் கமிஷன் வேற கடுமையான சட்டம் எல்லாம் போட்டு படுத்தறாங்கப்பா? நாலுபேர்தான் மனு கொடுக்கிறவங்க கூட போகனுமாம், 3 கார் மட்டும்தான் அனுமதியாம், ஊர்வலம் எல்லாம் போகக்கூடாதுன்னு கண்டிப்பா நம்ம தேர்தல் கமிஷன் சொல்லிட்டதுனாலா நம்ம வேட்பாளர்களுக்கு செலவு குறையும் என்று சந்தோஷம் எல்லாம் படாதீங்க,

 

அப்புறம் இந்த பிரச்சாரம் பற்றி பல விஷயங்கள் நாம் கவனிக்கணும் பல மாதிரி கண்டிஷ்ன்கள் இருப்பதால் அதெல்லாம் பெரிய சங்கடமாக இருக்கிறது, அதோடு தினந்தோறும் வேட்பாளர்கள் மாற்றப்படும் வாய்ப்புகள் இருப்பதால் பல வேட்பாளர்கள் ஏப்ரல் 27 க்கு பிறகு தொடங்கலாம் என்று இருக்ககூடும், பின்ன எல்லாம் சுவரும் எழுதி எல்லாம் முடிந்த பிறகு நீ இல்ல தம்பி வேற ஆள மாற்றிட்டோம்னு சொன்னா என்ன ஆவும், எனக்கென்னமோ இவ்வளவு நாள் யோசிச்சு ஒரு வேட்பாளர் அறிவிச்ச பின்ன எப்படி ஒரிரு நாளில் அவர் பொருத்தமில்லாதவர் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ.

 

அது போகட்டும் நாம் என்ன செய்ய வேண்டும் , அவசியம் ஓட்டு போடவேண்டும் கேரளாவில் 72 சதவீதம் ஓட்டு பதிவாகியிருக்கிறது, அது படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதாலா? இல்லை படித்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடுவதில்லை, அங்கே உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஆட்சியாளனை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு மிக முக்கியமானதாக இருப்பதாக உணர்கிறான், பேப்பர் படிக்காத அரசியல் பேசாத மலையாளிகள் எனக்கு தெரிந்தவரை மிக மிக குறைவு. நம் மாநிலத்தில் அரசியல் பேசுவது ஏதோ வேலைவெட்டி இல்லாதவன் பணி போல ஆகிவிட்டது.

 

நமது மாநிலத்தில் ஓட்டு போடுவதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, போன உள்ளாட்சி தேர்தலில் “ஏன்மா நீங்க ஓட்டு போடவந்தீர்கள் இங்கே பிரச்சினை இருக்குன்னு தெரியும்ல” என்று போலிசாரே கேட்டதெல்லாம் பத்திரிக்கையில் வந்தது அதனால் ஓட்டு போடுவதற்கு முன் உங்களுக்கு பிடிகாதவர்கள் யாராவது இருந்தால் அனுப்பி பார்த்து விட்டு பின்னர் சென்று பார்க்கலாம் என்று எனது நண்பன் அறிவுரை கூறினான்,அதை உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியுமா என்று புரியவில்லை.

 

ஆனால் ஓட்டு போடுவது மிக முக்கியமான கடமை என்று நாம் புரிந்து கொண்டு எல்லோரும் வருவார்கள் என்று தெரிந்தால் வன்முறைகள் குறையும் என்று நான் நம்புகிறேன்,

 

தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்