Jun 26, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-2

கு.சே (இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.) அப்படி விழித்துக்கொண்டு நிற்பதை பார்த்து அதே வரிசையில் நின்றிருந்த ஒரு தமிழ்நாட்டுக்காரர் அவனை அருகே அழைத்தார், அப்போது கு.சே அவரிடம் ஒரு உலக மகா பணிவுடன் சென்று தனது பாஸ்போர்ட்டை நீட்டினான் அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு உங்கள் விசா எங்கே என்று கேட்க அவன் தன்வசம் இருந்த ஒரு விசாவின் ஜெராக்ஸ் காப்பியை காண்பிக்க அதற்கு அவர், “இது காப்பி ஒரிஜினல் அந்த கவுண்டரில் சென்று வாங்கி வாருங்கள் அப்போதுதான் விடுவார்கள்” என்று சொன்னார்,

அப்போதுதான் குலசேகரனுக்கு உயிரே வந்தது, ஆகா இதை யாருமே சொல்லவில்லையே, அந்த டிராவல்ஸ் காரன் கையில் கிடைத்தால் நையப்புடைக்கலாமே என்று எண்ணிக்கொண்டு அந்த கவுண்டர் நோக்கி போனான், அங்கே ஒரு அரபு நாட்டுக்காரன் உட்கார்ந்திருந்தான் அங்கும் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களின் பின்னே நின்று கொண்டான், ஒவ்வொருவரும் தனது காப்பியை அவனிடம் கொடுக்க அவன் அதன் ஒரிஜினல் விசாவை கொடுத்தான், அப்பாடி இவ்வளவுதானா என்று தனது விசா காப்பியை காண்பித்து தனது ஒரிஜினல் விசாவை வாங்கி கொண்டு மீண்டும் அந்த பாஸ்போர்ட் வரிசைக்கு போனான்,

மெல்ல இவன் முறை வந்த போது பாஸ்போர்ட்டையும் விசாவையும் அவனிடம் கொடுத்தான் அந்த ஆள் இவன் பாஸ்ப்போர்ட்டை பார்த்து கொபுசா மிகொலைசே கர என்று இவனை அழைத்தான், அய்யோ குப்புசாமி குலசேகரன் என்ற பெயரை அவன் அப்படி அழைப்பது தெரியாமல் யாரையோ அழைக்கிறான் என்று அல்லது ஏதோ புரியாத பாஷையில் திட்டுகிறான் என்பது போல் அவனிடம் வழிந்து கொண்டு நிற்க அவன் ஏதோ பேசிக்கொண்டே இவன் பாஸ்போர்ட் மற்றும் விசாவில் இரண்டு சீல் அடித்து இவன் கையில் கொடுத்தான், வாங்கி கொண்டு எல்லோரையும் போலவே அவனும் அங்கிருந்து நடந்து அடுத்த நிலைக்கு வந்தான்,

அங்கே இவன் கூட வந்த பயணிகள் கன்வேயர் பெல்ட் அருகே ஒரு தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள், கன்வேயர் பெல்டில் அவரவர் லக்கேஜ்கள் சுற்றிக்கொண்டிருந்தன, கு.சே அங்கே இருந்த தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனும் அவர்களோடு நின்றான், அவன் பெட்டிகள் அதில் வருகிறதா என கவனிக்க தொடங்கினான், ஒவ்வொருவராக அவரவர் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள், வெகுநேரமாகியும் இவன் பெட்டி வரவே இல்லை,ஒரே ஒரு பழய safari பெட்டி மட்டுமே துணிகளுடன் எடுத்து வந்திருந்தான்,

அது இன்னும் வராததால் மிகுந்த கவலை வரத்தொடங்கியது அதில்தான் இவன் சான்றிதழ்கள், எல்லாம் வைத்திருந்தான், அவனோடு வந்தவர்கள் எல்லாம் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு பொய்விட்டிருந்தார்கள், அங்கே பணிபுரியும் பணியாட்கள் யாராலும் எடுக்கப்படாத பொருட்களை எடுத்து தனியே வைத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் நமது கு.சே வின் சஃபாரி மட்டும் அங்கே புலப்படவே இல்லை, இதென்னடா வம்பாய் போய்விட்டது நான் எங்கே போய் தேடுவேன் என்று, அவனின் எதிர்காலமே அந்த சான்றிதழ்கள்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த கன்வேயர் பெல்ட்டின் எல்லாபுறமும் சுற்றி சுற்றி வந்தான், வேறு யாராவது தங்களது என்று தனது பெட்டியை எடுத்துபோயிருப்பார்களோ என்கிற பயம் வேறு அவனுக்கு மற்றவர்கள் தள்ளு வண்டியை கவனிக்கு முன் பெரும் பகுதி ஆட்கள் வெளியே போயிருந்தார்கள், என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அடிவயிற்றில் குபீர் என்ற பயம் மெல்ல பரவத்தொடங்கியது

தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்