Jun 20, 2009

சாருவும் நானும்-2

சாரு தனது தளத்தில் எனது கடிதத்தை வெளியிட்டு பதிலும் கொடுத்துள்ளார், இத்தனை பெரிய எழுத்தாளர் எனக்கு பதில் எழுதி என்னையும் மதிக்கிறார் என்பது மிகவும் பெருமையாக உணர்கிறேன், சாருவுக்கு நான் எழுதிய பதில் கடிதம் கீழே கொடுத்துள்ளேன்


அன்புள்ள சாரு,
எனது கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலில் உள்ள சில சந்தேகங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள மீண்டும் விரும்புகிறேன், தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக கவலைப்படுகிறேன்.

1.இஸ்லாம் அசைவ உணவு பழக்கத்தை அனுமதிக்கிறது என்று அதை நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லீம்கள் என்னை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதே வாதத்தை வைக்கும் எல்லோரும் இஸ்லாம் மது அருந்துவதையும், ஆடம்பர செலவுகளையும் தடைசெய்கிறது என்பதை ஏன் செயல்படுத்த மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம், ஆகையால் இதில் இவர்களின் விருப்பம்தான் முடிவு. இதில் ஏன் இஸ்லாமை இழுக்க வேண்டும்.

2.இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட அரபு தேசங்களில் வேறு உணவு வாய்ப்பு குறைவு என்பதால் மனிதனைத்தவிர மற்ற உயிர்களை சாப்பிடுவதை அது அனுமதிக்கவேண்டிய நிலை இருந்திருக்கலாம், கூடவே இஸ்லாம் பன்றி கறியை உண்பதை தடை செய்திருப்பதையும் கவனிக்கவேண்டும், ஆகவே வள்ளலார் மீனவர்களை சைவமாக்கியது போலத்தான் இந்த நிகழ்வு.

3.வேறு உணவு இல்லாத சூழலில் நானும் கூட ஒரு அசைவ நிலையை அடையக்கூடும் ஆனால், வேறு உணவுகள் இருக்கின்றபோது இது தேவையா? உயிர் பலி தேவையா?

4.மனித இனம் ஏன் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படவில்லை என்ற கேள்வியோடு, நான் இன்னும் ஒரு கேள்வியையும் இணைத்துக்கொள்கிறேன், ஏன் மிருகங்களுக்கு மதம் இல்லாமல் இருக்கிறது? சாரு எல்லா மத நூல்களும் கூறுகின்றன, மனித பிறப்பு அனுபவிக்க வேண்டி நல்லது கெட்டது இரண்டும் படைக்கப்பட்டிருக்கிறது அதில் மனிதன் நல்ல விஷ்யங்களை தேர்ந்தெடுத்தால் சுவர்க்க நிலையையும் கெட்டதை தேர்ந்தெடுத்தால் நரகத்தண்டனையும் அடைவான் என்று கூறுகின்றன, அதாவது மனிதன் சுய சிந்தனையுள்ள ஜீவனாக படைக்கப்பட்டிருக்கிறான் என்று, அதனால்தான் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படாமல் சுயமாக சிந்திக்க கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

(சாரு மதம் பற்றி நான் எழுதியிருப்பதால் மதப் பற்றாளன் என்கிற அளவில் என்னை நினைக்கவேண்டாம், என்னைப்பொருத்தவரை எல்லா மதங்களில் இருந்தும் நல்லதை (வசதியானதை அல்ல) எடுத்துக்கொள்ள விரும்புகிறவன், மேலும் மதம் மனிதனை கடவுளிடம் கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை இல்லாதவன் நான், என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன், மதத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதி இருப்பதால் நான் இவ்வாறு எழுதினேன்)

பரமஹம்சர் ரமணர் போன்றவர்கள் ஞானிகள், ஓஷோ ஜே.கே போன்றவர்கள் Healers என்று குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மைதான், ஒருவேளை Healer கள்தான் அடுத்த நிலைகளில் ஞானிகளாக மாறுகிறார்கள் என்று நினைக்கிறேன், அது சரியாக இருக்குமா?

அன்புடன்
தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்