Sep 11, 2012

ஏதோ எழுதுகிறேன்

நீண்டநாளாகிவிட்டது பதிவு புதியது எழுதி, முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் face book எனது நேரத்தை பிடித்துக்கொண்டது மற்றும் கூடவே பிறந்த சோம்பேறித்தனம் என்று சொல்லலாம், இப்படி பல காரணங்கள். நீண்ட நாளுக்கு பிறகு நடக்க முடியுமோ என்று பயந்து பயந்து தள்ளிப்போட்ட அண்ணாமலையாரின் கிரிவலம் இரண்டு முறை செய்து முடித்தேன், நம்ம ஊர் சாமிதானே என்கிற அலட்சியம் மற்றும் 14 கிமீட்டர் நடக்க முடியுமா என்கிறதான பயம் இப்படி பல காரணங்கள். மலையை சுற்றும்போது செருப்பு போடாமல் சுற்ற வேண்டும் என்று கூறினாலும் நான் செருப்பு போட்டுக்கொண்டுதான் சுற்றி வந்தேன். மெல்ல நடந்து ஒரு 6 மணிநேரத்தில் சுற்றிவந்தேன், வரும் வழியில் கிடைக்கும் உணவு பதார்த்தங்கள் மற்றும் குளிர்பானங்கள் என சாப்பிட்டுக்கொண்டே ஒரு சுற்றுலா போலத்தான் வந்தேன் என்றாலும் கோவிலைத்தாண்டியபிறகு நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. என்றாலும் மெல்ல நடந்து வந்து சேர்ந்தேன்.


நடப்பதில் பல நன்மைகள் இருப்பது உண்மை, மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சாமிகள், மனசு கவலையா இருந்தா உலாத்துங்கோ சரியாயிடும் என்று பலமுறை சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதுபோல் பல சித்புருஷர்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் குருமூர்த்து சாமிகள் வீட்டிற்கு வந்திருந்தார்கள், அவர்களின் அருகாமை பல அற்புதங்களை விளக்கியது, முதல்நாள் திருகழுக்குன்றத்தில் இருந்து வந்த அடியார் தலமையில் நடந்த திருவாசக முற்றோதல் விழா திருவண்ணாமலையில் நடந்தது. திருவாசகத்தை இப்படியும் படிக்கலாம் ஒரு கொண்டாட்டத்தோடு என்பது எனக்கு புதிதாக இருந்தது. ஒரு புளகாங்கிதமான பரவசநிலையில்தான் முழுமையாக இந்த விழா நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டு பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.

ஸ்ரீகுருமூர்த்தி சாமிகள் வந்திருந்து எனக்கு திரு அருட்பாவினை விளக்கி பல விஷயங்களை எடுத்து கூறினார், மகான்களில் வகைப்படுத்தல்களில் எங்குமே அடங்காத ஒரு அற்புத வடிவம் வள்ளல் பெருமானார், மகாத்மா காங்தி அடிகள் எப்படி வாழ்முறை சோதனைகள் ஓவ்வொன்றையும் செய்துபார்த்து உலக்கு விளக்கினாரோ அதுபோல் வள்ளல் பெருமான் ஞான வழி சோதனைகள் பலவற்றையும் தானே செய்துபார்த்து அதனை அனுபவித்து நமக்காக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும் அத்தனை தெளிவு, நான் சொல்கிறேன், பொய்யில்லை, நம்பு மானிடா என்பதை மிகத்தெளிவாக கூறுகிறார், இத்தனை அற்புதமான ஒரு வள்ளலை நாம் எப்படி தொடராமல் போனோம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. எம்ஜியாரையும், கருணாநிதியையும், சாதாரண சொற்ப அதிகாரங்களுக்காக தொடரும் இத்தனைக்கோடி கூட்டம், அற்புதங்கள் பல செய்யும் வாய்ப்புகள் உள்ள சன்மார்க்க நெறியை ஏன் தொடரவில்லை, வள்ளலாருக்கு பின் ஒருவர் கூட அவர் நிலையை அடைந்தவர் இல்லையா? அல்லது வெளியில் தெரியவில்லையா? என்று தெரியவில்லை.

இப்பொது அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கிய தொழிற்ச்சாலையில் இருந்து இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன், இது செனக்டடி என்ற ஊரில் நியுயார்க் மாகானத்தில் இருக்கிறது. GE நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி நிலையம், மிக பிரமாண்டமான தொழிலகம், ஆச்சர்யமான பணிகள், பயிற்சிக்காக இங்கே இரண்டு வாரம் தங்கி இருக்கிறேன்.

**********

மொட்டையன் சாமிகள், மூக்குப்போடி சாமிகள், முருகானந்தம் சாமிகள், கோணிப்பை சாமிகள், என்று பலவாறு அழைக்கப்படும் மகான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர். திருவண்ணாமலையில். சிலகாலங்களுக்கு முன் எல்லோராலும் அனுகக்கூடியவராக இருந்தார், இப்போது கடும் தனிமைதேடி யாரையும் அருகில் அனுமதிப்பதை தவிர்க்கும் வண்ணம் மிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோல் நடித்து, அருகில் போனால் விரட்டும் விதமும் நம்மை குலை நடுக்க வைக்கும் பயமுறுத்தலும் கொண்ட மகானாய் இருந்து வருகிறார். பலருக்கு அவரைத்தெரிந்திருக்கலாம், அவரால் பல நன்மைகள் பெற்றவர்கள் திருவண்ணாமலையில் எங்கும் உள்ளார்கள். எப்போதாவது அப்பிரதட்சனமாய் அண்ணாமலையை சுற்றி வருவார், காரிலோ, ஆட்டொவிலோ, அல்லது இரண்டு சக்கர வாகனத்திலோ, அப்படி அழைத்துப்போகிறவருக்கு அன்று அதிர்ஷ்டம்தான்.

அடுத்து சின்ன குஞ்சு என்று அழைக்கப்படும் மகான், இவர் வாழ்ந்து வருவது பூந்தோட்டம் என்கிற கிராமம், மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் வழியில், புகழ்பெற்ற சரஸ்வதிதேவி ஆலையம் உள்ள கூத்தனுரூம் இங்குதான் உள்ளது. முக்கிய சாலையின் பக்கத்திலேயே இந்த பெண் மகானின் தங்குமிடம், மகா நிர்வாணகோலத்தில் இருக்கும் இவர் நன்கு நம்மிடம் சாதாரணமாக பேசும் நிலையில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை ஊர்மக்கள் கல் போன்றவற்றால் அடித்து துன்புறுத்தினாலும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து சென்ற சேதுராமன் அவர்கள் அவரிடம் வணங்குவதும் அவருக்கு பணிவிடைகள் செய்வதும் கண்டு ஊர்மக்கள் மெல்ல புரிந்து கொண்டு இப்போது குடில் அமைத்து தந்திருக்கிறார்கள்.

அடுத்து பெயர் தெரியாத இன்னொரு மகான் ஆத்தா என்று என்னாலும் என் குடும்த்தினராலும் அழைக்கப்படும் பெண் மகான், இவர் இப்போது திருவண்ணாமலையில் இருக்கிறார். தினம் அண்ணாமலை சுற்றி வருவதும், தனது இரண்டு மூக்கிலும் காகிதத்தை வைத்து அடைத்துக்கொண்டு 24 மணிநேரமும் காணப்படுவதும் ஆச்சர்யமான ஒன்று. பல மொழிகளை பேசுவதால் பூர்வீகம் எதுவெனத்தெரியவில்லை, ஆந்திராவக இருக்கும் என்ற ஊகம் உண்டு பெயர் தெரியவில்லை.

இன்னும் பல மகான்களைப்பற்றி தொடர்ந்து எழுதவேண்டும். இதை எல்லாம் எழுதும் படி என்னை வற்புறுத்தியது எனது மனைவிதான்.

இது ஒரு ஆன்மிக பதிவுபோன்று ஆகிவிட்டது. என்றாலும் வாழ்வின் திசையில் நாம் எங்கு அடித்துச்செல்லப்படுகிறோம் என்று தெரியாமல், உறவுகள் சொந்தங்கள் இப்படி பலவற்றில் உழன்று வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று தேடிக்கொண்டே இருந்தாலும், அது நமது பக்கத்தில் இருப்பதை நாம் உணர்வதே இல்லை. இது போன்ற காலாவதியான தத்துவங்களை எழுதிக்கொண்டே இருப்பது என்னைப்போன்றவர்களுக்கு வாடிக்கையாகபோய்விட்டது என்றுதான் அவைகளை நான் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று தோன்றுகிறது. ஆனாலும், வீட்டில் பிரச்சினைகள் எல்லோருக்கும் பின்னாடி வந்து கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மனசிக்கல்களை என்னதான் செய்து தொலைத்தாலும் தாண்டி வரமுடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். எல்லாவற்றின் மூலமும் எளிமையும் தொண்டும்தான். அவைகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதில் இருக்கும் சுகம் வேறில் இல்லை. எல்லா பந்தங்களையும் நேசிப்பதிலும் அதை இழுத்துக்கொண்டு ஓடுவதிலும் பல சிரமங்கள் இருந்தாலும், அது நமக்கு வேண்டியவர்களுக்கு செய்கிறோம் என்று எண்ணாமல் நமது கடமையை செய்கிறோம் என்று எண்ணும்போது ஒரு திருப்தி வரும்,

ஆமாம் ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம், ஆகையால் உங்கள் நிழலைத்தவிர மற்றதெல்லாவற்றுக்கும் நீங்கள் வள்ளல் பெருமான் தான். முடிந்தது கொடுக்கும்போது அந்த ஜீவன் மகிழும், அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மேன்மைப்படுத்தும், சரியாக சொல்லிவிட்டேனா தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.

தவநெறிச்செல்வன்.

6 comments:

  1. சரியாக நாளை சதுரகிரி செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கும் சமயத்தில் இந்த பதிவை படிக்கிறேன் என்ன சொல்வதென்று தெரியவில்லை இந்த மாதிரி நிகழ்வுகள் பழகி விட்டன . மேலும் உங்களிடம் சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன் , அவை என்னவென்றால், சதுரகிரி , திருவண்ணாமலை போன்ற ஸ்தலங்கள் தமிழ் நாட்டில் இன்னும் எவ்வளவு இருக்கின்றன ? நான் என் நண்பர் நால்வருடன் நாளை சதுர கிரிவலம் செல்ல இருக்கிறேன், முதல் தடவை செல்ல இருக்கிறோம், அறிவுரைகள் தேவை, உடனடியாக தேவை, நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்,சேலம் அம்மாபேட்டையில் ஒரு சித்தர்கள் வாழும் பூமி இருப்பதாக அறிகிறேன், கொல்லிமலையிலும், திருப்பரங்குன்றத்தில் பல மகான்களின் சமாதிகள் இருக்கின்றன. பின்னர் சிதம்பரம், வடலூர், போன்ற ஸ்தங்களிலும் இப்படி பல மகான்களின் இருப்பிடங்கள் இருக்கின்றன. எல்லா பெரிய கோவில்களின் மூலமும் ஒரு மகானின் அடக்கஸ்தலமாகவே இருக்கின்றன. தாங்கள் இவைகளை தேடுவதன் நோக்கம் என்னவென்று தெளிய வேண்டும்,

      Delete
  2. அது என்ன ஜீஜீமா சுகிர்த்தா? விளக்குங்கள் நண்பரே, புகைப்படம் நெல்லைப்பன் முருகேசன் அவர்களை காட்டுகிறது. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. ”ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம்”

    மிகவும் அருமையான வரிகள், அதுபோல இங்கு பல மகான்களை நேரில் தரிசித்த பாக்கியம் கிடைத்தது போல உணர்ந்தேன்,தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஜீவா.

      Delete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்