Aug 10, 2009

ஸ்கட் ஏவுகனையும் நானும்

2003, மார்ச் 20 ம்தேதி, வியாழக்கிழமை, அதிகாலை, வழக்கம் போல் குவைத்தின் எனது நண்பரும் உறவினரும் எனது வளர்ச்சிக்கு கர்த்தாவுமான பாண்டியனின் குடியிருப்பில் இருந்து காலைப்பணிக்காக புறப்படும் போது தொலைக்காட்சியின் அனைத்து இயக்கங்களும் செய்திகளாக மாற்றப்பட்டிருந்தன, அமெரிக்க இங்கிலாந்து விமானங்கள் இராக்கின் நகரங்களின் மீது குண்டு வீச்சை தொடங்கி விட்டிருந்தன, கிட்டத்தட்ட ஆறுமாதமாக வருமோ வராதோ என்று பயந்து கொண்டிருந்த போர் தொடங்கிவிட்டிருந்தது, வயிற்றுக்குள் ஒரு சிறிய பந்து சுழல்வது புரிந்தது,

எனது மேளாலருக்கு உடனே தொலைபேசியில் அழைத்து, சார் war தொடங்கிவிட்டது போல் தெரிகிறது என்ன செய்ய என்று கேட்கிறேன், ஆமாம் நானும் பார்த்தேன், அதிகாலையிலேயே ஆரம்பித்து விட்டார்கள், இன்றைக்கு site க்கு போவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று சொன்னார், உடனடியாக கிளம்பி, கீழே வந்தேன், எனது வேன் காத்திருந்தது, அதில் இருந்த உடன் பணிசெய்யும் பொறியாளர்கள் எல்லோரின் முகத்திலும் ஒரு கவலையின் ரேகைகள் இருந்தது, ஆனாலும் ஏதொ ஒரு நம்பிக்கை, வேன் புறப்பட்டது, ஒவ்வொருவரும் பழய இராக்கின் குவைத் ஊடுருவலைப்பற்றியும் அப்போது நடந்த சம்பவங்களைப்பற்றியும் கவலையோடும் பயத்தோடும்பேசிக்கொண்டே இருந்தார்கள்,

இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் எனது மின்நிலையத்திற்கு செல்ல பாலைவனம் வழி பயணம். முதல் முதலாக ஒரு வெளிநாட்டு வேலைக்கு வந்து ஒரு ஆறு மாதம்தான் ஆகிற ஒரு நிலை, வந்ததில் இருந்தே அமெரிக்காவின் போர் ஆயத்த நடவடிக்கைகளை கண்டு கொண்டேதான் தினசரி அலுவலக பயணம், டாங்குகளும் சிறிய ஹெலிகாப்டர்களும் இன்னும் என்ன என்னவோ வாழ்க்கையில் பார்த்தே இராத ராணுவத் தடவாளங்களூம் ஆயிரக்கணக்கில் சாரி சாரியாக குவைத் துறைமுகங்களில் வந்து இறங்கி ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தன, அவைகளை பார்க்கும்போது ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது, காரணம் போர் வராது மிரட்டி சதாமை அடிபணிய வைக்கத்தான் இது போன்ற முயற்சிகள் என்று எண்ணம் எல்லோருக்கும் இருந்தது, காரணம் போரின் அழிவுகளைப் பற்றிய பழய அனுபவம் காரணமாக குவைத்தும் அதையே விரும்பும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், பின்னர் இங்கிலாந்து நீங்கலாக பிரான்ஸ் உட்பட எல்லா ஐரோப்பிய தேசங்களும் போருக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்ததால் ஐநாவில் போர் தொடங்க வேண்டியதற்கான அமெரிக்க தீர்மானம் தோற்கும் என்பது போன்ற ஒரு சூழல் இருந்தது,

ஈராக் தன்னிடம் உள்ள பேரழிவு ஆயுதங்கள் பற்றிய ஆய்வுக்கு முழு ஓத்துழைப்பு கொடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எல்லா ஆயுதங்களையும் ஓப்படைக்க வேண்டும் என்று ஐநா தீர்மானம் சொன்னது, ஆனால் அந்த காலக்கெடு கிட்டதட்ட முடிந்த நிலையிலும் அப்போதைய அமெரிக்க ஆய்வாளர்கள் ஈராக் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை பல ஊடகங்கள் மூலம் நிறுவிக்கொண்டிருந்தார்கள், கடுமையான கருத்துப்பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்ததன, குவைத்தில் இருந்த சாதாரண மக்களாகிய நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம், ஈராக்கில் நிறைய ஆபத்தான வாயுக்களைக்கொண்ட ஆயுதங்கள் இருப்பதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம்,

கெடு முடிந்தபின் போர் தொடக்க நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருந்தன, அதன் வீரியம் குவைத்தில் மெல்ல பரவத்தொடங்கியது, முக்கியமாக நாங்கள் தங்கியிருந்த பகுதி குவைத்தின் முக்கியமான தொழிற்ச்சாலைகள், எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள பகுதி, குவைத்தின் முக்கிய பொருளாதார கேந்திரம் என்று சொல்லலாம், ஆகையால் குவைத் மீதான தாக்குதலில் இந்த பகுதி முக்கியமாக ஈராக் ராணுவத்தால் தாக்கப்படும் என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது, ஆனால் இந்த பகுதியில் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது ராணுவ கேந்திரமோ எதுவுமே இல்லை, ஆனால் ஈராக்குக்கு சென்றுள்ள அமெரிக்க துருப்புக்களுக்காண பெட்ரோல் சப்ளைக்காக எனது அலுவலகத்துக்கு அருகில் ஒரு சிறிய முகாம் போன்ற அமைப்பு உண்டாக்கப்பட்டு அதில் இருந்து லாரி லாரியாக எண்ணை போய்க்கொண்டிருக்கும்,

அந்த பகுதியக் கடக்கும்போது அமெரிக்க ராணுவத்தினர் அங்கு மணல் மூட்டைகளின் மீது துப்பாக்கியோடு மிக அக்கறையாக காவல் காத்துக்கொண்டிருப்பார்கள், ஆரம்பத்தில் அவர்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும் எப்படி இவ்வளவு நேரம் ஒரே நிலையில் தொடர்ந்து இவர்களால் நிற்கவோ அல்லது படுத்த நிலையிலோ இருக்க முடிகிறது இந்த கடும் வெயிலில் என்று.

போருக்கான முஸ்தீபுகள் தொடங்கி இருந்த நிலையில் தினமும் மாலையில், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், குவைத் சிவில் அதிகாரிகள் சிறப்பு பயிற்சி கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள், குவைத்தில் பல தேசத்து மக்கள் பணிபுரிந்தாலும் அதிகம் இந்தியர்களும் பங்களாதேஷ் மக்களும்தான், அவரவர் நாட்டு தூதரகங்கள் அந்த அந்த பள்ளிகளில் இப்படி மாலை நேரக்கூட்டங்களை ஏற்பாடு செய்து இருந்தார், அதில் பலர் நம்பிக்கைதரும்படி பேசினார்கள், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் விஷவாயு குண்டுகளை வெடித்தால் என்ன செய்ய வேண்டும் போன்ற பாதுகாப்பு சமாச்சாரங்களுக்கு இடையில், அந்த குண்டுகளால் என்ன பாதிப்புகள் வரும் என்று சொல்லி மேலும் பயத்தை கிளப்பிக்கொண்டிருந்தார்கள், அந்த கூட்டத்திற்கு வரும் அனைவரின் முகத்திலும் ஒரு பயம் அல்லது ஏதோ ஒரு கேள்விக்குறி இருக்கத்தான் செய்தது,

பால்,மின் உற்பத்தி,மருத்துவ மனைகள், தண்ணீர் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான பணிகளில் உள்ளவர்கள் விடுமுறை எடுக்க முடியாது என்றிருந்ததால், என்னைப்போன்றவர்களின் நிலைமை சற்று சங்கடம்தான், நான் பணிபுரிந்த மின் நிலையம் சுமார் 2400MW மின் உற்பத்தியும், 16 கடல் நீரில் இருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் ஆலைகளைக்கொண்டது, என்பதால் விடுமுறை என்பது வாய்ப்பில்லாமல் போய்விட்டது,

தினமும் தொலைக்காட்சிகளில் போர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பல செய்திகள் வந்தது கொண்டே இருக்கும், நாங்களும் அவைகளை செயலாக்கி கொண்டிருந்தோம், எல்லோரும் பயந்தது விஷவாயு ஆயுதங்களுக்கு என்பதால் அதற்கான பாதுகாப்பு முயற்சிகள்தான் செய்யப்பட்டன, வீட்டில் ஒரு அறையை தேர்வு செய்து அதன் ஜன்னல்கள் மற்றும் கதவு, குளிர் சாதன பகுதிகள் எல்லாம் முழுக்க வெளிக்காற்று வராத வண்ணம் சீல் வைக்க வேண்டும், பின்னர் மரக்கறித்துண்டுகளை வாங்கி வந்து தண்ணீர் தெளித்து ஒரு மூலையில் பரப்பி வைக்கவேண்டும் காரணம் காற்றில் உள்ள விஷத்தை இந்த கறித்துண்டுகள் இழுத்துக்கொள்ளும் என்று சொன்னார்கள், பின்னர் தேவையான உணவு மற்றும் தண்ணீர், பாட்டரி லைட், தொலைக்காட்சி இல்லை ஒரு ரேடியோ, போன்ற செய்திதரும் விஷயங்கள் உள்ளே வைத்திருக்க வேண்டும்,

இப்படி ஒரு அறையை நாங்களும் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம், பெரும்பாலனவர்கள் அதற்காக மிகவும் முயன்று செய்திருந்ததையும் காணமுடிந்தது, காரணம் அவர்கள் மனைவி குழைந்தைகளோடு இருந்தார்கள், அதற்கான சாதனங்களில் வியாபாரம் சக்கை போடு போட்டது, அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் பலதயாரிப்புகள் ஜெகஜோதியாய் காசுகளை குவித்துக்கொண்டிருந்தன, இதில் முக்கியமான விற்பனை விஷவாயு முகமூடிகள்தான், அவைகளின் விலையோ இந்தியர்களுக்கு வாங்க முடியாத உயரத்தில் இருந்தது, அதிலும் பல நிறுவனங்கள் வாயுக்களின் கெடுதல்களைச்சொல்லி தனது கவசங்களின் முக்கியத்துவத்தை அங்கங்கே விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள், சில உள்ளூர் குவைத்திகள் சிறிய ஜெனரேட்டர்களையெல்லாம் வாங்கி கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களுக்குதானே தெரியும் ஈராக் ஆக்ரமிப்பின்போது பட்ட அவஸ்த்தை.

உண்மையில் குவைத்தியர்களுக்குதான் எங்களை விட அதிகம் பயம் இருந்தது, ஈராக் குவைத்தை ஆக்ரமித்த யுத்த நடவடிக்கைகளில் தத்தம் பெண்களையும், உடைமைகளையும் ஈராக் ராணுவத்திடம் இருந்து காப்பாற்ற அவர்கள் பட்ட பாடு அத்தனை சோகம் நிறைந்தது. ஆகையால் அவர்களிடம் ஒரு கற்பனைகெட்டாத பயம் இருந்தது, உண்மையில் அவர்கள் இந்த போரை விரும்பவில்லை, காரணம் ஒருவேளை ஈராக் ஜெயித்துவிட்டால்? என்ற பயம் இருந்தது, காரணம் சதாம் பற்றி அப்படி ஒரு பிம்பம் எல்லோருக்கும் இருந்தது உண்மை.
எனது மின் நிலையத்திலும் வாராவாரம் போர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பயிற்சிதரப்பட்டன, எந்த தாக்குதல் நடந்தால் எங்கே சென்று தங்கவேண்டும், கர்சீஃப் போன்ற துணியை தண்ணீரில் நனைத்து மூக்கில் கட்டிக்கொண்டால் விஷவாயுவில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம் என்பதுபோன்ற பயிற்சிகள் தரப்பட்டன,

காற்றின் சுத்தத்தை கண்காணிக்கும் நிறுவனங்கள் நிறைய அதற்கான ஊர்திகளை பல இடங்களில் நிறுவி இருப்பதாக பேசிக்கொண்டார்கள், உண்மையில் எல்லோரும் பயந்தது விஷவாயு ஆயுதங்களை சுமந்த ஸ்கட் ஏவுகணைகளுக்குதான், ஸ்கட் பற்றிய வதந்திகள் நிறைய பரவி இருந்தன, ஏராளமான ஸ்கட் ஏவுகனைகளை சதாம் இன்னும் உயர் தொழிற்நுட்பத்தில் தயாரித்து வைத்துள்ளதாக பேசிக்கொண்டார்கள், முந்தய யுத்தத்தில் இந்த ஸ்கட் அமெரிக்க ராணுவத்தை பலமாக பாதித்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்,கெமிக்கல் அலி என்று அழைக்கப்பட்ட சதாமின் மிக நெருக்கமான தளபதிதான் ஈராகின் தென்பிராந்திய கமாண்டாரக் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன,அவர் பிரத்யோகமாக இந்த விஷ வாயு தாக்குதலில் நிபுனர் என்பதால் கெமிக்கல் அலி என்ற பெயர், போர் என்றாலே வதந்திகளுக்கு கொண்டாட்டம் அல்லவா? அது அற்புதமாக தன் கடமையைச்செய்தது. தென்பிராந்தியத்தில்தான் குவைத்தும் அமெரிக்க ராணுவமும் நிலைகொண்டிருந்தன,

எனது நண்பர்கள் தினமும் தத்தமது கார்களில் பெட்ரோலை முழுதும் நிரப்பியே வைத்திருப்பார்கள், கூடுதலாகவும் கேன்களில் வாங்கியும் வைத்திருந்தோம் ஒரு வேளை போர் தொடங்கி விட்டால் காரிலேயே வெகுதூரம் பயணிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது சவுதிக்கோ அல்லது ஜோர்டானுக்கோ போய் இந்தியா போக வேண்டிவரலாம் என்று சொல்லப்பட்டது. நண்பர்கள் பலரும் தினமும் கூடி நிலவரம் பற்றியும் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றியும் விவாதிப்பது வழக்கம் அதில் பலவாறான புதிய ஊகங்களும் யுத்திகளும் பற்றி பேசிக்கொள்வோம், அமெரிக்க ராணுவத்தின் பலம், ஸ்கட் எதிர்ப்பு ஏவுகனையான பேட்ரியாட் ஏவுகனைத் தளங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றியும் ஆகையால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு போன்ற விஷயங்களைப்பற்றியும் நிறைய உரையாடல்கள் இருக்கும் சில புதிய ஆலோசனைகள் இப்படி பல திசைகளில் விவாதங்கள் சந்திப்புகள் இருக்கும்,

ஈராக்கின் தாக்குதல் தொடங்கினால் உடனடியாக அரசு அபாய எச்சரிக்கை சைரன்களை அலறவிடும், உடனே அவரவர் தத்தமது வெளிக்காற்று வராமல் சீல் செய்யப்பட்ட அறைகளில் சென்று இருக்க வேண்டும், அந்த சைரன் ஒலி மாறி வேறு ஆபத்தில்லை என்பதற்காண சைரன் ஒலி வரும் போது எல்லோரும் சாதாரண நிலைக்கு வரலாம் என்பது எல்லோருக்கும் கூறப்பட்டது, சைரன் ஒலி வந்ததும் விஷவாயு தன்மையை ஆராய்ந்து ஆபத்தில்லை என்று தெரிந்ததும் பாதுபாப்பு சைரன் ஒலிக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே ராஜதந்திர நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன, ஐநாவின் தூதுவர்கள் சதாமை சந்தித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்தார்கள், பிரான்ஸ் ஜெர்மன் அதிபர்கள் மற்றும் சிரியா போன்ற ஈராக அதரவு தேசங்கள் அமெரிக்க எதிர் நிலைகளை எடுத்து அதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்ஸ்லில் விவாதங்கள் நடத்தப்பட்டன, போர் தொடங்குவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா எப்போது தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது, பிரான்ஸ் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதை தோற்கடிக்ககூடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது எங்களுக்கு, அதற்கு நாங்கள் நினைத்த காரணம் பிரான்ஸூக்கு ஈராக்கில் நிறைய கட்டுமானப்பணிகள் இருந்ததாக கருதினோம்,

அமெரிக்காவுக்கும் மசோதா தோற்கும் என்ற எண்ணம் வலுத்திருக்குமோ என்னவோ தெரியவில்லை அவர்கள் போர் தொடங்க வேண்டிய இரண்டாவது தீர்மானம் தேவை இல்லை, முந்தய கெடு விதித்த தீர்மானத்தின் அடிப்படையில் போரைத்தொடங்கலாம் என்று அறிவித்து, அதற்கு சாதகமான பிரிட்டன் உள்ளிட்ட அணிகளை சேர்க்க தொடங்கி இருந்தனர், அமெரிக்க வெளியுறவுச்செயலாலர் காலின் பவல் மற்றும் ராணுவச்செயலாலர் ராம்ஸ்பீல்ட், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் போன்றவர்கள் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பிடித்திருந்தனர், டோனி பிளேர் கிட்டதட்ட அமெரிக்க அதிபர் புஷ்ஷின் கொள்கைப்பரப்பு செயளாலர் போல செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அரபிக்கடலின் ஈராக் துறைமுகப்பகுதியான பாஸ்ராவின் வழி உள்ளே நுழைய பிரிட்டனின் வான் படைகளும், விமானந்தாங்கி கப்பல்களும் குவைத் மற்றும் கத்தார் கடல் பகுதிகளில் முகாமிட்டிருந்தன, அமரிக்காவின் ராணுவத்தளம் குவைத் ஈராக் எல்லையோரத்திலும் கத்தாரிலும் அமைக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

போரின் முஸ்தீபுகள் கடுமையாகத்தொடங்கியதில் இருந்து பல பாதுகாப்பு சோதனைகளும் கெடுபிடிகளும் எல்லா மட்டத்திலும் அதிகமானது, எங்களது மின் நிலையத்தின் வாசலில் புதிய கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டன, எல்லா பொருளாதார கேந்திரங்களும் இப்படி கூடுதல் பாதுகாப்போடு கண்காணிக்கப்பட்டது.

எங்களது வேன் எனது மின் நிலையத்தின் முதல் பாதுகாப்பு சோதனை நிலயத்தை அடைந்தது, நாங்கள் எல்லோரும் இறக்கிவிடப்பட்டோம், ஒவ்வொருவரின் சாப்பாட்டு பாத்திரம் தொடங்கி முழு உடலின் பாதுகாப்பு பரிசோதனைகள் நடந்தன அதன்பின் மெல்ல பயணித்து அவரவர் அலுவலகங்களுக்கு சென்றோம், யாருக்கும் வேலை செய்யும் மனநிலை இல்லை கூடி கூடி பேசினோம், வியாழக்கிழமை என்பதால் 12 மணிக்கெல்லாம் பணி முடியும் என்பதால் அதிகம் பேச்சிலும் பயத்திலும் கழிந்தது, தொலைபேசி மூலம் நண்பர்களை அழைத்து ஏதாவது செய்திகள் உண்டா என்று கேட்டுக்கொண்டிருந்தோம்,

அங்கே பணிபுரியும் குவைத்திகளுக்கு மட்டும் மின் நிலைய நிர்வாகம் விஷவாயு முகமூடிகளை கொடுத்திருந்தார்கள், அவைகளை இதுவரை பெறாத குவைத்திகள் சிலர் அதனைத்தேடி அலைந்து கொண்டிருந்தார்கள், அவர்களின் முகம் மிகவும்வெளிறிப்போய் இருந்தது, நான் என்னைப்போல் இருந்த பலரை நினைத்து மனதை தேற்றிக்கொண்டிருந்தேன்,

மதியம் 12 மணிக்கு நாங்கள் மின் நிலையத்தை விட்டு புறப்பட்டோம், எங்கள் மின்நிலயம் இருப்பது குவைத்தின் தென் கடைசியில் என்பதால் ஈராக் எல்லையைவிட்டு வெகுதொலைவு, ஆனால் எங்கள் குடியிருப்புகள் இருந்த பகுதி குவைத்தின் மையப்பகுதிக்கு சற்று அருகில், கிட்டதட்ட ஒரு மணிநேரப்பயணம், மணிக்கு 120 கிமீ வேகத்தில் தினசரி பயணம், பாதி தூரம் பயணித்திருப்போம் அப்போது மணி மதியம் 12:45 எங்கள் வேனில் இருந்த FM ரேடியோவில் முதல் சைரன் ஓலி கேட்கத்தொடங்கியது,

அவ்வளவுதான் வேனில் இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே பதற்றம், நடு பாலைவனத்தில் பிரயாணம், ஓதுங்ககூட இடம் கிடையாது சைரன் வருகிறதென்றால் ஸ்கட் வருகிறது என்று பொருள் ஸ்கட் ஏவுகனையின் தாக்குதல் தூரத்தில்தான் குவைத் முழுதேசமும் இருந்ததால், எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்று எல்லோருக்கும் தெரியும், உடனடியாக வேனின் கண்ணாடிகள் நல்லவண்ணம் மூடி இருக்கிறதா என்று சோதித்தோம், வேனின் குளிர்சாதனம் நிறுத்தப்பட்டது நிதானமான வேகத்தில் செல்லுமாறு எகிஃதிய ஓட்டுனருக்கு கூறினோம், இதற்கிடையே அவரவர் கைத்தொலைபேசியில் நண்பர்களை அழைத்து என்ன நடந்தது என்று கேட்க முயன்றார்கள் ஒரு போனும் வேலை செய்யவில்லை,

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழக தென்மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு நண்பருக்கு கையெல்லாம் நடுங்க தொடங்கி யிருந்தது, (அவர் அன்று இரவே கடைசி விமானம் பிடித்து இந்தியாவுக்கு சென்றுவிட்டர் என்று பின்னர் தெரிந்தது) சைரன் ஒலி தொடர்ந்து கொண்டிருந்தது, ஒரு செல்போனும் தொடர்பு கொள்ளமுடியாமல் இருந்தது, மெல்ல அடுத்த 15 நிமிட பயணத்தில் எங்கள் தலைமை அலுவலகம் உள்ள இடத்தை அடைந்தோம், அங்கே அலுவலக வாயிலில் எல்லோரும் கூடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள், நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டு இங்கு ஏதாவது சத்தம் கேட்டதா என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்துகொண்டிருந்தோம், எல்லோருக்குள்ளும் ஒரு பீதி, சில நிமிடங்களில் சைரன் ஒலி மாறி நிலைமை சீரடைந்ததை அறிவித்தது,

அப்போதுதான் எங்களுக்கு கொஞ்சம் உயிர் வந்தது, ஆனாலும் சைரன் வந்ததற்கான காரணம் மறுநாள்தான் தெரிந்தது ஒரு ஸ்கட் தூரத்தில் பாலைவனத்தில் விழுந்து வெடித்த விஷயம், நாங்கள் அதன்பின் மெல்ல வீடு வந்து சேர்ந்தோம், அதற்குள் பல தொழிற்பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இடையே பயம் அதிகமாகி எல்லோரும் எங்கள் தொழிலாளர்களின் Desert camp என்று அழைக்கப்படுகிற பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தொழிலாளர்கள் தங்குமிடத்திற்கு வரத்தொடங்கி இருந்தார்கள்,

நாங்கள் குடியிருப்பு பகுதிகளில் தங்கியதால், மாலை எங்களையும் அங்கு வரச்சொல்லி இருந்தார்கள், இதற்கிடையே சைரன்கள் வருவதும் மீண்டும் ஒருமுறை நடந்தது, நல்லவேளையாக வீட்டில் இருந்ததால் சீல் செய்யப்பட்ட ரூமில் இருக்க முடிந்தது, தொலைக்காட்சிகளின் பரந்த முயற்சியால் போரின் குண்டு வீசும் காட்சிகள் அப்பப்போது காண்பிக்கப்பட்டன, இரவில்தான் அதிக தாக்குதல்கள் நடந்தன ஆகையால் பாக்தாத் உள்ளிட்ட நகரங்களின் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருளில் இருந்தது தெரிந்தது, அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து போர் விமானங்கள் சீறிப்பாய்வதை காட்டிக்கொண்டிருந்தார்கள்,

பிரிட்டன் பாஸ்ரா வழியாக ஈராக்கின் தென்புறத்தையும், அமெரிக்க அணிகள் பாக்தாத் உள்ளிட்ட மையப்பகுதியை நோக்கி குவைதில் இருந்து முன்னேறுவது என்று திட்டம் போல், ஆனால் ஆரம்பதில் வெறும் விமான தாக்குதல் மூலம் ஈராக்கின் பலத்தை குறைத்து விட்டு பின்னர் தரைப்படைகளை உள் அனுப்புவது என்று தீர்மானித்திருந்தார்கள், நாங்களும் மற்ற எல்லோரும் நினைத்தது, ஈராக்கின் தரைப்படைகளை எதிர்ப்பது அவ்வளவு எளிதில்லை என்றுதான்,

மெல்ல அன்று மாலை கிட்டதட்ட மூவாயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் எங்கள் நிர்வாகத்தின் Desert campல் கூடினோம், எல்லோர் கையிலும் சிறிய பெட்டிகள் அல்லது பைகளில் சான்றிதழ்கள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வைத்துக்கொண்டு தப்பித்து போகும் மனநிலையில் இருந்தார்கள், எங்களது தலைமை நிர்வாக இயக்குனருக்காக காத்திருந்தோம்,

அவர் ஒரு குவைத் பிரஜை, அவர் வந்து சேர்ததும் தொழிலாளர்களின் கூச்சல் குழப்பம் அதிகமாகியது, உண்மையில் எங்கள் தலைமை நிர்வாக இயக்குனர் நல்ல மனிதர்தான், ஓரே நேரத்தில் எல்லோரும் தத்தமது நாட்டுக்கு செல்லவேண்டும் என்றால் என்ன செய்வார், அதுவும் அன்று வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமை, இரண்டுநாளும் விடுமுறை நாட்கள் வேறு, அவர் இரண்டு நாட்கள் பொருத்திருங்கள் பின்னர் பார்க்கலாம், என்று சொன்னார், ஆனால் தொழிலாளர்களின் மனநிலைமை, இரண்டு நாளில் விமானங்கள் நிறுத்தப்பட்டல் என்ன செய்வது என்கிற பயம் இருந்தது, அதற்குள்ளாகவே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட செய்திகள் எங்களை எட்டி இருந்தது அதனால் அந்த பயம் அதிகமாகிக்கொண்டிருந்தது, மேலும் பலருக்கு மாதக்கடைசி என்பதால் சம்பளம் விமான பயணச்சீட்டு போன்ற பிரச்சினைகளை கூறி சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்,

எங்கு பார்த்தாலும் ஒரே பதற்றம் எங்களது கேம்ப் அடுத்து பல கம்பெனிகளின் தங்குமிடங்களும் இருந்தன அவற்றிலும் இதே நிலைதான், போலிஸ் வேறு வந்து குவிக்கப்பட்டிருந்தது, ஒரு வழியாக பல மிரட்டல், சமாதானம் போன்ற காட்சிகள் முடிந்து கடைசியாக அனைவரும் பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளுங்கள், இரண்டு நாள் கழித்து தேவைப்படுவோர்க்கு டிக்கட் கொடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது, உடனடியாக பாஸ்போர்ட் கொடுக்கும் வேலைகள் தொடங்கின, என்றாலும் எல்லோருக்குள்ளும் அந்த பதற்றம் இருந்து கொண்டே இருந்தது,

நாங்கள் எங்களது பாஸ்போர்ட்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு வரும்போது மணி கிட்டதட்ட இரவு 10 மணியாகி இருந்தது, பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி இருந்தது, காலையில் இருந்து சரியாக சாப்பிடாதது வேறு, நேரே கேம்ப் கேண்டினில் சென்று சாப்பிட அமர்ந்தோம், சாம்பாரும் சாதமும் இருந்தது, அதன் பின் வெளியே வந்து கைகழுவிக்கொண்டிருந்தபோது

ஒரு பயங்கரவெடிச்சத்தம் கேட்டது, சிறிய பூமி அதிர்வும் கூடவே உணரப்பட்டதாக நினைக்கிறேன், அந்த நிமிடம் அது வந்த திசை எங்கிருந்து என்றெல்லாம் ஒன்றும் புரியவில்லை கைகழுவிய வேகத்தோடு பலர் ஓடத்தொடங்கினார்கள், எங்கு ஓடுவது என்று யாருக்கும் தெரியவில்லை, எங்கள் கேம்ப் அருகில் ஒரு மிகப்பெரிய ரசாயன ஆலை இருந்தது, அதன் மீது குண்டு விழுந்தால் அதில் இருந்து வரும் விஷவாயு மிக மோசமான விளைவுகளைக்கொடுக்கும் என்பது தெரிந்தால் அந்த ஆலைத்தாக்கப்பட்டதா என அறியவும் பக்கத்தில் சத்தம் கேட்டதால் சற்று தூரம் போனால் தப்பிக்கலாம் என்ற மன நிலையில் ஓடிக்கொண்டிருந்தோம்,முகத்தில் தண்ணீரில் நனைக்கப்பட்ட கர்சீஃப் மட்டும் வைத்துக்கொண்டு,

கேம்ப் கட்டடங்களின் வழியே தட்டு தடுமாறி ஓடி அதன் வாசலுக்கு வந்த போது மொத்த தொழிலாளர்களும் பெரும் பதற்றத்தோடு எங்கு போவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் எல்லாதிசையிலும் ஒரே அமைதியும் பயமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த குண்டு விழுந்த அடையாளமும் தெரியவில்லை, ஆனால் போலிஸ் வாகனங்கள் கடல் புறத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தன,

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று தோன்றவே கிளம்பினோம், வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் என்று தோன்றியதால், மறுநாள்தான் தெரிந்தது, முதல்நாள் இரவு அந்த ரசாயன ஆலையை தாக்கவந்ததும் அமெரிக்க தொழில்நுட்பத்தால் திசை திருப்பி கடலில் விடப்பட்டதும், அது விழுந்த சப்தம்தான் இப்படிகேட்டதும் என்று விளக்கினார்கள், அதன்பிறகு கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்ட ஸ்கட் ஏவுகனைகள் வந்தன, பல தடுத்து அடிக்கப்பட்டன வானத்திலேயே, சில திசைதிருப்பி கடலில் விடப்பட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகள் வெற்றிகளை குவிக்கத்தொடங்கி கொண்டிருந்தது, சாரி சாரியாக ஈராக்கிய படைவீரர்கள் சரண் அடைந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது, போரின் பெரிய பாதிப்புகள் இல்லாது குவைத் காப்பாற்றப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு சாதாரண சம்பவத்துக்கே, இப்படி பாதிக்கப்பட்டோம் நாங்கள், வருடக்கணக்கில் போரில் வாழும் ஈழ மற்றும் ஈராக் மக்களின் சோகம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போது நினைத்தால் உடல் பதறுகிறது.

தவநெறிச்செல்வன்

4 comments:

  1. மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

    நன்றி
    ஈழவன்

    ReplyDelete
  2. தவநெறி செல்வன் அண்ணா, எப்படி இருக்கின்றிங்க...ரொம்ப நாளா உங்க பதிவினை காணவில்லையே...

    விடுமுறையில் ஊருக்கு போய் இருக்கின்றிங்களா...

    ReplyDelete
  3. மதி - இண்டியாSeptember 11, 2009 at 10:34 PM

    தமிழில் இது போன்ற விசயங்களை தெரிந்து கொள்ள பிளாக்கை விட்டால் வேறூ வழி இல்லை , ஆனால் இது போன்ற பதிவுகளுக்கு ஆதரவும் அதிகம் இருப்பதில்லை ,

    ஆனால் நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டாம்

    ReplyDelete
  4. கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

    மதி இண்டியா: தங்களின் கூற்று உண்மைதான் என்றாலும் தங்களைப்போன்றவர்களின் ஆதரவு மேலும் எழுததூண்டுகிறது

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்