Jul 26, 2009

கேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.

அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட காரில் ஏறினேன் என்னோடு எனது மேளாலரும் மற்றுமொரு பொறியாளரும் மூன்று பேருமான பயணம், காலையில் தினசரியில் அச்சுதானந்தன் அவர்கள் கம்னியூஸ்ட் கட்சியின் போலிட்பீரோவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி இருந்தார்கள், என்னுடைய கார் ஓட்டுனர் ஒரு தீவிர கம்னீயூஸ்ட் என்பதால் அவரிடம் இது விவாதிக்ககூடிய விஷயமாக இருந்தது, கூடவே அவர் கேரளத்தை சேர்ந்தவர், எனக்கு கேரளத்தை சேர்ந்த பலரின் நட்பு உண்டு, அதனால் மலையாள மொழி கொஞ்சம் தெரியும் அதனால் அதிகம் அவர்களோடு உரையாடுவதால் அந்த மொழி அறிவு மேம்படும் என்பதால் நான் அதிகம் இது போன்ற விவாதங்களை துவக்குவது பழக்கம்,

எனது அந்த நண்பர் கண்ணூர் சொந்த ஊராக கொண்டவர்,பெயர் பிரதீபன், இதில் கண்ணூர் என்றதும் அது செங்கொடியின் சொந்த ஊர் போன்ற ஒரு அமைப்பைக்கொண்டது. ஆனால் அதில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் UDF பலமுறை வென்றிருக்கிறது என்பது வேறு விஷயம், இதில் அச்சுதானந்தன் அவர்களின் வெளியேற்றம் ஒரு விதமான பதற்றத்தை எல்லா மீடியாக்களிலும் உண்டாக்கி இருந்தது, காரணம் கேரளத்தில் அச்சுதானந்தனுக்கு என்று ஒரு தனி மக்கள் செல்வாக்கு உண்டு காரணம் அவரின் எளிமை நேர்மை, ஆனால் பழய கேரள சி.பி.எம் மின் எல்லா முதல்வர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போதைய நடைமுறையில் கேரள மாநில கட்சியின் தலைவராக இருக்கும் திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. அச்சுதானந்தன் இடையே இருந்த ஒரு கோஷ்டி சண்டைதான் இந்த தேர்தல் கட்சிக்கு பெரும் தோல்வியைக்கொடுத்ததாக ஒரு மனநிலை உருவானதால் அதன் பாதிப்பு இப்படி ஒரு நடவடிக்கையாக அமைந்து விட்டது.

கண்ணூரில் கம்னியூஸம் என்பது ஒரு மதம் மாதிரியான விஷயம் அங்கே உள்ள செங்கொடி தொண்டர்கள் அதை அப்படித்தான் ஒரு ஆழ்ந்த பற்றோடு பின்பற்றுகிறார்கள், கண்ணூரைச்சேர்ந்த தலைவர்கள்தான் அந்த கட்சியில் அதிகம் ,தற்போதைய தலைவர் பிணராயி விஜயன், ஈ.கே நாயனார் போன்றவர்கள் கண்ணூரைச்சேர்ந்தவர்கள்தான்.மேலும் கண்ணூரில் அடிக்கடி நடைபெறும் அரசியல் கொலைகள் பத்திரிக்கை செய்திகளாக தமிழர்கள் படித்திருக்ககூடும், அதெல்லாம் இந்த கட்சியின் மீதான ஆழமான பிடிப்பின் வலுவான காரணங்கள்.

ஆனால் அச்சுதானந்தன் கண்ணூரை செர்ந்தவரில்லை என்பது ஒரு விஷயம், ஆனால் கட்சியில் தனித்தலைவர்களை தவிர கட்சியே முதன்மையானது என்கிற கொள்கை மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதால் இதில் எந்த தனிப்பட்ட தலைவருக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாததால் கட்சியைவிட்டு வெளியே போனால் அவர்களின் மதிப்பி செல்லாகாசாகிவிடும்.

இந்த பின்புலத்தில்தான் நான் கட்சியின் இந்த நடவடிக்கை பற்றிய விவாதத்தில் இறங்கினேன், அச்சுதானந்தன் மீது எல்லோருக்கும் ஒரு பரிவு உண்டு, பினராயின் ஆதரவாளர்கள் தவிர, காரணம் அவரின் எளிமையும் மிக நீண்டகாலம் கட்சியில் இருந்தும் முதல்வராக முடியாமல் இப்போதுதான் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்பதும் காரணம்,
நம் தமிழகத்தில் கம்னியூஸ்ட் கட்சியின் தீவிர செயல்பாடுகள் 80 களிலேயே குறைந்து விட்டதால் அதன் ஆழமான கொள்கைகளும் எளிமையும் நம் தமிழகமக்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, அதனால் நம் மக்களுக்கு திமுக அதிமுகவின் ஆடம்பர தனிநபர் துதி அரசியல்தான் பழக்கம், அதனால் தலைவரைவிட கட்சியே முதன்மையானது என்கிற ஒரு சொல் அமைப்பே அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்,

கேரளத்தின் எல்லா நிலையிலும் அரசியல் மிகவும் ஊடுருவிய ஒரு விஷயம், பல பிரச்சினைகள் அரசியல் பிரமுகர் கொண்டே தீர்க்கப்படுகின்றன அதுவும் கண்ணூர் போன்ற இடங்களில் ஒரு பிள்ளைக்கு பெண்பார்த்து முடிவெடுக்கு முன் அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க வேண்டுமானால் அந்த பகுதியில் உள்ள கிளை கமிட்டி ஆட்களிடம் தொடர்பு கொண்டு இதுபோல் ஒரு வரன் வந்துள்ளது அவர்களை பற்றிய குடும்ப நிலவரம் வேண்டும் சகாவே என்று சொன்னால் போதும் முழு உண்மையான விவரத்துடன் செய்யலாம் செய்ய வேண்டாம் என்கிற வரையிலான ஒரு உத்திரவாதம் வரை தீர்க்கமாக வரும், அது 100 சதம் உண்மையாகவும் இருக்கும், அதோடு எல்லா குடும்ப உறுப்பினர்களின் நல்ல பெயரையும் கம்னியூஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பெற்றிருப்பார்.அவரின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இருக்கும்.

இந்த அரசியல் அமைப்பு எல்லா குடும்பத்திலும் ஒரு சாதாரண விஷயமாக இணைக்கப்பட்டிருக்கும், அது ஒரு கிராம பஞ்சாயத்து அமைப்பைபோல. ஆகையால் இந்த மாற்றங்கள் கேரளத்தில் எல்லோரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் முதல்வர் அச்சுதானந்தன் தனது செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சொல்லிவிட்டு அதை மேற்கொண்டு விவாதிக்க அவர் விரும்பவில்லை, அதுதான் கம்னியூஸ்ட், அதன் கட்டளைகளுக்கு மறுப்பேச்சில்லை,

மாநிலச்செயலாளர் பினராயி விஜயன் முன்னாள் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது மின் துறை மந்திரியாக இருந்த காலத்தில் பல மின் திட்டங்களின் புதிய ஓப்பந்தம் காரணமாக மிகவும் பெரிய சர்ச்சைகள் உண்டாகின அதில் “SNC லாவலின் “ என்கிற ஒரு கேஸ் மிகவும் சிக்கலாகி அதில் ஊழல் புரிந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக கேரள கவர்னர் அந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி விசாரிக்க உத்திரவு இட்ட பின்பு இந்த அரசியல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யத்தை எட்டி பிடித்துள்ளது.

இதில் இரண்டு விதமான அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன, அதில் கம்னியூஸ்ட் கட்சியின் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் வேறு வேறு திசையில் இருக்கும், ஆனால் இந்த போலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டது, இந்த வழக்கில் கவர்னர் தலையிட்டதற்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தோற்றம் வழக்கம்போல தவறாகவோ அல்லது சரியாகவோ மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்