Sep 13, 2009

பயணம்:

நமது வாழ்நாள் முழுக்க நம்மோடு இருக்கப்போவது பயணம்தான், கால்களோடு மட்டும் சம்பந்தபடாமல் அது மனதோடும் சம்பந்தப்பட்டதால் நடக்கமுடியாதவர்கள் கூட தினமும் வெகுதூரம் எண்ணங்களால் பயணிக்கத்தான் செய்கிறார்கள், எண்ணங்களை சுமந்து கொண்டு சேர்க்கும் பல வாகனங்களாகவும் பயணம் இருந்திருக்கிறது, எழுத்துக்களை சுமந்து செல்லும் தபால்காரர்கள், அன்று மன்னர்களுக்காக ஓலைகளை சுமந்து சென்ற தூதுவர்கள் இப்படி பயணம் பல நிலைகளை கடந்து சென்று கொண்டே இருக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்க்கை வெறும் பயணமாக மட்டுமே இருந்திருக்கிறது, எங்கே வாழ்வது என்று தெரியாமல் மனிதன் தனது உடைமைகளை சுமந்து கொண்டு தனது குடும்பம் என்று ஒரு அருதியிடாத அமைப்புடன் பயணித்து பல இடங்களை அடைந்திருக்கிறான், இன்று நமது நாகரீகமாக உள்ள ஆரிய திராவிட நாகரீகங்களும் பல தூரங்களை பயணமாக கடந்தே இன்று நிலைக்கொண்டிருக்கின்றன,
இதுபோக பல சமாதனப்பயணிகள், படிப்பிற்கான பயணிகள், உழைப்புக்காக பயணிகள், உணவுக்குகாக பயணிகள், காலத்திற்காக பயணிகள் என்று பயணங்கள் பல

வகைப்படுகின்றன, எல்லா செயல்களின் இறுதியிலும் ஒரு பயணம் ஒளிந்திருக்கிறது, அதை முடிக்க ஒரு பயணம் தேவைப்படும் என்பதுபோல. இன்றைய உலகின் அறிவியல் கண்டுபிடிப்பான போன்கள் வந்த பிறகு பயணங்களின் தேவை குறைந்தது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் பயணங்கள் குறைந்ததாக தெரியவில்லை, பேருந்துகளும்,
புகைவண்டிகளும், விமானங்களும், இன்னும் எத்தனையோ வாகனங்களின் எண்ணிக்கை தினமும் ஒரு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

பயணம் உயிர்களின் ஆரம்பகாலத்திலேயே தனது உணர்வில் தொடங்கிவிட்டதால் அது ஒவ்வொரு விலங்கிலும் பயணத்தின் எழுத்துக்கள் எழுதப்பட்டுவிட்டன, அவைகளை சுமந்த ஜீன்கள் பயணத்தை மீண்டும் மீண்டும் அவர்களுக்குள்ளே துரிதப்படுத்திக்கொண்டே இருக்கின்றன, ஒரு எந்த பயணமும் இல்லாத வாழ்க்கையை எந்த உயிரியாவது கற்பனை செய்து பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை, அப்படி பயணம் இல்லாமல் போனால் மனிதன் இயங்காதவனாக உலகில் உணரப்படக்கூடும்,

இன்றைய பயணங்கள் மனிதனில் தினசரி தேவைகளை நோக்கி காலையிலேயே தொடங்கி விடுகிறது, அந்த பயணங்கள் தினசரி ஒரே திசையில் இருந்தாலும் பயணம் என்பதில் இருந்து அது மாற்றம் பெறமுடியாது, வாகனங்களின் வசதிகளால் பயண நேரங்கள் குறைவாக தோன்றினாலும் பயணம் என்பது அங்கே நடைபெறத்தான் செய்கிறது.
ஒரு படைப்பாளியின் பயணம் பதிவுகளாகிறது, அல்லது பதிவுகளை உருவாக்க ஒரு படைப்பாளி பயணிக்கிறான், அவனின் பார்வை பயணத்திற்காக பிரத்தியோகமாக தயாராகிறது, உலகின் சராசரி சுற்றுலா தளங்களை நோக்கி மட்டும் அவன் பார்வை செல்லுவதில்லை, உலகின் எல்லா நிலை வாழ்க்கை முறையையும் அது பின் தொடர்கிறது அதற்குள் நிறைந்து கிடக்கு சுகம், அவலம் என்று அதன் உள் அமைப்பு கெடாமல் அதை பதிவு செய்யவேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது,

உலக இலக்கிய அமைப்பில் இந்த பயணக்கட்டுரைகள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன, எந்த பயணக்கட்டுரை குப்பையாக எழுதப்பட்டிருந்தாலும் அது சில வாசகர்களையாவது கட்டாயம் கொண்டிருக்கும், நாவல்களும் சிறுகதைகளும் தராத ஒரு புதிய விஷயத்தை இந்த பயணக்கட்டுரைகள் உடனடியாக கொண்டு வந்து சேர்க்கும் உலகின் மிகப்பழமையான பயணக்கட்டுரைகளே இன்றைக்கு பல பழய நாகரீகங்களைப்பற்றிய தகவல்களை நமக்கு தருகின்றன, யுவான் சுவாங் போன்ற சீனப்பயணிகளின் கட்டுரைகள் நமக்கு நமது நாட்டின் பழய சரித்திரங்களை திரும்ப தந்திருக்கின்றன, இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் பல அரிய பொக்கிஷங்களை இந்த பயணக்கட்டுரைகள் தருகின்றன,

பயணங்களால் உலகின் பல இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டன, வாஸ்கோடகாமா, கொலம்ப்பஸ் போன்றவர்கள் கண்டுபிடித்த இந்தியாவும் அமெரிக்காவும் போன்ற பல கடல் பிரயாணிகள் உலகின் பல நிலபகுதிகளை கண்டுபிடித்தார்கள்,பயணங்கள் நல்லவற்றை மட்டும் விதைக்கவில்லை கூடவே பல அழிவுகளையும் கூட அவைகள் கொடுத்திருக்கின்றன,

அலெக்ஸாண்டர்களும், செங்கிஸ்கான்களும்,போல எத்தனை மன்னர்கள் தனது சுய சந்தோஷங்களுக்காகவும் நாடுபிடிக்கும் கொள்கைகளாலும், உலகின் பலதூரங்களை தனது படைகளோடு கடந்து, வெற்றிகளை குவிப்பதற்காக கொன்று போட்ட உயிர்களையும் கூட இந்த பயணங்களின் கணக்குகள் அப்படியே பாதுகாக்கின்றன.

இந்த பயணங்களின் வழியே மன்னர்களோடு அவர்கள் சார்ந்திருந்த நாகரீகம் பண்பாடு, மதம், கடவுள் என்று எல்லாம் பயணிக்கிறது, இந்தியாவிற்கு வந்த யுவாங் சுவாங் தனது பயணக்கட்டுரையில் அவர் வந்த காலத்தில் இந்தியா ஆப்கான் உள்ளிட்ட ஒரே தேசமாக இருந்து வந்தது அப்போது வேத மற்றும் பவுத்த சமயங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட்டதாக எழுதுகிறார். ஆனால் அவர் இந்தியாவை ஒரே நாடு என்று பார்ப்பது எப்படி என்று புரியவில்லை, பல சிறிய மன்னர்களால் ஆளப்பட்ட தேசம் மதத்தால் மட்டும் ஒன்றாக அவருக்கு தோன்றி இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது,

இன்றைய ஐரோப்பாவைப் பார்த்தால் மதத்தால் அது கிட்டதட்ட ஒரே தேசம்தான் எங்கும் கிருஸ்துவம் காணப்படுவதால், ஆனால் அது குட்டி குட்டி தேசங்களின் கூட்டமைப்பு, அவரவர்களுக்கு தனித்தனி சட்டதிட்டங்கள் தலைவர்கள் உள்ளதுபோல் அப்போது இந்தியாவும் பெரும்பகுதி இந்து மற்றும் பவுத்த மத தேசமாக அந்த சீனப்பிரயாணிக்கு தோன்றி இருக்கலாம்.

அரபு தேசத்தில் இருந்து கி.பி. 711 தொடங்கிய முகமது பின் காசிம் என்கிற மன்னரின் போர் பயணம்தான் இந்திய துணைக்கண்டத்தின் மீது முதல் இஸ்லாமிய மத பரவலுக்கு காரணமான முதல் பயணமாக அமைந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகு முழு இந்திய ஆக்கிரமிப்புகளை இந்த படைகள் தொடங்குமுன் சிந்து மகாணப்பகுதியில் இருந்து இவைகள் அதன் தலைமை பீடத்தால் திரும்ப அழைக்கப்பட்டதால் பெரிய கைப்பற்றுதலை இந்த பயணம் உருவாக்கவில்லை, அப்போதைய அரபு தேசங்களின் தலைநகரமாக பாக்தாத் இருந்திருக்ககூடும்.

அதன் பிறகு கி.பி 1001ல் இருந்து புதிய போர் பயணங்களை முகமது கஜினியும் முகமது கோரியும் தொடங்கினார்கள் அது விட்டு விட்டு கி.பி 1206 பல நிலைகளில் இந்த பயணங்கள் தொடர்ந்தன, அதன் தன்மை போலவே இந்த பயணங்களில் விளைந்தவை வெறும் இரத்த ஆறுகள்தான்,

இதே பயணங்கள்தான் அற்புதமான அமைதியையும் நிலைநிறுத்த உதவின, மகாத்மாவின் நவகாளி யாத்திரை, தொடங்கி அவருடைய எல்லா பயணங்களும் மனித ஜீவிதத்தின் அற்புதமான தருணங்களை இந்த உலகுக்கு எடுத்து காட்டின, வாழ்க்கை முறையில் மிக உன்னதமான எளிமையோடு நடந்த உலகின் அற்புத பயணங்கள் மகாத்மாவுக்கு மட்டும் சொந்தம் என்றால் அது மிகையில்லை, அந்த மனிதன் நடந்த இடங்களில் எல்லாம் அமைதியும் அற்புதங்களும் உருவாகிக்கொண்டே இருந்தன.

பயணம் மனிதனின் விடமுடியாத ஒரு பழக்கமாகிவிட்டது, தனது தேவைகளுக்காக அந்த பயணம் அவசிமானதாக அவனால் நம்பப்படுகிறது, தவிர்க்கிற சில பயணங்களால் பெரிய பல முடிவுகள் இழந்து போவதையும் பார்க்க முடிகிறது, எழுத்துக்கள் எல்லா வற்றிலும் பயணமே பிரதானமாக இருக்கிறதும் காணலாம், உலகின் மிகச்சிறந்த நாவல்கள் பயணத்தோடு பாத்திரங்களை இழுத்துக்கொண்டு பல தளங்களுக்கு மாறி மாறி செல்வதை காணலாம்,
பல உலகின் மிகப்பெரிய பயணக் குறிப்புகள் மிகவும் அற்புதமானவை, ஒரு துப்பறியும் நாவலுக்குண்டான அனைத்து சிறப்புக்களையும் திருப்பங்களையும் கொண்டவை,

பயணம் மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அனுபவம், அதன் வழியே செல்லும்போது கண்களையும் காதுகளையும் நன்கு திறந்தே வையுங்கள், பல அற்புதங்களை அவைகள் கொடுக்கும் நீங்கள் வெறும் பார்வையாளனாக இருக்கும் வரை.

தவநெறிச்செல்வன்

Sep 10, 2009

கைகழுவுதல்:

கை கழுவுதல் நமது கிராமங்களில் மிக முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வந்தது, அதன் காரணம் கடும் உழைப்பை வயல்களில் முடித்துவிட்டு வீடு வந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்ததால் அப்படி ஒரு பழக்கம் வந்திருக்கலாம், கையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியத்தி வலியுறுத்தி இப்படி ஒரு பழககம்.
இதுவே பின்னர் சொல்வழக்காகவும் சிலரை கைகழுவுவது என்று மாறிப்போனது,

நம் வீடுகளில் ஐயர்கள் திவசம் என்று சொல்லப்படும் பிதுர்களுக்கான கடன் ஆற்றும் போது இடை இடையே தண்ணீரை சிறிது விட்டு சும்மா ஒரு சம்பிரதாய கழுவல் செய்வதைப்பார்க்கலாம், ஐயருடைய பஞ்சபாத்திரம் என்கிற பாத்திரத்தில் கொஞ்சம் தர்ப்பை புல்லைப்போட்டு அதனைக்கொண்டு இப்படி செய்வது வழக்கம், மற்றும் கோவில்களில் ஹோமங்கள் சில சடங்குகளிலும் இந்த கைகழுவுவது போன்ற ஒரு பாவனையை காணலாம்,
பிற்பாடு இதே கைகழுவுதல் என்கிற பதம் பல மாற்றங்களை அடைந்துவிட்டது,

முன்பெல்லாம் சாப்பிடும்போது தும்மினால் போய் கையை கழுவி வா என்று சொல்வார்கள், தும்முவதற்கும் கைகழுவுவதற்குமான சம்பந்தம் என்னவாக இருக்கும், தும்மும் போது கையைக்கொண்டு துடைத்துவிட நேரும் என்பதால் இப்படி கூறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயேசு கிருஸ்து சிலுவையை சுமந்து அதில் அறையப்படுவதற்காக கொண்டு செல்லும் போது, அங்கே மேலும் மூன்று திருடர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காக காத்திருக்கிறார்கள், அப்போது பிலாது மன்னன், இந்த நான்கு பேரில் ஒருவரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது, இந்த யாரை விடுதலை செய்யலாம் யேசுவை செய்யலாம் என்பது போல் கூடி இருந்த மக்களிடம் கேட்கிறான், அதற்கு அப்போது மிகுந்த வெறியில் இருந்த மக்கள் கூட்டம், பராபஸ் என்கிற கொடுமையான திருடனை விடுதலை செய்ய சொல்லிவிட்டு யேசுவை சிலுவையில் அறைவதை உறுதி செய்கிறது, அப்போது பிலாது தனது கையை கழுவி இந்த நீதிமானின் ரத்ததில் எனக்கு பங்கில்லை என்று கூறிவிட்டு சென்று விடுகிறான், இங்கேயும் அந்த கைழுவுதல் ஒரு குறீயீடாக வருகிறது.

அதன் பின் பிலாது மன்னன் கைகழுவியது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த பாவத்தில் இருந்து தப்பினானா என்று தெரியவில்லை, ஆனால் கை கழுவுவது என்பது ஒரு மனதிருப்தி சம்பந்தப்பட்ட நிகழ்வாக பல இடங்களில் வருவதைதான் பார்க்க முடிகிறது.
சாப்பாட்டுக்கு முன் கைகழுவுவதில் பல முறை உண்டு வெகு நேரம் தண்ணீர் விட்டு கைகழுவுதல், அல்லது சோப்பு போட்டு கைகழுவுதல், அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளின் உதவியுடம் கைகழுவுதல், சும்மா ஒருகையை தண்ணீர் குழாயில் காட்டி கைகழுவுதல், இரண்டுகைகளையும் தேய்த்து கைகழுவுதல், முழுகையும் நனையாமல் விரலை மட்டும் காட்டி பேருக்கு கழுவுதல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், இந்த எல்லா கழுவுதலின் பின்னால் உள்ளது ஒரு நம்பிக்கை சுத்தமாகிவிட்டது அதனால் சாப்பிடும்போது கெடுதலான விஷயங்கள் எதுவும் வாய்க்குள் செல்லாது.

அதே போல் பாவங்களை கைகழுவும் பாவனையும் கூட அப்படித்தான், பிலாது மன்னன் நம்பியதைப்போல பாபங்கள் தம்மை அடையாது என்று ஒரு நம்பிக்கை, உறவுகளை கைகழுவும் சில சம்பவங்களும் இதில் இருக்கின்றன, எத்தனை உறவுகளை நமது தேவைகள் முடிந்த உடன் கைகழுவும் மனநிலை வருகிறது, எப்படி தாயையோ தங்கையையோ சகோதரனையோ அல்லது ஏதாவது ஒரு உறவையோ தனது தேவைகள் முடிந்த உடன் சுமையாக கருதும் போது கைகழுவ ஒரு முயற்சி செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு நியாயமான காரணம் எல்லாருக்கும் இருக்கும், காரணங்கள் கிடைப்பது மிகவும் எளிது, தேடும் போது உடனே வந்து நிற்பது காரணங்கள்தான். அந்த காரணங்களின் தன்மை பற்றி வேண்டுமானால் மாற்று கருத்து இருக்கலாம், ஆனால் காரணங்கள் எப்போதும் மரிப்பதே இல்லை.

கைகழுவுதல் தனது செயலுக்காக பல காரணங்களையும் அதனில் ஒரு திருப்தியையும் கொண்டு விடுவதால் அந்த சடங்கு எல்லா காலத்தும் அழியாமல் இருக்கின்றன, இன்றைய உணவு பழக்கம் கூட கைகளில் சாப்பிடுவதை விட தேக்கரண்டிகளில் சாப்பிடும் நிலைக்கு மாறிவிட்டாலும் உணவு மேஜைக்கு போகும் முன் கையை அணிச்சை செயலாக கழுவும் பலரைப்பார்திருக்கிறேன்,

எல்லா செயலிலும் கை முதன்மையான ஒரு உறுப்பாக இருப்பதால், அதை சுத்தமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதுதானே, ஆனாலும் இந்த கைசுத்தம் என்கிற பதம் வேறு பொருளை தருவது இன்னும் சுவாரஸ்யமானது. அதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.

தவநெறிச்செல்வன்

Sep 2, 2009

சொக்கனும் சோமேஸ்வரனும்

சொக்கன் வழக்கம் போல காதர்பாயின் டீ கடையில் அமர்ந்திருந்தான், அங்கு வந்த சோமேஸ்வரன் அவனுடைய பால்ய நண்பன், இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடத்தில் உரையாடுவது வழக்கம்.

சொக்கன்: என்னப்பா ரொம்ப நாளா ஆளையே காணும்,

சோமேஸ்வரன்: அதுவா கொஞ்சம் வேலை. கூடவே மனதுக்கும் அத்தனை சுகமில்லை என்ன செய்ய.

சொக்கன்:என்ன அப்படி கவலை?

சோமேஸ்வரன்: என்னமோ இலங்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை, அத்தனை கொடுமையாக உள்ளது,

சொக்கன்: ஓ அதுதானா கவலை, அதென்னப்பா இந்த உலகம் இப்படி கண்ணை மூடி கிடக்கிறது, எங்கோ மேற்கு நாடுகளில் ஒரு சிறிய தாக்குதல் நடந்தால் உடனே உலகம் அப்படி தவிக்கிறது ஆனால் இங்கு அநியாயமாக இப்படி கொல்கிறார்கள் கேட்க நாதியில்லை. அந்த வீடியோ காட்சிகளை பார்த்தபின் இரண்டுநாளாய் சாப்பிடக்கூட முடியவில்லை.

சோமேஸ்வரன்: அதுதான் எனக்கு புரியவில்லை, எப்படி உலகம் ஒரு மோசமான திசையில் போகிறதுபார், உலகை ஆள நினைக்கும் பெரிய நாடுகள் இப்படி ரத்த ஆறுகளை தடுக்க விரும்பாமல் இருபதின் நோக்கம் என்ன என்று புரியவில்லை.

சொக்கன்: எல்லாம் அதிகார போதைதான் என்று தோன்றுகிறது, ஆரம்பத்தில் பொதுநலனில் தொடங்கும் ஒரு முயற்சி மெல்ல மெல்ல கடும் சுயநலத்தில் கொண்டு போய் விடுகிறது. அதில் கிடக்கும் அழிவுகளையும் இழப்புகளையும் பற்றி மனம் கவலைப்படும் நிலையை கடந்து விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சோமேஸ்வரன்: எத்தனை உயிர்கள் இந்த பாழாய்போன போர்களில் மடிகிறார்கள், ஆனாலும் போர்கள் ஓயவே இல்லை பார்,

சொக்கன்: ஆமாம் பா.சிங்காரம் கூட தனது கடலுக்கு அப்பால் புயலிலே ஒரு தோணி நாவல்களை இரண்டாம் உலக்ப்போர் பின்னனியில் அந்த அழிவுகளைப்பற்றி எழுதுகிறார் அதன் இழப்புகளை காணும்போது இந்த போர் ஏன் படைக்கப்பட்டது என்று மிகுந்த வேதனையாக இருக்கிறது,