Nov 24, 2010

Nov 17, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரமும் இந்திய குடிமகனும்

இன்றைக்கு பாராளுமன்றத்தை உலுக்கிகொண்டிருக்கும் அலைவரிசை ஊழல் பற்றி, ஒரு பதிவு போட்டாகவேண்டிய நிலையில் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இருக்கும் நிலையில், நானும் ஒரு பதிவு போட முடிவெடுத்தேன். காலதாமதமான பதிவுதான்.

2G அலைவரிசைகளை 3G அலைவரிசைகள் போல் ஏலம் போடாமல், முதலில் வந்து கேட்பவர்களுக்கு கொடுக்கலாம், என்ற 1999 வருட தொலைப்பேசி கொள்கையின்படி திரு.ராஜா அவர்களின் துறை விற்றுவிட்டது என்பதுதான் பிரச்சினை.

2G என்பது இரண்டாவது ஜெனரேஷன். 3G என்பது 3 வது ஜெனரேஷன்., அதனை எளிதாக எனக்கு புரிந்தமாதிரி சொல்கிறேன். சென்னையில் இருந்து மும்பை செல்ல மூன்று சாலைகள் இருப்பதாக கொள்வோம். அதில் முதல் சாலை 1G, இரண்டாம் சாலை 2G, மூன்றாம் சாலை 3G. முதல் சாலை சிரிய சாலை வேகமாகவும் போகமுடியாது எல்லா வகை வாகனங்களும் போகமுடியாது, இரண்டாவது சாலை கொஞ்சம் வேகமாக போகலாம், கூடவே இன்னும் கொஞ்சம் கனரக வாகனங்களும் போகலாம், மூன்றாவது சாலை மிகவும் அகலமானது எல்லாவகை, தற்போதைய வாகனங்களும் போகலாம். நிறைய வேகம் போகலாம், டிராபிக் ஜாம் போன்றவை ஏற்பட மிகவாய்ப்பு குறைவு.

இன்னும் கொஞ்சநாள் கழித்து 4Gயும் வரக்கூடும். இப்படி சாலைகள் இருப்பது போல் இது 2Gயும் 3Gயும் தொலைபேசி அலைகளின் அகலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரிக்கிறார்கள், 2G என்பதில் உங்களின் தொலைபேசி தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் அளவிலும்தான் செல்லும், அதுவே 3Gயில் இன்னும் கூடுதலான வேகத்திலும் MMs போன்ற செய்திகளை பரிமாறும்போது இன்னும் கூடுதலான வசதியோடு செல்வதால் டிராபிக் ஜாம், செய்தி இழப்பு போன்றவைகள் இல்லாமல் இருக்கும், வலைத்தொடர்புக்கு மிகவும் உதவிகரமானது.

2G அலைகள் ஒரு குறிப்பிட்ட MHZ வரைதான். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 3G அலைகள். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 4G. இப்படி போய்க்கொண்டே இருக்கும், அது போகட்டும் இதில் பிரச்சினை எங்கே உள்ளது என்று பார்க்கலாம்,

இப்போது 3G அலைவரிசைகளை இந்தியா முழுக்க உபயோகம் செய்ய, தொலைபேசி தொடர்புகளை கொடுக்க பல நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, அவை ஏலத்தில் விடப்பட்டதில் ஏலத்தொகை கடுமையாக ஏறி நல்ல வருமானம் இந்திய அரசுக்கு, அதைப்பார்த்த மத்திய தணிக்கை குழு ( இந்தகுழு எல்லா அரசு அமைப்புகளையும் கண்காணித்து அவர்கள் லாபகரமாக செயல்படுகிறார்களா என்று பார்த்து சொல்லும் ஒரு கண்காணிப்பு அமைப்பு) 2G யையும் இதுபோல் ஏலம் விட்டிருந்தால் நல்ல காசுகிடைத்திருக்குமே, ஏன் அப்படி செய்யவில்லை, என்று கேட்டு, ஏலம் விட்டிருந்தால் கூடுதலாக 1,75000 கோடி (சுமாராக) கிடைத்திருக்கலாம், என்று ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறது.

புரியும்படி சொன்னால் தேசிய சாலைகளில் டோல்கேட் போட்டு நமது காருக்கு பணம் வசூலிக்கிறார்கள் இல்லையா, அது ஏலம் முறையில் விற்கப்பட்டு, எவர் அதிக ஏலம் எடுக்கிறாரோ அவருக்கு கொடுக்கப்படும், அந்த ஏலத்தொகையைப் பொருத்து அவர் ஒரு காருக்கு இத்தனை ரூபாய் என்று கேட்பார், ஆகவே ஏலத்தொகை அதிகமானால் கடைசியில் பாதிக்ப்போவது நாம்தான்.

அதுபோல் இந்த 3G அலைவரிசைகளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஏலம் விட்டதில், அவர்கள் அதிகவிலை கொடுத்து எடுத்தார்கள், நல்ல விலை. ஆனால் இது சராசரி மனிதனின் தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்கும் அல்லவா, ஆகையால் 1999ல் ஏற்பட்ட தொலைபேசிக்கொள்கை குறைந்த விலைக்கு இதை ஒரு நிறுவனத்திற்கு விற்று, அவர்கள் குறைந்த விலையில் சாதாரணமக்களுக்கு இதை கொடுக்கவேண்டும், என்று உத்திரவாதம் பெற்று, சாதாரண மக்களுக்கும் தொலைபேசி கிடைக்கும் அதனால் ஏலம் விடவேண்டாம் என்று முடிவு செய்தது அரசு.

அந்த அடிப்படையில்தான் திரு, ராஜா அதை ஏலம் விடாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தவறு எங்கே இருக்கலாம் என்று பார்த்தால்.

1.1999 தொலைபேசிக்கொள்கையின் மற்ற சரத்துக்கள் பின்பற்றாமல் போனதில்.

2.குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மிகமிக அதிக விலையில் அதனை விற்று விட்டதால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போகும்.

3.அறிவிக்கப்பட்ட விற்பனை கடைசி நாளுக்கு ஒருநாள் முன்பே விற்பனை முடிந்து விட்டதாக அறிவித்துவிட்டது.

4.தகுதியான நிறுவனங்களுக்குதான் அவைகள் விற்கப்பட்டனவா.

இந்த விவகாரத்தை யாரோ பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட் கொண்டுபோக பிரச்சினை பெரிதாகி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

இதன் விளைவுகள் தமிழக அரசியலில் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

1. இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் வரும் சட்டசபைத்தேர்தலில் கூடுதல் இடம் தமிழக தேர்தலில் திமுகவிடம் பேரம் பேசலாம்.
2. அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கையிலெடுக்கும், அல்லது காங்கிரஸை தனது கூட்டணிக்குள் கொண்டுவர முயலும்.
3. பிஜேபியும் மற்ற எதிர்கட்டசிகளும் தங்கள் கட்சியின் செயல்பாடுகளை இன்னும் கொஞ்ச நாளைக்கு உற்சாகமாக்க உதவும்.
4. பத்திரிக்கைகளுக்கு சில மாதங்களுக்கு வருமானம் கூடும்.
5. நம்மூர் டீ கடை விவாதக்காரர்களுக்கு இன்னும் ஒரு விஷயம் விவாதிப்பதற்கு
6. பார்லிமெண்ட் செயல்பாடுகள் சிறிதுநாளைக்கு முடங்கும்.
7. அடுத்த விவகாரம் வரும் வரை இந்திய குடிமகன் நினைவுகளில் இருக்கும்.

அவ்வளவுதான். மற்றபடி பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.

தவநெறிச்செல்வன்.

Nov 1, 2010

தமிழக தேர்தல்-2011ம் காங்கிரஸ் கட்சியும்


தமிழக தேர்தல் 2011 தொடங்க இன்னும் சுமார் 150 நாட்களே உள்ள நிலையில் பலவாறு கணிப்புகள் காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அவைகளில் கூர்ந்து நோக்கும் போது ஏற்படும் எண்ணங்களே இக்கட்டுரை.

ஒரு புதிய சிந்தனையாகவும் இதைக்கொள்ளலாம், அகில இந்திய காங்கிரஸ் தனது திருச்சி கூட்டத்தில் சோனியா காந்தியை கலந்து கொள்ளவைத்து ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கிறது, அந்த செய்தி தமிழக மக்களுக்கும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கும்தான். இது நடந்து ஒரிரு தினங்களில் முதல்வரின் அறிக்கை வருகிறது கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என்று நினைப்பது சரியல்ல என்ற ரீதியில். பலருக்கு இந்த அறிக்கையின் நோக்கம் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களுக்குத்தான் முதல்வர் கூறி இருக்கிறார் என்று தோன்றலாம், அதன்பிறகு மற்றொரு அறிக்கை, தன்னையும் நேரு குடும்பத்தினரையும் பிரிக்க ஒரு முயற்சி நடப்பதாக. இப்படி வந்த அறிக்கைகளை மனதில் கொண்டு யோசித்தால் அதன் உள்ளர்த்தம் புரியும்.

இன்றைய நிலையில் திமுக கொண்டுள்ள தேர்தல் நடைமுறைகளும், காங்கிரஸும் சேர்ந்தால் சுலபமாக ஒரு வெற்றியை அவர்கள் பெறக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. திமுக இடைத்தேர்தல்களில் கையாண்ட யுக்திகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சக்தியோடு காங்கிரசின் பலமும் சேரும்போது வெற்றி சுலபம் என்பது ஒரு கணக்கு. ஆனால் 234 தொகுதிகளிலும் அதே முனைப்போடு செயல்படுவது என்பது ஒரு ஆகாத காரியம் என்பதால்தான் திமுக தலைமை பாமக வை தங்களோடு சேர்த்து ஒரு பாதுகாப்பான நிலையை அடைய யோசிக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியலாம், இதில் என்னதான் பாமக இணைந்தாலும், அதன் தொகுதிகளில் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிவரலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் மந்திரிசபையில் சேர முயற்சித்த வாய்ப்புகளை எல்லாம் திமுக தலைவர் தட்டிபறித்து விட்ட கோபம் அல்லது வருத்தம் நிச்சயம் இருக்கும். கூடவே இன்று ராகுல் காந்தி அவர்கள் ஒரு எழுச்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் மாற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இதில் முக்கிய பங்கு வகிக்க போவது பீகார் மாநிலத்தில் இப்போது நடந்து வரும் தேர்தல். அந்த மாநிலத்தில் திரு. நிதிஷ்குமார் தலைமையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கடந்து 5 வருடத்தில் செய்துள்ள மாற்றம் அவருக்கு ஒரு நல்ல முடிவைத்தரும் என்று தோன்றுகிறது, அங்கு காங்கிரஸ் தனது முன்னாள் சகாக்களான லாலு மற்று பஸ்வான் போன்றவர்களை நம்பாமல் தனியே எல்லா தொகுதிகளிலும் தனிப்பெரும் கட்சியாக களத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்ற மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் லாலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக நின்ற காங்கிரஸ் யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு நல்ல வெற்றியை பெற்று கணிசமான இடங்களை அள்ளியது. உத்திரபிரதேசத்திலும் அதுதான் நடந்தது ஆகையால் ராகுலின் பயணம் இந்த தேர்தலிலும் அதே மாதிரியான ஒரு சோதனையாக அமைந்ததுள்ளது. அது நல்ல பலனைத்தரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் இறுதியில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதன் வெற்றி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அதே பார்முலாவை காங்கிரஸ் தொடர ராகுல் நினைக்கலாம், மதுரையில் கக்கன் நினைவு விழாவிலும் திருச்சியில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்திலும் சரி காங்கிரஸ் தனது விஸ்வரூபத்தை காட்டி இருக்கிறது.

வியஜகாந்த் தலமையிலான தேமுதிக காங்கிரஸ் தனியாக வரும் நிலையில் இயல்பாகவே மிக பொருத்தமான ஒரு கூட்டணியை உருவாக்க தயாராகும். ராகுல் ஈடுபாடு அதிகமாகி இந்த தேர்தலில் தமிழகத்தில் தங்கி செயல்பட நேர்ந்தால் அது திமுக அதிமுக இருவருக்கும் என்னதான் கூட்டணிகள் இருந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிமுக தனது பலத்தை கடந்த சில ஆர்ப்பாட்டங்களில் மிக பெரிய அளவில் காட்டியுள்ளது, திமுக என்னதான் இலவச திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வந்தாலும், மது விற்பனையில் அவர்கள் காட்டி வரும் உற்சாகம் பலரின் மனவேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது, அடுத்து விலைவாசி ஏற்றம், அது மக்களை ஒரு தாங்கமுடியாத மனநிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
கூடவே இன்றுள்ள சட்ட ஒழுங்கு. குடும்ப அரசியல்,இலங்கை பிரச்சினை இப்படி பல விஷயங்கள் திமுக அரசின் எதிர்மறை ஓட்டாக மாறக்கூடிய சூழல், இவைகளை எல்லாம் ஓட்டாக மாற்றும் சக்தி அதிமுக கூடாரத்தில் அதிகரிப்பதாகவே இப்போது கூடிய கூட்டம் தெரிவிக்கிறது.

இதில் காங்கிரசின் தனித்த தேர்தல் முயற்சி மிக முக்கிய கட்டத்தை தமிழக அரசியலில் கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றுகிறது. காங்கிரஸ் முயன்று நின்றால் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரலாம் என்பது பல நல்ல காங்கிரஸாரின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் காங்கிரஸில் முன்னிறுத்த ஒரு வலுவான மாநிலத்தலைவர் இல்லாமை ஒரு குறைதான், ப.சிதம்பரம் ஜீ.கே வாசன், ஈ.வி,கே.ஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றவர்கள் இருந்தாலும் சிதம்பரம் தவிர மற்றவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக அறியப்படவில்லை என்பதும் முக்கியம், ஆனால் தமிழக காங்கிரசில் திரு, வாசனுக்கு அதிக தொண்டர்பலம் உள்ளது ஓப்புக்கொள்ளப்படவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஆகையால் இந்த இருவரில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம், எனக்கென்னவோ பீகார் தேர்தல் ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொடுக்க கூடும் என்று தோன்றுகிறது.

விரைவில் போன மக்களைவைத்தேர்தல் போல ஒரு தேர்தலுக்கான முழு தொகுதி வாய்ப்புகளையும் ஒரு பதிவாக விரைவில் போட முயல்கிறேன்.

தவநெறிச்செல்வன்