Apr 17, 2010

கிரகங்களும் திசைகளும்

திசைகள் அதிபதி கிரகம் குணம்

கிழக்கு இந்திரன் சூரியன் வெற்றி, அறிவு

தென்கிழக்கு அக்னி சுக்கிரன் ஆசை

மேற்கு வருணன் சனி சோகம், அடக்கம்

தென்மேற்கு நைருத்தி ராகு சக்தி, அதிகாரம், ஈகோ

வடக்கு குபேரன் புதன் அறிவு, வியாபாரம்

வடகிழக்கு ஈசானியன் குரு அறிவு, ஆக்கம், நற்சிந்தனை

தெற்கு யமன் செவ்வாய் துணிவு, வலிமை

வடமேற்கு வாயு சந்திரன் கற்பனை, காதல், மாறும் மனம்

Apr 10, 2010

கானல்நீர் (மீண்டும்)

இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.

கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?

மனைவி:: ம் சொல்லுங்க,

கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.

மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.

கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்

மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.

கணவர்:!!!!!!!?????????

இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.

இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,

இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம்,

அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.

இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.

எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.

தவநெறிச்செல்வன்

Apr 8, 2010

நீங்களும் படிக்கலாம்

.முத்துலிங்கம் கதைகள் என்ற அவரின் கதை தொகுப்பை படிக்கிறேன் அதில் அவருடைய முன்னுரை படிக்கும்போது மனதில் தோன்றிய விஷயம் அதுதான் இதை எழுத தூண்டியது, செய்திகள் நிறைந்த ஒரு எழுத்தை எழுத முயலவேண்டும் அதுதான் எழுத்தின் வெற்றி..

அப்படியானால் எவ்வளவு உழைக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய பிரச்சினைகள் உண்டு ஒரு நல்ல எழுத்தாளராவதில், சாரு ஒரு நாளைக்கு 23 மணிநேரம் உழைக்கிறேன் என்று கோபப்படுவது கூட இதனால்தான் போல.

ஒரு கவிதையை எழுத மனுஷயபுத்திரன் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை, எல்லா எழுத்தாளரிடமும் எல்லா வாசகர்களுக்கும் உள்ள ஒரு சந்தேகம், இந்த ஆள் எப்படி இப்படி எழுதுகிறார் என்பதுதான். அதற்காக மிக கடுமையான களப்பணிகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதும் அது இதற்காகத்தான் செய்யப்படுகிறது என்று எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அந்த களப்பணியின் விளைவால் வரும் ஒரு படைப்பு அதன் மிகுந்த பலனைத்தருகிறது.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்தபோது அப்படித்தான் தோன்றியது, முழுதும் படித்தேனா என்று கேட்டார்கள் நிறையபேர், அப்படியானால் நிறைய பேரை முழுதும் படிக்க முடியாமல் செய்கிற கடுமையான நடை அதுவென்று உணர்ந்தேன். ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் நடை ஒரு விறுவிறுப்பான நடை பல கதைகள் கீழே வைக்கமுடியாமல் படிக்கதூண்டுகிறது,

சிறு பிராயத்தில் கிரைம் நாவல்களில் ராஜேஷ் குமார் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார், அதற்கு முன் சங்கர்லால் படித்தியப்பாடு இருக்கிறதே, அதன் பெருமை எல்லாம் தமிழ்வானனுக்கே சேரும். பிற்பாடுதான் சுஜாதா வந்தார் அவர் இழுத்துக்கொண்டு ஓடிய ஓட்டம் மிக நீளமானது, அவரோடு ஓடும்போது ஏற்பட்ட மனநிலைகள் பல நிலைகள் என்றாலும் இடையில் பல பாக்கெட் நாவலாக பாலகுமாரன் வந்த போது அதன் தாக்கமும் அதிகம்தான், இந்த ஆள் என்னத்தை எழுதினாலும் இந்த பாடு படுத்துகிறானே என்று தோன்றும், பல பெண் வாசகர்களை கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன், இந்த இடையில் எனது சித்தப்பா மூலம் அப்போது கிடைத்த லாசரா வின் சிந்தாநதி ஒரு கலக்கு கலக்கியது, என்னடா இது எழுத்து, இதற்குபோய் சாகித்ய விருதெல்லாம் கொடுக்கிறார்களே என்று பலமுறை படிக்க எங்கோ கொஞ்சம் புரிந்தது, ஆனால் அந்த எழுத்தின் நளினம் ஒரு போதையாக இருந்தது. அதை நாடிப்போய் அவர் தினமணியில் எழுதியது அது இது வென்று கிடைத்ததெல்லாம் படித்தபோது இலக்கியம் என்பதன் தூரம் இன்னும் எங்கோ இருக்கிறது என்றும், நாம் கொஞ்சம் இலக்கியம் படிக்கிறோம் என்று புரியத்தொடங்கியது, அந்த இடைவெளியில் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படிக்க என்ன நடக்கிறதென்றே புரியாமல் ஒரு நாவலுக்காக இவ்வளவு உழைப்பு பின்னால் இருக்கிறது என்கிற அதிசயத்தை புரியவைத்த நாவல் அது.

அப்படி இப்படி என்று தட்டுப்பட்டதெல்லாம் படித்து ஒரு நண்பரின் மூலம் பொன்னியின் செல்வன் படிக்க நேர்ந்தது, உண்மையில் ஒரு வாசகனுடைய படிப்பு அனுபவ வழி இதுவாக இருக்க வேண்டும் என்றில்லை எனக்கு இருந்தது இப்படி அவ்வளவுதான், பொன்னியின் செல்வனின் போக்கும், அத்தனை பெரிய புத்தகத்தை படிப்பதை நிறுத்தமுடியாமல் அதன் விறுவிறுப்பு தாங்கமுடியாமல் அலைந்ததை இன்னும் மறக்க முடியாது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி ஒரு வசனம் வருகிறதே “அடிச்சது அந்த காதல்” அப்படி ஒரு அடி அது பொன்னியின் செல்வன் தந்ததுதான், அந்த கதை நடந்த இடங்களில் நான் வாழ்தேன் அதனால் அதன் ஒவ்வொரு வருணனையும் என்னை அங்கே கொண்டு போனது, தஞ்சை குடந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இதைதான் சொல்வார்கள் அந்த நாவலைப்பற்றி அப்படி ஒரு அனுபவம், புத்தகம் படிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலையை எனக்கு கொண்டு வந்த ஒரு நாவல் அது. அதன் பின் அதனை பலவடிவங்களில் நான் வாங்கி வாசித்து விட்டேன், பின்னர் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, உண்மையில் பார்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கியபோது எனக்கு ஏமாற்றம்தான் மற்ற நாவல்களைப்போல் 5, 6 புத்தகங்கள் என்றில்லாமல் இப்படி சிறிய பகுதியாக இருக்கிறதே என்று, கல்கி தன் வாழ்நாளில் இதைவிட உயர்வாக எதுவுமே செய்யமுடியாது, அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று பலமுறை யோசிக்கவைத்த எழுத்து,

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஜீரோ டிகிரியும், ஜெயகாந்தனும் ஒரே நேரத்தில் நுழைந்தார்கள், இடையில் வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்கள் வந்து அனுபவத்தை கூட்டி வைத்திருந்தாலும் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்று ஜெயகாந்தன் ஹென்றியை கொண்டுவந்து உள்ளே திணித்தபோது ஒரு கலக்கம் என்னடா வாழ்க்கை நாம் வாழுகிறோம் என்று, அதெப்படி ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அரைநிர்வாணத்தை ஒரு ரோஜாமலரின் அழகை ரசிக்கிற மனநிலையில் பார்க்கமுடிந்தது, அந்த ஒரு வரியில் ஹென்றியின் மனத்தின் கலங்கமின்மை அந்நாவலின் முழுக்க நம்மை அதே கோணத்தில் அழைத்துச்செல்வதை அனுபவிக்க முடிந்த நிலையில், நல்ல மனிதனாக வாழ்வதன் அர்த்தம் எனக்கு பிடிப்பட்டது அப்போதுதான்.அதன்பிறகு ஜெயகாந்தனின் எல்லா எழுத்துகளும் கிடைக்க படித்து திளைக்கமுடிந்தது ஆனாலும் ஹென்றிதான் எனக்கு உச்சம், ஜீரோ டிகிரி பற்றிய அறிமுகம் எனக்கு நல்லவிதம் இல்லை ஆனால் அதன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த கடிதங்களின் வழி அதைப்பற்றிய பிம்பம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது, அந்த கடிதங்கள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டதின் நோக்கமும் அதுதான், ஆனால் உள்ளே போகும்போது ஒரு பாலியல் கதையை படிக்கப்போகிறோமோ என்றுதான் நினைத்தேன்,

ஆனால் அதன் உள்ளே இருந்த பெண்களின் மீதான சமுதாய கட்டுகளின் துன்பவியல் வெளிப்பாடுகளும் அதன் ஊடே கிடந்த ஒரு அனாயசமான கோபமும், அதன் நகைச்சுவையும் என்னை முழுக்க புரட்டிப்போட்டது, அதன் பின் என்னை இந்த சாருவை நோக்கி ஒடவைத்தது, சாருவின் எல்லா நூல்களும் வரவர படிக்கத்தொடங்கினேன், இந்த காலங்களில் நான் சாருவைத்தவிர வேறுயாரையும் வாசிக்கவில்லை என்றே சொல்லலாம், பின் நவீனத்துவம், நான் லீனியர் போன்ற புதியவார்த்தைகளின் அறிமுகமும் அதன் வேகமும் என்னை பாலகுமாரனைப்படிப்பவர்களுடன் சண்டைபோடவைத்தது, ஆனாலும் இன்னும் வேகமான அடிக்ககூடிய ஒரு எழுத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன், இதுவரை படித்த இலக்கியங்களின் வாசல் தேடிக்கொடுத்த அறிவு, உலக இலக்கியங்களை நோக்கி திருப்புகிறது, சாருவுக்கு அதில் பெரும் பங்குண்டு, இன்றைய இளைய சமுதாயத்திற்கு பல உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு, இதன் பிறகு எஸ். ராமகிருஸ்ணன் வந்தார் எனது புத்தக அலமாரிக்கு அதன் சுகம் அடுத்து.

தவநெறிச்செல்வன்

மொழிப்பற்று,

நேற்று Asianet என்ற மலையாள தொலைக்காட்சியில் Idea star singer என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன், அதைப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த நிகழ்ச்சியின் தன்மை பற்றி அறிவார்கள், மிக அற்புதமான ஒரு நிகழ்ச்சி.

அதில் உள்ள மூன்று நடுவர்களில் ஒருவர் பிரபல பாடகி திருமதி சித்ரா அவர்கள், நேற்று போட்டியாளரில் ஒரு பெண் ஒரு தமிழ் பாடல் பாடும்போது சில தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்தார், அதனை சரி செய்யும் விதத்தில் திருமதி சித்ரா அவர்கள் தவறாக பாடக்கூடாது தமிழர்கள் தங்கள் மொழிமீது மிகவும் நேசம் கொண்டவர்கள் ஆகையால் அது அவர்களை புண்படுத்தும் நன்கு புரிந்துகொண்டு சரியாக பாடவேண்டும் என்று சொன்னார்கள்.

தமிழர்களின் மொழிப்பற்றின் ஒரு பிரபலத்தை இது காட்டுகிறது என்றே நினைக்கிறேன்
சாதாரணமாக நாம் இப்போது பல தமிழ் வார்த்தைகளை உண்டாக்கி வைத்துள்ளோம், மிகுந்த முயற்சியில் அவைகளை பயன் படுத்தவும் செய்கிறோம், ஆனால் பல மொழிசார்ந்த என் நண்பர்களுக்கு அவர்கள் மொழியில் அதற்கான வார்த்தைகள் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிப்பற்றில் குறையில்லை ஆனால் அந்த மொழியின் கலைச்சொற்கள் அவர்களின் மொழியாளர்கள், ஊடகவியலாளர்களால் சாதாரண மக்கள் வரை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்,

சாதாரணமாக கணினி, மடிகணினி, மிதிவண்டி, திரைப்படம், மற்றும் பல வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் நம்மிடையே வந்துவிட்டன, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர் அல்லது மற்ற நாட்டினர் மத்தியில் ரகசியம் பேச தூய தமிழுக்கு மாறுவதை சாதாரணமாக பார்க்கலாம், ஆனால் மற்ற இந்திய மொழிக்காரர்கள் அதில் ஆங்கில வார்த்தைகளையே உபயோகப்படுத்தவேண்டியுள்ளது.

நமது தமிழ் இப்போது ஒருவகையில் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்று நம்பலாம், 1 லட்சம் பேர் பேசினால் அந்த மொழி குறைந்தது அடுத்த 100 ஆண்டுகள் அழியாது என்று ஒரு கணக்கு சொல்கிறது, மிகவும் பழமையான நமது தமிழ் மிகவும் பரவலாக பேசப்படுகிற மொழியாக இருப்பது மிகவும் பெரிய விஷயம்தான். அடுத்து புதிய விஞ்ஞான உலகில் கணிப்போறியில் மிகவும் உபயோகப்படுகிற மொழியாக இருப்பதும் முக்கியகாரணம்.

நமது புதிய கல்வி அமைப்புகள் ஆங்கிலத்தின் மீதான வாய்ப்புகளால் அதனை முதன் மொழியாக ஆக்கிவிட்டார்கள், ஆகையால் எல்லா புதிய குழந்தைகளும் அதிகம் ஆங்கில வார்த்தைகளை பேசுவதை பெற்றோர்கள் பெருமையாக பேசக்கூடிய காலமாக இருக்கிறது, ஆகையால் அவர்களுக்கு தமிழின் பெருமையை பேசவேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம், நம்மை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் தாய் மொழியையே எல்லாவற்றுக்கும் பேசுகிறார்கள்.

நாம் ஏன் இப்படி ஆகிப்போனோம் என்கிற கவலை உள்ளது, தைரியமாக தமிழில் பேச நினைப்போம், அதையே எல்லா சூழலிலும் பேச முயல்வோம், தமிழர்கள் தங்களுக்குள் தமிழ் தெரியும் நிலையில் அதையே பயன் படுத்தலாம், முக்கியமாக தமிழ் பேசுவர்கள் பெருமை கொண்டு பேச வேண்டும்.

தமிழ் பேசுவதால் ஒரு படி மேலே இருப்பதாய் உணரவேண்டும், ஒரு வெளிநாட்டு மொழியை பேச தெரியாததால் அதற்காக கவலைப்பட வேண்டாம், ஜெர்மன் நமக்கு எப்படி தெரியாதோ அதுபோல் ஆங்கிலம் நமக்கு தெரியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,

முடிந்தவரை தமிழில் பேசுவோம்.

தவநெறிச்செல்வன்