Jul 30, 2009

இப்படித்தான் நாட்கள் அழிகின்றன,

அதிகாலை துயில் எழுவது எல்லா வளைகுடா நாட்டிலும் ஒரு தவிர்க்க முடியாத விஷயம், அதனால் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை கழிக்கும் நேரத்தில் ஒரு விதமான தனிமை மிகவும் கொடுரமாக உணர்வதால் அதில் இருந்து விடுபட அந்த நேரத்தில் புத்தகமோ அல்லது இசையோ கேட்பது வழக்கமாகி விட்டது, இப்போது இணையம் வந்து விட்டபின் மடிகணினியின் உதவியும் சேர பல விஷயங்களை சுகமாக செய்ய முடிகிறது, காலையில் எழுந்து அதிகாலை.காம் இணையத்தில் இருக்கும் பொன்னியின் செல்வன் ஒலி வடிவத்தை ஓலிக்க செய்து குளியல் அறைக்குள் சென்றேன்,

இன்று பழயாறை என்ற பகுதியை வாசித்தார், பொன்னியின் செல்வன் நான் முதலில் படித்த நீண்ட ஒரு வரலாற்று நாவல் அதுதான் எனக்கு படித்தலின் சுகத்தை கற்று தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை, அதன் பின் எனது படிப்பின் தூரம் அதிகமாகிவிட்டாலும் அந்த பொன்னியின் செல்வனின் மீது உள்ள காதலும் பரவசமும் அப்படியேதான் உள்ளது, நமது முற்காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஒரு பலம்பொருந்திய மன்னனின் வரலாறு என்பதை விடவும் அது ஒரு சினிமா போல நம்முன்னே விரிவதை எத்தனை எழுத்தினாலும் போதாது என்றுதான் சொல்வேன். அதில் கலந்து கிடக்கும் காதலும் வீரமும் நிர்வாக செயல்பாடுகளும் அரசுகளின் அதிகார தூரங்களும் அதில் இணைந்து கிடக்கும் சிற்றரசர்களின் தன்மைகளும் அவர்களுக்குள் பரவிக்கிடக்கும் ஒரு இனம் புரியாத ஒற்றுமையும் இப்படி இதெல்லாம் புரிந்து கொள்ள உதவிய ஒரு பொக்கிஷம்.

கம்பர் தனது ராமனை எப்படி ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்திகொண்டுபோனேரொ அப்படி ஒரு முயற்சியாகக்கூட இருக்கலாம், இயல்பில் ராஜராஜன் இத்தனை தன்மை கொண்டவனாக இல்லாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் இல்லாத ஒரு அற்புதமான கதாநாயகனாக வந்திய தேவனையும் அருண்மொழியையும் கல்கி ஆக்கிவிட்டார் என்றுதான் சொல்வேன்.

அந்த அத்தியாத்தை கேட்டபடியே காலைப்புறப்பாடு முடிந்து எனக்கான வாகனத்தில் ஏறினேன், இன்னும் 1 மணிநேர பயணம் இருக்கிறது அதனால் எனது Mp3 player மிகுந்த உதவியாக இருக்கும், அதெப்படியோ ஒரு அமைதியில்லாத இறைச்சல் நிறந்த மனிதனாக போய்விட்டோனோ என்று கூட சில நேரங்களில் நினைக்கதோன்றியது,
சில நாட்களாகவே ஜோதா அக்பர் பட ஹிந்தி பாடல்கள் என்னுள்ளே ஒரு அதிர்வை ஏற்படுத்திகொண்டிருக்கிறது, இந்த ஏ.ஆர். ரஹ்மான் அப்படி ஒரு ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது,

வந்தார்கள் வென்றார்கள் படித்ததில் இருந்து இந்த மொகலாய மன்னர்களிடம் ஒரு காதலே வந்து விட்டது என்று நினைக்கிறேன் ஆக்ரா கோட்டைக்குள் சென்று பார்த்த போது ஒவ்வொரு அடியிலும் எனக்கு ஒரு பரவசம் இருந்தது, அது தாஜ்மகலில் கூட இல்லை, எத்தனை முடிவுகளை எடுத்த தர்பார் மண்டபம் , ஷாஜகான் சிறைப்பட்டிருந்த அறைகள் இப்படி அது ஒரு பரவசமான ஒரு இடம், செங்கோட்டையை விடவும் எனக்கு பிடித்த இடம் ஹிமாயூன் சமாதியுள்ள அந்த பிரமாண்ட கல்லறை கட்டடமும் ஆக்ரா கோட்டையும்தான்,

அதன் வரலாறுகளுக்குள் பலமுறை பயணப்பட்ட ஒரு அற்புதமான அனுபவம், அதனால்தானோ என்னவோ ஜோதா அக்பர் படமும் பலமுறைபார்த்தேன், அதன் வரலாறுகள் மிகவும் நுணுக்கமாக படிக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் அந்த பாடல்கள் என்னுள்ளே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்தின, எனக்கு இந்தி மொழி தெரியாது என்றாலும் அது என்னை அப்படியே ஒரு பரவசத்துக்குள் அழைத்துப்போவதை உணரமுடிகிறது,

ஒரு மணிநேர பயணத்துக்கு பின் அலுவலகம் சென்று பாதுகாப்பு சோதனைகள் முடிந்து எனது இருக்கைக்கு சென்று அமர்ந்து அன்றைய காலை வேலைகள் தெவையான விஷயங்களை செய்து கொடுத்து விட்டு எனது தளத்தில் சில மாற்றங்களை செய்ய முயல்கிறேன், அதன், எப்போதோ கும்பகோணத்தில் படித்த போட்டோ ஷாப் மென்பொருளில் சில முயற்சிகளுக்கு பிறகு சில மாற்றங்களை செய்தேன், அதை இந்த தளத்தில் நீங்கள் காணலாம், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் நான் புதிதாக ஒரு முயற்சியை செய்த மகிழ்ச்சியில் எனது வழக்கமான தளங்களுக்கு செல்கிறேன், சாரு மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் மிக முக்கியமானவர்கள், அதில் சென்று படிக்க படிக்க ஒரு விதமான உணர்வுகள் வரும், அதெல்லாம் எப்படி எழுதுவது நான் என்ன எழுத்தாளரா வெறும் உளறுகின்ற ஒரு பிளாகர் மட்டுமே.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தாஸ்தாயெவ்ஸ்கியை பற்றிய கட்டுரை படிக்க படிக்க ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, அவரைப்பற்றி தெரியும் அவ்வளவுதான், ஆங்கில நாவல்கள் படிக்கும் அளவுக்கெல்லாம் ஒரு ஆங்கில அறிவு இல்லை, அதைப்பார்த்து பயந்து போன ஒருதன்மைதான் உண்டு, ஆகையால் எதுவாய் இருந்தாலும் தமிழில் தேடிபடிக்கிறேன், சாருவின் கருணையில் பல தமிழ் மொழி பெயர்ப்புகளையும், உலக இலக்கியத்தின் அறிவையும் கொஞ்சம் பெற முடிகிறது, என்றாலும் இதெல்லாம் தீரக்கூடிய விஷயம் இல்லை, இதற்கிடையே, குடும்ப பிரச்சினைகள் லவ்கீக செண்டிமெண்டுகள் என்று பிரச்சினைகள் வேறுதிசைகளுக்கு நம்மை இழுத்துச்செல்வதும் உண்டுதான்,

இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்தில் எல்லாம் முறைத்துக்கொள்ளும் மனிதர்களைப்பார்க்கும்போது பலமுறை நினைத்தது உண்டு இவர்களுக்கெல்லாம் இலக்கியம் என்கிறதும் அதில் சுகித்து கிடக்கும் வாய்ப்பும் கிடைத்தால், இப்படி ஒரு உலகம் பறந்து விரிந்து கிடக்கும் போது அதைவிட்டு விட்டு இப்படி இயந்திரமாய் கழிக்கிறோமே என்று வெட்கப்படுவார்களோ என்று.

அத்தனை சுகம் இந்த படிப்பதில் அதிலும் நல்ல இலக்கியங்களை படிப்பதில் இருக்கிறது, இதில் எங்குமே நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. பா.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி என்கிற நாவலை இப்போது படித்து கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் அது ஒரு கட்டுரையில் சொல்கிற விஷயமில்லை, அவர் சொன்ன ஒரு விஷயத்தை எஸ்.ரா மேற்கோள் காட்டியுள்ளார்

மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை

இது எவ்வளவு பெரிய வாசகம், இதன் பொருள் துயரங்களில் வீழ்ந்து மீண்டு வந்தவருக்கெல்லாம் புரியாமல் இருக்காது, எல்லா துயரங்களையும் கடக்கத்தாம் முயல்கிறோம், எனது தந்தையார் இறந்த போது ஒரு தாங்கமுடியாத துயரம் எனக்குள் எழுந்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள நான் முயலவே இல்லை, அல்லது அதற்குள் பிரவேசிக்கவே முயலவில்லை, இப்போது தனிமையில் இருக்கும்போதெல்லாம் அவரின் நினைவுகள் மெல்ல கண்ணீருக்குள் வந்து விடுகின்றன, அவரின் கைகடிகாரம் கட்டிய கையைப்பிடித்துக்கொண்டு நடந்த காலங்கள் வந்து வந்து போகின்றன, ஆனால் அதெல்லாம் தாங்கி கொள்ள முடிவதுதான் ஒரு ஆறுதல்,

இப்படி எல்லோருக்கும் காலம் ஒரு துயரத்தின் வலிமையை உணர்த்தி அதை தாங்க கூடிய தனது வலிமையையும் உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு தொடர்கதை போல இருந்த உறவுகள் திடீரென முற்றும் போடும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பின்மை கூட ஒரு துயரமாக எழுந்து மெல்ல மெல்ல கரைந்து ஒரு நுரைபோல அப்படியே வடுதெரியாமல் மறைந்து போய்விடுகின்றன அதன்பின் அந்த உறவுகள் நிரந்திரமாக தனது முக்கியத்துவத்தை இழந்து ஒரு சராசரியாய் தங்கிவிடுகிறது.

தவநெறிச்செல்வன்

Jul 26, 2009

கேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.

அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட காரில் ஏறினேன் என்னோடு எனது மேளாலரும் மற்றுமொரு பொறியாளரும் மூன்று பேருமான பயணம், காலையில் தினசரியில் அச்சுதானந்தன் அவர்கள் கம்னியூஸ்ட் கட்சியின் போலிட்பீரோவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி இருந்தார்கள், என்னுடைய கார் ஓட்டுனர் ஒரு தீவிர கம்னீயூஸ்ட் என்பதால் அவரிடம் இது விவாதிக்ககூடிய விஷயமாக இருந்தது, கூடவே அவர் கேரளத்தை சேர்ந்தவர், எனக்கு கேரளத்தை சேர்ந்த பலரின் நட்பு உண்டு, அதனால் மலையாள மொழி கொஞ்சம் தெரியும் அதனால் அதிகம் அவர்களோடு உரையாடுவதால் அந்த மொழி அறிவு மேம்படும் என்பதால் நான் அதிகம் இது போன்ற விவாதங்களை துவக்குவது பழக்கம்,

எனது அந்த நண்பர் கண்ணூர் சொந்த ஊராக கொண்டவர்,பெயர் பிரதீபன், இதில் கண்ணூர் என்றதும் அது செங்கொடியின் சொந்த ஊர் போன்ற ஒரு அமைப்பைக்கொண்டது. ஆனால் அதில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் UDF பலமுறை வென்றிருக்கிறது என்பது வேறு விஷயம், இதில் அச்சுதானந்தன் அவர்களின் வெளியேற்றம் ஒரு விதமான பதற்றத்தை எல்லா மீடியாக்களிலும் உண்டாக்கி இருந்தது, காரணம் கேரளத்தில் அச்சுதானந்தனுக்கு என்று ஒரு தனி மக்கள் செல்வாக்கு உண்டு காரணம் அவரின் எளிமை நேர்மை, ஆனால் பழய கேரள சி.பி.எம் மின் எல்லா முதல்வர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போதைய நடைமுறையில் கேரள மாநில கட்சியின் தலைவராக இருக்கும் திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. அச்சுதானந்தன் இடையே இருந்த ஒரு கோஷ்டி சண்டைதான் இந்த தேர்தல் கட்சிக்கு பெரும் தோல்வியைக்கொடுத்ததாக ஒரு மனநிலை உருவானதால் அதன் பாதிப்பு இப்படி ஒரு நடவடிக்கையாக அமைந்து விட்டது.

கண்ணூரில் கம்னியூஸம் என்பது ஒரு மதம் மாதிரியான விஷயம் அங்கே உள்ள செங்கொடி தொண்டர்கள் அதை அப்படித்தான் ஒரு ஆழ்ந்த பற்றோடு பின்பற்றுகிறார்கள், கண்ணூரைச்சேர்ந்த தலைவர்கள்தான் அந்த கட்சியில் அதிகம் ,தற்போதைய தலைவர் பிணராயி விஜயன், ஈ.கே நாயனார் போன்றவர்கள் கண்ணூரைச்சேர்ந்தவர்கள்தான்.மேலும் கண்ணூரில் அடிக்கடி நடைபெறும் அரசியல் கொலைகள் பத்திரிக்கை செய்திகளாக தமிழர்கள் படித்திருக்ககூடும், அதெல்லாம் இந்த கட்சியின் மீதான ஆழமான பிடிப்பின் வலுவான காரணங்கள்.

ஆனால் அச்சுதானந்தன் கண்ணூரை செர்ந்தவரில்லை என்பது ஒரு விஷயம், ஆனால் கட்சியில் தனித்தலைவர்களை தவிர கட்சியே முதன்மையானது என்கிற கொள்கை மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதால் இதில் எந்த தனிப்பட்ட தலைவருக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாததால் கட்சியைவிட்டு வெளியே போனால் அவர்களின் மதிப்பி செல்லாகாசாகிவிடும்.

இந்த பின்புலத்தில்தான் நான் கட்சியின் இந்த நடவடிக்கை பற்றிய விவாதத்தில் இறங்கினேன், அச்சுதானந்தன் மீது எல்லோருக்கும் ஒரு பரிவு உண்டு, பினராயின் ஆதரவாளர்கள் தவிர, காரணம் அவரின் எளிமையும் மிக நீண்டகாலம் கட்சியில் இருந்தும் முதல்வராக முடியாமல் இப்போதுதான் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்பதும் காரணம்,
நம் தமிழகத்தில் கம்னியூஸ்ட் கட்சியின் தீவிர செயல்பாடுகள் 80 களிலேயே குறைந்து விட்டதால் அதன் ஆழமான கொள்கைகளும் எளிமையும் நம் தமிழகமக்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, அதனால் நம் மக்களுக்கு திமுக அதிமுகவின் ஆடம்பர தனிநபர் துதி அரசியல்தான் பழக்கம், அதனால் தலைவரைவிட கட்சியே முதன்மையானது என்கிற ஒரு சொல் அமைப்பே அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்,

கேரளத்தின் எல்லா நிலையிலும் அரசியல் மிகவும் ஊடுருவிய ஒரு விஷயம், பல பிரச்சினைகள் அரசியல் பிரமுகர் கொண்டே தீர்க்கப்படுகின்றன அதுவும் கண்ணூர் போன்ற இடங்களில் ஒரு பிள்ளைக்கு பெண்பார்த்து முடிவெடுக்கு முன் அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க வேண்டுமானால் அந்த பகுதியில் உள்ள கிளை கமிட்டி ஆட்களிடம் தொடர்பு கொண்டு இதுபோல் ஒரு வரன் வந்துள்ளது அவர்களை பற்றிய குடும்ப நிலவரம் வேண்டும் சகாவே என்று சொன்னால் போதும் முழு உண்மையான விவரத்துடன் செய்யலாம் செய்ய வேண்டாம் என்கிற வரையிலான ஒரு உத்திரவாதம் வரை தீர்க்கமாக வரும், அது 100 சதம் உண்மையாகவும் இருக்கும், அதோடு எல்லா குடும்ப உறுப்பினர்களின் நல்ல பெயரையும் கம்னியூஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பெற்றிருப்பார்.அவரின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இருக்கும்.

இந்த அரசியல் அமைப்பு எல்லா குடும்பத்திலும் ஒரு சாதாரண விஷயமாக இணைக்கப்பட்டிருக்கும், அது ஒரு கிராம பஞ்சாயத்து அமைப்பைபோல. ஆகையால் இந்த மாற்றங்கள் கேரளத்தில் எல்லோரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் முதல்வர் அச்சுதானந்தன் தனது செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சொல்லிவிட்டு அதை மேற்கொண்டு விவாதிக்க அவர் விரும்பவில்லை, அதுதான் கம்னியூஸ்ட், அதன் கட்டளைகளுக்கு மறுப்பேச்சில்லை,

மாநிலச்செயலாளர் பினராயி விஜயன் முன்னாள் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது மின் துறை மந்திரியாக இருந்த காலத்தில் பல மின் திட்டங்களின் புதிய ஓப்பந்தம் காரணமாக மிகவும் பெரிய சர்ச்சைகள் உண்டாகின அதில் “SNC லாவலின் “ என்கிற ஒரு கேஸ் மிகவும் சிக்கலாகி அதில் ஊழல் புரிந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக கேரள கவர்னர் அந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி விசாரிக்க உத்திரவு இட்ட பின்பு இந்த அரசியல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யத்தை எட்டி பிடித்துள்ளது.

இதில் இரண்டு விதமான அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன, அதில் கம்னியூஸ்ட் கட்சியின் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் வேறு வேறு திசையில் இருக்கும், ஆனால் இந்த போலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டது, இந்த வழக்கில் கவர்னர் தலையிட்டதற்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தோற்றம் வழக்கம்போல தவறாகவோ அல்லது சரியாகவோ மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

Jul 14, 2009

கானல்நீர்

இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.

கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?

மனைவி:: ம் சொல்லுங்க,

கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.

மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.

கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்

மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.

கணவர்:!!!!!!!?????????

இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.

இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,

இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம்,

அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.

இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.

எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.

தவநெறிச்செல்வன்

Jul 3, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-3

நேரமோ ஆகிக்கொண்டிருந்தது, கு.சே அப்படியும் இப்படியும் அலைந்து கொண்டிருந்தான், அவன் முகத்தில் ஒரு பீதி குடியேறி இருந்தது, மெல்ல அந்த நிலையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் ஆகிவிடக்கூடிய நிலைதான் இருந்தது, அவனின் பதற்றம் கண்டு அங்கு பணிபுரிந்த பணியாட்களில் ஒருவர் தமிழர், இவனைக்கண்டு, என்ன சார் பிரச்சினை என்று கேட்டார், கு.சே அவரிடம் அழுதுவிடுவான் போல இருந்தது, எனது பெட்டி வரவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது, அவர் பயப்படாதீங்க எங்கையும் போய்விடாது அந்த கவுண்டரில் சென்று சொல்லுங்கள் என ஒரு இடத்தை காண்பித்தான், குணசேகரன் அந்த இடத்தில் சென்று டை கட்டி கொண்டு இருந்த ஒரு ஆளிடம் தனக்கு முடிந்த ஆங்கிலத்தில் தனது பெட்டி வரவில்லை என்பதை கூறினான், அந்த மனிதன் இவனுடைய டிக்கட்டை கேட்டான், குலசேகரன் தன்னிடம் இருந்த டிக்கட்டின் மறுபாதியை அவரிடம் நீட்டினான்.

அதன் பின்பக்கத்தில் ஒரு சிறிய சீட்டு ஓட்டி இருந்தது, அதை அப்போதுதான் கு.சே கவனித்தான்,தனது லக்கேஜ் பற்றிய ரசீது அதுதான் போலும் என்று அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. உடனடியாக அந்த சீட்டில் இருந்த நம்பரை தனது கணினியில் தட்டிப்பார்த்து உங்கள் பெட்டி வந்து விட்டது அங்குதான் இருக்கும் என்று கூறி ஒரு பணியாளரையும் துணைக்கு அனுப்பிவைத்தார், மீண்டும் இருவரும் கன்வேயர் பெல்ட் இருக்கும் இடத்தில் கீழே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்த்தார்கள்,

அந்த உடன் வந்த பணியால் அங்கு வெள்ளை நிற பிளாஸ்டிக் பை ஓன்று மூட்டை போல் கட்டி இருந்ததை பிரித்து கு.சே வை பார்க்க சொன்னார், அது நல்ல அழுத்தமான பையாக இருந்தது அதனை பிரித்த போது அவன் பெட்டி திறந்து அதில் உள்ள இவன் உள்ளாடை உள்ளிட்ட சாதனங்கள் அதனுள் விரவிக்கிடந்தன கு.சே வுக்கு சற்று தர்மசங்கடமாக உணர்ந்தான், அந்த உதவியாளரை ஏன் இப்படி ஆனது என்று கேட்டான், அதற்கு அவர் உங்கள் பெட்டி பூட்டு சில நேரம் சரியில்லாத போது திறந்து கொள்ளும் அதை இப்படி கட்டி அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான் என்று கூறிவிட்டு அந்த பணியாளர் அவர் பணி முடிந்த அர்த்தத்தில் அங்கிருந்து சென்று விட்டார்,

கு.சே அவைகளை மீண்டும் பெட்டிக்குள் வைக்கும் போது தனது சான்ற்தழ்கள் அதில் இருக்கின்றனவா என்று சரிபார்த்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டான், அதன் பின் அவைகளை ஒழுங்கு படுத்தி எடுத்து தனது வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்,

இந்த அலமலப்பில் கிட்டதட்ட ஒரு மணிநேரம் கால தாமதமாகிவிட்டது, வெளியே வந்தால் வெளியில் கடுமையான கூட்டம் விதவிதமான முகங்களில் எல்லோரும் யாரையோ தனக்கு வேண்டியவர்களை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள், அதில் பலவாறான மனிதர்கள் சிலர் தத்தமது கைகளில் சிலரின் பெயர் அல்லது கம்பெனி பெயர்களை எழுதி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்,

அதில் தனது பெயரோ அல்லது கம்பெனி பெயரோ இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே கு.சே தனது தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தான், அவன் பார்த்த வரைக்கும் எங்குமே அப்படி ஏதும் காணப்படவில்லை, என்ன ஆயிற்று யார் வந்து தன்னை அழைத்துப்போவார்கள், அவர்கள் நம்மை சரியாக அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்றெல்லவா சொன்னார்கள், யாரும் இல்லை என்றால் என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை மெல்ல அங்கே வண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டான், ஒன்றுமே தெரியாமல் சென்று கொண்டே இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அப்படியாரும் அழைக்க வராமல் போனால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளச்சொல்லி ஒரு தொலைபேசி எண் கொடுத்திருந்தார்கள், அதை தேடி தன் கைத்தொலைப்பேசியை ஆன் செய்தான்,

தவநெறிச்செல்வன்