Jun 26, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-2

கு.சே (இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.) அப்படி விழித்துக்கொண்டு நிற்பதை பார்த்து அதே வரிசையில் நின்றிருந்த ஒரு தமிழ்நாட்டுக்காரர் அவனை அருகே அழைத்தார், அப்போது கு.சே அவரிடம் ஒரு உலக மகா பணிவுடன் சென்று தனது பாஸ்போர்ட்டை நீட்டினான் அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு உங்கள் விசா எங்கே என்று கேட்க அவன் தன்வசம் இருந்த ஒரு விசாவின் ஜெராக்ஸ் காப்பியை காண்பிக்க அதற்கு அவர், “இது காப்பி ஒரிஜினல் அந்த கவுண்டரில் சென்று வாங்கி வாருங்கள் அப்போதுதான் விடுவார்கள்” என்று சொன்னார்,

அப்போதுதான் குலசேகரனுக்கு உயிரே வந்தது, ஆகா இதை யாருமே சொல்லவில்லையே, அந்த டிராவல்ஸ் காரன் கையில் கிடைத்தால் நையப்புடைக்கலாமே என்று எண்ணிக்கொண்டு அந்த கவுண்டர் நோக்கி போனான், அங்கே ஒரு அரபு நாட்டுக்காரன் உட்கார்ந்திருந்தான் அங்கும் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களின் பின்னே நின்று கொண்டான், ஒவ்வொருவரும் தனது காப்பியை அவனிடம் கொடுக்க அவன் அதன் ஒரிஜினல் விசாவை கொடுத்தான், அப்பாடி இவ்வளவுதானா என்று தனது விசா காப்பியை காண்பித்து தனது ஒரிஜினல் விசாவை வாங்கி கொண்டு மீண்டும் அந்த பாஸ்போர்ட் வரிசைக்கு போனான்,

மெல்ல இவன் முறை வந்த போது பாஸ்போர்ட்டையும் விசாவையும் அவனிடம் கொடுத்தான் அந்த ஆள் இவன் பாஸ்ப்போர்ட்டை பார்த்து கொபுசா மிகொலைசே கர என்று இவனை அழைத்தான், அய்யோ குப்புசாமி குலசேகரன் என்ற பெயரை அவன் அப்படி அழைப்பது தெரியாமல் யாரையோ அழைக்கிறான் என்று அல்லது ஏதோ புரியாத பாஷையில் திட்டுகிறான் என்பது போல் அவனிடம் வழிந்து கொண்டு நிற்க அவன் ஏதோ பேசிக்கொண்டே இவன் பாஸ்போர்ட் மற்றும் விசாவில் இரண்டு சீல் அடித்து இவன் கையில் கொடுத்தான், வாங்கி கொண்டு எல்லோரையும் போலவே அவனும் அங்கிருந்து நடந்து அடுத்த நிலைக்கு வந்தான்,

அங்கே இவன் கூட வந்த பயணிகள் கன்வேயர் பெல்ட் அருகே ஒரு தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள், கன்வேயர் பெல்டில் அவரவர் லக்கேஜ்கள் சுற்றிக்கொண்டிருந்தன, கு.சே அங்கே இருந்த தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனும் அவர்களோடு நின்றான், அவன் பெட்டிகள் அதில் வருகிறதா என கவனிக்க தொடங்கினான், ஒவ்வொருவராக அவரவர் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள், வெகுநேரமாகியும் இவன் பெட்டி வரவே இல்லை,ஒரே ஒரு பழய safari பெட்டி மட்டுமே துணிகளுடன் எடுத்து வந்திருந்தான்,

அது இன்னும் வராததால் மிகுந்த கவலை வரத்தொடங்கியது அதில்தான் இவன் சான்றிதழ்கள், எல்லாம் வைத்திருந்தான், அவனோடு வந்தவர்கள் எல்லாம் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு பொய்விட்டிருந்தார்கள், அங்கே பணிபுரியும் பணியாட்கள் யாராலும் எடுக்கப்படாத பொருட்களை எடுத்து தனியே வைத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் நமது கு.சே வின் சஃபாரி மட்டும் அங்கே புலப்படவே இல்லை, இதென்னடா வம்பாய் போய்விட்டது நான் எங்கே போய் தேடுவேன் என்று, அவனின் எதிர்காலமே அந்த சான்றிதழ்கள்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த கன்வேயர் பெல்ட்டின் எல்லாபுறமும் சுற்றி சுற்றி வந்தான், வேறு யாராவது தங்களது என்று தனது பெட்டியை எடுத்துபோயிருப்பார்களோ என்கிற பயம் வேறு அவனுக்கு மற்றவர்கள் தள்ளு வண்டியை கவனிக்கு முன் பெரும் பகுதி ஆட்கள் வெளியே போயிருந்தார்கள், என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அடிவயிற்றில் குபீர் என்ற பயம் மெல்ல பரவத்தொடங்கியது

தவநெறிச்செல்வன்

Jun 25, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-1

குலசேகரன் குவைத் விமான தளத்தில் இறங்கும் போது, அது அவனுக்கு முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் ஒரு பதற்றமான உணர்வையே கொண்டிருந்தான், அதுவும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எல்லோரையும் போலவே அவனுக்கும் பணம்தான் காரணமாய் இருந்தது.

விமான நிலையத்தை விமானம் எட்டியவுடன், பயணிகள் எல்லோரும் தத்தம் கைபேசியை ஆன் செய்வார்கள் போல, அதில் இருந்து ஒரே பீப் சத்தங்கள் வருகின்றன, சிலர் “நான் இப்பதான் இறங்கினேன், இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவேன்”, என்று அவரவர்களை அழைக்க வந்திருப்பவர்களுடன் உரையாடத்தொடங்கினார்கள்,

குலசேகரனுக்கோ இதெல்லாம் செய்ய முடியாது அவனிடம் உள்ள ஏர்டெல் குவைத்தில் எங்கே பேச உதவப்போகிறது? அவனை அழைக்க யாராவது வந்திருப்பார்களா அல்லது, பத்திரிக்கைகளில் சொல்வதுபோல் ஏர்போர்ட்டில் காத்திருந்து அவஸ்த்தை படநேருமோ என்றெல்லாம் ஒரு குழப்பமான மனநிலையிலேயே அவன் இறங்கினான்,

ஆரம்பத்தில் விமான பயணம் அவனை அப்படி ஒரு பயத்தில் ஆழ்த்தி இருந்தது வேறு விஷயம், அதனைப்பற்றி அடுத்த அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரு வழியாக இறங்கி எல்லா பயணிகள் செல்லும் திசையில் அவனும் அவர்களோடு சென்று கொண்டிருந்தான் இரண்டு புறமும் அலங்கரிக்கப்பட்ட கடைகள் விதவிதமான உலகத்தை அவனுக்க காட்டிக்கொண்டிருந்தன, அங்கங்கே அரபியிலும், ஆங்கிலத்திலும் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன, பெரும்பாலும் அரபியில்தான், இந்த அரபி எழுத்தை கண்டாலே குலசேகரனுக்கு ஒரு பயம் உள்ளுக்குள் எழுந்திருந்தது, அது எந்த வகையுடனும் சம்பந்தபடாத ஒரு அமைப்பில் இருந்ததாக அவனுக்கு தோன்றி இருக்கலாம், அல்லது இந்த காஷ்மீர் தீவிரவாதிகளின் அறிவிப்புகளை கண்டு அப்படி ஒரு உணர்வு தோன்றி இருக்கலாம்,

(ஆனால் அது உருது, இது அரபி, பலருக்கு அரபியும் உருது ஒன்று என்று தோன்றலாம் அரபியும் உருதும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத உச்சரிப்புகளையும் சொற்களையும் கொண்டவை)

பின்னர் பயணிகள் எல்லோரும் தத்தம் கை லக்கேஜுடன் ஒரு நீண்ட வரிசையில் நின்று கொண்டார்கள் அவர்களுடன் சென்று குலசேகரனும் நின்று கொண்டான், எல்லோர் கையிலும் பாஸ்போர்ட் இருந்தது, சரி இங்கு பாஸ்போர்ட் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டான். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மெல்ல இவன் முறை வந்த போது வேகமாக போய் அந்த கவுண்டரில் இருந்த அரபி உடை அணிந்த அந்த ஆளிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்தான், அவன் அதை வாங்கி பார்த்து விட்டு திருப்பி இவனிடமே கொடுத்து ஏதோ ஒரு திசையை காண்பித்தான், அப்போதுதான் குலசேகரனுக்கு உரைத்தது ஏதோ அசம்பாவிதம் என்று, என்ன செய்வதென்று புரியாமல் அங்கேயே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தான், ஒரு திருவிழாவில் காணாமல் போன குழந்தைதான் அப்போது கு.சே வுக்கு நியாபகம் வந்தது.

(இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.)

தவநெறிச்செல்வன்

Jun 20, 2009

சாருவும் நானும்-2

சாரு தனது தளத்தில் எனது கடிதத்தை வெளியிட்டு பதிலும் கொடுத்துள்ளார், இத்தனை பெரிய எழுத்தாளர் எனக்கு பதில் எழுதி என்னையும் மதிக்கிறார் என்பது மிகவும் பெருமையாக உணர்கிறேன், சாருவுக்கு நான் எழுதிய பதில் கடிதம் கீழே கொடுத்துள்ளேன்


அன்புள்ள சாரு,
எனது கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலில் உள்ள சில சந்தேகங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள மீண்டும் விரும்புகிறேன், தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக கவலைப்படுகிறேன்.

1.இஸ்லாம் அசைவ உணவு பழக்கத்தை அனுமதிக்கிறது என்று அதை நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லீம்கள் என்னை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதே வாதத்தை வைக்கும் எல்லோரும் இஸ்லாம் மது அருந்துவதையும், ஆடம்பர செலவுகளையும் தடைசெய்கிறது என்பதை ஏன் செயல்படுத்த மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம், ஆகையால் இதில் இவர்களின் விருப்பம்தான் முடிவு. இதில் ஏன் இஸ்லாமை இழுக்க வேண்டும்.

2.இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட அரபு தேசங்களில் வேறு உணவு வாய்ப்பு குறைவு என்பதால் மனிதனைத்தவிர மற்ற உயிர்களை சாப்பிடுவதை அது அனுமதிக்கவேண்டிய நிலை இருந்திருக்கலாம், கூடவே இஸ்லாம் பன்றி கறியை உண்பதை தடை செய்திருப்பதையும் கவனிக்கவேண்டும், ஆகவே வள்ளலார் மீனவர்களை சைவமாக்கியது போலத்தான் இந்த நிகழ்வு.

3.வேறு உணவு இல்லாத சூழலில் நானும் கூட ஒரு அசைவ நிலையை அடையக்கூடும் ஆனால், வேறு உணவுகள் இருக்கின்றபோது இது தேவையா? உயிர் பலி தேவையா?

4.மனித இனம் ஏன் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படவில்லை என்ற கேள்வியோடு, நான் இன்னும் ஒரு கேள்வியையும் இணைத்துக்கொள்கிறேன், ஏன் மிருகங்களுக்கு மதம் இல்லாமல் இருக்கிறது? சாரு எல்லா மத நூல்களும் கூறுகின்றன, மனித பிறப்பு அனுபவிக்க வேண்டி நல்லது கெட்டது இரண்டும் படைக்கப்பட்டிருக்கிறது அதில் மனிதன் நல்ல விஷ்யங்களை தேர்ந்தெடுத்தால் சுவர்க்க நிலையையும் கெட்டதை தேர்ந்தெடுத்தால் நரகத்தண்டனையும் அடைவான் என்று கூறுகின்றன, அதாவது மனிதன் சுய சிந்தனையுள்ள ஜீவனாக படைக்கப்பட்டிருக்கிறான் என்று, அதனால்தான் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படாமல் சுயமாக சிந்திக்க கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

(சாரு மதம் பற்றி நான் எழுதியிருப்பதால் மதப் பற்றாளன் என்கிற அளவில் என்னை நினைக்கவேண்டாம், என்னைப்பொருத்தவரை எல்லா மதங்களில் இருந்தும் நல்லதை (வசதியானதை அல்ல) எடுத்துக்கொள்ள விரும்புகிறவன், மேலும் மதம் மனிதனை கடவுளிடம் கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை இல்லாதவன் நான், என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன், மதத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதி இருப்பதால் நான் இவ்வாறு எழுதினேன்)

பரமஹம்சர் ரமணர் போன்றவர்கள் ஞானிகள், ஓஷோ ஜே.கே போன்றவர்கள் Healers என்று குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மைதான், ஒருவேளை Healer கள்தான் அடுத்த நிலைகளில் ஞானிகளாக மாறுகிறார்கள் என்று நினைக்கிறேன், அது சரியாக இருக்குமா?

அன்புடன்
தவநெறிச்செல்வன்

Jun 17, 2009

சாருவும் நானும்

சாருவின் தளத்தில் வெளிவந்துள்ள எனது தற்போதைய கடிதமும் சாருவின் பதிலும் இந்த தொடர்பில் உள்ளது.


http://www.charuonline.com/June2009/devadhai.html